வெள்ளி, 27 ஏப்ரல், 2012

சுவடியியல் அறிமுகம்

தாயையும் பேசும் மொழியையும் தாய்நாட்டையும் தெய்வமாகப் போற்றுவது தமிழனின் வழக்கமும் கடமையும் ஆகும். 
      "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
       விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்

என்று தமிழ்ப் பணியை நெஞ்சில் நிறுத்தி வாழ்ந்த தமிழர்களால் அவர்களுடைய எண்ணங்களை எழுத்துக்களால் பனையோலைகளில் பதிவு செய்த பதிவுகளே பனையோலைச் சுவடிகள் ஆகும்.  

ஓலையைத் தவிர வேறொரு பயனையும் தராத பனை மரங்களை ஓலைவெட்டுப்பனை என்று அழைத்தனர்.  ஓலை என்ற சொல் பழங்காலத்தில் வெற்று ஓலையை மட்டும் குறிக்காமல் எழுதப்பட்ட ஓலையையும் குறித்தது.  

எழுத பயன்படுத்தும் ஓலையானது  பனைமரத்தில் முதிர்ந்ததாகவும் இல்லாமல் இளவோலையாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் உள்ள ஓலையையே எழுதுவதற்கு உகந்தவாறு தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.  முதிர்ந்த ஓலையை முற்றல் ஓலை, காய்ந்த ஓலை, வற்றல் ஓலை என்றும், இளவோலையைக் குருத்தோலை, பச்சோலை, சாரோலை என்றும், தளிர் ஓலையை ஓலைக்கணாட்டு என்றும் குறிப்பிடுவர்.

எழுதுவதற்கொப்பான இடைப்பட்ட நிலையில் உள்ள ஓலையைத் தேர்ந்தெடுத்தபின் தேவைக்கேற்ப ஓரே அளவாக நறுக்கிக் கொள்வர்.  இவ்வாறு ஓலையை நறுக்கி எடுத்தலை ஓலைவாருதல் என்று கூறுவர்.  ஒத்த அளவாக நறுக்கி எடுத்த ஓலை ஏடு என்பர்.  இவ்வேடு வெள்ளோலை எனப் பெயர் பெறுகிறது. வெள்ளோலைகள் பல இணைசேர்த்தலைச் சுவடி சேர்த்தல் என்பர். 

இடைநரம்பு எனும் ஈர்க்குச்சி நீக்கப்பட்டு, எழுதப்படுவற்குத் தயார்நிலையில் ஒத்த அளவாக நறுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஓலைக்கு ஓலைச்சிறகு என்று பெயர்.     எழுதப்படுவதற்கு முன் இவ்வோலையை வெள்ளோலை என்று குறிப்பிடுவர்.  இடைநரம்பு நீக்கப்படாத ஓலையை ஓலைக்கண், ஓலைச்சட்டம், சட்ட ஏடு என்பர். ஒத்த அளவாக நறுக்காமல் உள்ளதை உள்ளவாறே இடைநரம்பு நீக்கப்பட்ட நீளமான ஓலைச்சிறகுகளில் எழுதி சுருட்டி வைக்கப்பெற்ற ஓலைச்சுவடியைச் ஓலைச்சுருள், சுருணை, செந்திரிக்கம் என்று குறிப்பிடுவர்.  வெள்ளோலையைக் கண்ணால் பார்த்துவிட்டு அவற்றில் எழுதாமல் சென்றவனை அக்காலத்தில் இகழ்ந்திருக்கின்றனர்.  இதனை ஔவையார், 

     "வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை
     கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
     பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
     எற்றாமற் றெற்றோமற் றெற்று"
என்கிறார். இணையான பல ஓலைகளைச் சேர்த்திருப்பது வெள்ளோலைச் சுவடி என்பர்.  இவ்வாறு ஒன்றாகச் சேர்த்த வெள்ளோலைகளில் ஒன்று அல்லது இரண்டு துளைகள் இடுவர்.  அதே அளவு கொண்ட இரண்டு ஓலைச்சட்டங்களிலும் துளைகள் இடுவர்.  ஓலைச்சட்டத்தில் இடப்படும் துளைக்கு ஓலைக்கண் என்று பெயர். இட்டு அத்துளைகளில் வலது துளையின் வழியாக இறுக்கிக் கட்டும் கயிற்றையும் இடது துளையில் நாராசம், சுள்ளாணி அல்லது கம்பை போன்றவற்றை வைத்து கட்டப்பெற்றதே வெள்ளோலைச் சுவடிக்கட்டு ஆகும்.

எழுதுவதற்கு முன் இவ்வாறு முதலில் வெள்ளோலைச் சுவடிக்கட்டைத் தயார்படுத்திக் கொள்வர்.  இவ்வாறான வெள்ளோலைச் சுவடிக் கட்டுகளை அக்காலத்தில் சுவடிக்கடைகளில் விற்பனை செய்துள்ளர்.  வெள்ளோலைச் சுவடிக் கட்டுகளைத் தயாரிப்பதையே சிலர் தொழிலாகவும் கொண்டிருந்தனர்.  ஓலைக்கடை வைத்திருந்த புலவர் ஒருவரை ஓலைக்கடையத்தனார் என்றே அழைத்துள்ளனர்.  வெள்ளோலைகளில் செய்திகளை எழுத்தாணி கொண்டு பதிவு செய்து-சுவடு (அடையாளம்)  ஏற்படுத்தி இருப்பது சுவடி ஆகும். வெள்ளோலையில் எழுதுவதை ஓலைதீட்டுதல் என்பர்.  அக்காலத்தில் எழுதிய புத்தகத்தைச் சுவடி என்றழைத்தனர்.  சுவடு உடையது சுவடி எனக் காரணப்பெயர் பெறுகிறது.  எழுதப்படுதலின் எழுத்து என்பது போல எழுத்துச்சுவடு உடையது சுவடி எனப் பெயர் பெறுகிறது.  வெள்ளோலைகளில் எழுத்துக்கள் பதியுமாறு எழுதப்பெற்ற ஏடு-ஓலைகளின் தொகுப்பே சுவடி எனப் பெயர் பெறுகிறது.  பதிதலால் உண்டாகும் பதிவைச் சுவடு என்று, 

"பூவா ரடிச்சுவடுஎன் தலைமேல் பொறித்தலுமே"   (திருவா.241)

"வெஞ்சினத்து அரியின் திண்காற் சுவட்டொடு விஞ்சை வேந்தர்,   
பஞ்சியங் கமலம் பூத்த பசுஞ்சுவடு உடைத்து மன்னோ" (பாலகாண்டம், 934)
போன்ற இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.  'எழுத்துக்களின் பிறப்பு உணர்த்துதலின் பிறப்பியல் என்றும், மொழிகளைப் புணர்க்கும் முறைமை உணர்த்துதலின் புணரியல் என்றும், உருபுகளோடு பெயர் புணரும் இயல்பு உணர்த்துதலின் உருபியல் என்றும், பெயர் இலக்கணம் உணர்த்துதலின் பெயரியல் என்றும்' தொல்காப்பிய நூற்பாவிற்கு நச்சினார்க்கினர் கூறும் கூற்றுப்படி எது எதை உணர்த்துகிறதோ அது 'இயல்' என்றாகிறது எனலாம்.  அதுபோல், ஓலையில் எழுதப்பெற்ற செய்திகளை ஆய்வதும், அறிவதும், உணர்வதும் உணர்த்துவதும், கற்பதும் கற்பிப்பதும் ஆகிய தொடர் நிகழ்வுகளே சுவடியியல் என்றாகிறது.  

ஓலையில் எழுதப்பெற்ற செய்திகள் அவற்றின் பொருண்மை அடிப்படையில் இலக்கணச்சுவடி, இலக்கியச்சுவடி, மருத்துவச்சுவடி, சோதிடச்சுவடி, மாந்திரீகச்சுவடி, ஆவணச்சுவடி  என்றெல்லாம் பெயர் பெறுகின்றன.

ஓலை தொடர்பான பணிகளைச் செய்வோர் பெயர்களிலும் ஓலை எனும் சொல் பின்னொட்டாக இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.  அரசர் கூறும் செய்திகளை ஓலையில் எழுதுபவர்க்குத் திருமந்திரவோலை என்றும், இவ்வாறு அரசர் கூறும் செய்திகளை எழுதும் கூட்டத்தினர்க்குத் தலைவனாக இருப்பவர்க்குத் திருமந்திரவோலை நாயகம் என்றும், அரசரின் அன்றாட செயல்களைப் பதிவு செய்பவர்க்குப் பட்டோலை என்றும், அரசவைக் கணக்குகளை எழுதுபவர்க்கு ஓலைக்கணக்கர் என்றும், ஊரில் நடைபெறும் நடவடிக்கைகளை அரசவையில் படித்துக் காட்டுபவர்க்கு நீட்டோலை என்றும், ஓலையில் எழுதப்பெற்ற செய்தியைக் கொண்டு செல்வோனுக்கு ஓலையாள் என்றும் பெயர் பெற்றனர்.  நீட்டோலையைப் படித்துக் காட்டாதவன் அக்காலத்தில் பழிக்கு ஆளாகியிருக்கின்றான் என்பதை,
     "சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான்
     குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்"
என்று வாக்குண்டாம் குறிப்பிடுகிறது.




இவ்வாறு சுவடியியல் குறித்த சிறு அறிமுகத்தோடு இன்று தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தொடர்ச்சி வரும் வாரங்களில் தொடரும்...

திங்கள், 23 ஏப்ரல், 2012

தமிழ்ச்சுவடியியல்

தமிழ்ச் சுவடியியல் குறித்து இதுவரை வெளிவந்த செய்திகளையும் என்னுடைய இருபத்தைந்து ஆண்டுக்கால சுவடியியல் அனுபவங்களையும் இவ்வலைப்பதிவில் வெளியிட எண்ணியுள்ளேன்.  
மனிதன் என்று சிந்திக்கத் தொடங்கினானோ அன்றிலிருந்து தன்னுடைய எண்ணங்களை மற்றவர்களுக்குப் பரப்பி, பதிவு செய்யத் தொடங்கினான்.  இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று தமிழின் வளர்நிலையை மூன்றாக்குவர்.  சைகை மொழியில் நாடகத்தமிழ் பிறந்தது, ஒலிப்பு மொழியில் இசைத்தமிழ் வளர்ந்தது, எழுத்து மொழியில் இயற்றமிழ் நின்றது.  சைகையில் பிறந்து நாடகத்தில் வளர்ந்து இயலில் நின்ற தமிழ்மொழி இன்று அறிவியல் தமிழ் மற்றும் கணினித் தமிழ் என ஐந்தமிழாக வலம் வந்துகொண்டிருக்கிறது.
இயற்றமிழாக உருவெடுத்த நாள் தொடங்கி சுவடியியல் கால் பதிக்கத் தொடங்கியது எனலாம். மனிதன் தன்னுடைய எண்ணங்களைத்  தனக்காகவோ பிறருக்காகவோ சிலபல செய்திகளைப் பனையோலை, இலை, மரப்பட்டை, மிருகத்தின் தோல், கல், செம்பு, தாமிரம், வெள்ளி, தங்கம் போன்ற பொருள்களில் பதிவு செய்யத் தொடங்கினான்.  இவற்றில் எளிதில் இடம் பெயர்க்கக் கூடியது பனையோலையே.  எனவே, பனையோலையில் இலக்கியம், இலக்கணம், சோதிடம், மருத்துவம், மாந்திரீகம், வான சாஸ்திரம், ஜாதகம், வீட்டுக்கணக்கு, விளைச்சல் கணக்கு, பத்திரப் பதிவுகள் போன்ற பல்வேறு செய்திகளை எழுதிப் பாதுகாத்தான்.  இவ்வாறு எழுதப்பெற்ற பனையோலைகள் குறைந்தது முந்நூறு முதல் நானூறு ஆண்டுகள் வாழக்கூடியதாக இருக்க, அவற்றைப் படியெடுத்து படியெடுத்து அடுத்த தலைமுறைக்கு நம்மவர்கள் கொண்டு வந்துள்ளனர்.  
இப்பனையோலைகளில் இடம்பெற்றுள்ள பொருண்மைகள், அவற்றின் வகைப்பாடுகள், அவை இருக்குமிடங்கள், அவற்றைப் பாதுகாக்கும் முறைகள், மக்களிடத்தில் அவை குறித்த எண்ணம், தமிழறிஞர்கள் சுவடியியல் மீது கொண்ட பற்றும் மதிப்பும் பதிப்பும், அடுத்த தலைமுறைக்குப் பனையோலைச் செய்திகளைக் கொண்டு செல்லும் உத்திகள் போன்ற பல செய்திகள் குறித்து முறையாக உங்களிடம் உரையாடி உறவாட வருகின்றேன். வாழ்த்துங்கள். குறைகளைச் சுட்டுங்கள் வளர்கிறேன்.