ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

இந்திய காலக்கணிதம் (கி.பி.700-1999)


இந்திய காலக்கணிதம் எனும் நூல் மோ.கோ. கோவைமணி அவர்களால் டிசம்பர் 1997இல் தஞ்சாவூர் பாமொழி பதிப்பகத்தின் வழியாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மறுபதிப்புகள் 1998, 2000இல் வெளிவந்துள்ளது.

இந்நூலின் முதலில் இந்திய ஆண்டுகள் என்னும் தலைப்பில் இந்தியாவில் பெருவழக்காக வழங்கப்பெற்று வரும் கலியுகம், விக்கரம சகம், சாலிவாகன சகாப்தம், திருவள்ளுவராண்டு, கொல்லம், பசலி, சுழற்சி ஆண்டு (வடக்கு மற்றும் தெற்கு) போன்றன ஆய்வு செய்யப்பெற்றுள்ள.  மேலும் இவ்வாண்டுகள் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதையும் ஆங்கில ஆண்டோடு எவ்வாறு கணக்கிடவேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.

      இந்திய காலக்கணிதம் என்னும் பகுதியில் இந்நூல் அமைப்பு விளக்கப்பட்டுள்ளது.  இந்நூல் ஆறு வகையான அட்டவணைகளைக் கொண்டுள்ளது.  இவ்வட்டவணைகளின் தேவையும் பயனும் இப்பகுதியில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.

      காலம் கணக்கிடும் முறைகள் என்னும் பகுதியில் அட்டவணை 6ஐப் பயன்படுத்தி முன் மற்றும் பின் தமிழ்-ஆங்கில மாதங்களைக் கணக்கிடும் முறைகளை எடுத்துக்காட்டுகளுடன் தரப்பட்டுள்ளன. மேலும் இந்திய காலக்குறிப்பிலிருந்து இந்திய காலக்குறிப்பையும் அறிய இப்பகுதியில் வகை செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து நான்கு வகையான நிலைகளும், இந்நான்கு நிலைகளைக் கொண்டு முன் மற்றும் பின் மாதங்களைக் கணக்கிடத் தேவையான கட்டங்கள் நான்கும், இறுதியாக ஆறு வகையான அட்டவணைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இந்நூலுக்குப் பேராசிரியர் முனைவர் சோ.ந. கந்தசாமி அவர்கள் அணிந்துரையும், பேராசிரியர் முனைவர் செ. இராசு அவர்கள் ஆய்வுரையும், வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் K.V. இராமன் அவர்கள் ‘The Hindu’ நாளிதழில் மதிப்புரையும் வழங்கியுள்ளனர்.

பேராசிரியர் முனைவர் சோ.ந.கந்தசாமி அவர்கள் தம்முடைய அணிந்துரையில், "இந்திய காலக்கணிதத்தில் அருஞ்சாதனைகள் நிகழ்த்திய L.D.சாமிக்கண்ணுப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள An Indian Ephemeris என்ற நூல் வரிசையினை அடிப்படையாகக் கொண்டு இந்திய வரலாற்றாசிரியர்கள் பல்வேறு காலப்பகுதிகளில் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சிபுரிந்துள்ள மன்னர்களின் கால வரிசையினை வரையறை செய்து எழுதியிருத்தல் இங்குக் கருதத்தக்கது.  ஓலைச்சுவடி மற்றும் கல்வெட்டிலும் தமிழ் இலக்கியங்களிலும் வரலாற்றுத் துறையிலும் நிறைந்த பயிற்சியும் புலமைத்திறமும் கொண்ட இளம்பேராசிரியர் கோவைமணி அவர்கள் இந்நூலினைத் திறம்பட எழுதியிருத்தல் பாராட்டத்தக்கது.  இந்நூலின் முன்னுரைப் பகுதியில் இந்திய நாட்டில் வழங்கிய பல்வேறு கணித சித்தாந்தங்கள் பற்றிய விளக்கமும், நாள் திங்கள் ஆண்டு முதலியன வடநாட்டிலும் தென்னாட்டிலும் எவ்வாறு கணிக்கப்பெற்றன என்ற விளக்கமும், சாலிவாகன  சகாப்தம், விக்ரம சகாப்தம், திருவள்ளுவராண்டு முதலிய தொடராண்டுகள் பற்றிய தெளிவும் குறிக்கப்பெற்றுள்ளன.  தமிழாண்டுக்கு ஒப்பான ஆங்கில ஆண்டுக் கணிதமும் சுட்டப்பெற்றுள்ளது.  கி.பி.700 முதல் கி.பி.1999  வரையுள்ள  இந்திய - ஆங்கில தொடராண்டுகள் பற்றிய பல்வேறு அட்டவணைகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் இந்நூலாசிரியரால் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றாசிரியர்கள் ஆய்வாளர்கள் யாவர்க்கும் பயன்படும் வகையில் அமைந்த இந்நூல் தமிழறிஞர்களால் ஏற்று போற்றத்தக்கது. திருமிகு.மோ.கோ. கோவைமணி அவர்களின் ஆர்வத்தையும் ஆராய்ச்சித் திறத்தையும் பாராட்டி வாழ்த்துகிறேன்" என்று கூறுகின்றார்.

பேராசிரியர் முனைவர் செ. இராசு அவர்கள், "தமிழகக் காலக்கணக்கீட்டு அறிஞர் எல்.டி. சாமிக்கண்ணுப்பிள்ளை அவர்கள் 'இந்தியக் காலக் கணக்கிட்டுமுறை' - An Indian Ephemeris என்ற  நூலை 1915, 1922ஆம் ஆண்டுகள் கணித்து வெளியிட்டார்கள்.  அவை 8 தொகுதிகளாக மிக விரிந்துள்ளன.   அவைகளைப் பெறுவதும், கையாள்வதும் சிரமமாகவே உள்ளது.  இந்நிலையில் எளிமையான முறையில் காலக்கணக்கீட்டை அறிய ஒரு முறை தேவை என்பது காலத்தின் கட்டாயமாகிறது.   யார் இதனைச் செய்வது? பட்டறிவும், ஆழ்ந்த சிந்தனையும், பொறுமையும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் இம்முயற்சிக்குத் தேவை.

இவை அனைத்தும் ஒருங்கே  கூடிய இளைஞர் ஒருவர் இமாலய முயற்சியாக இந்த அரும்பெரும் செயலை ஆற்றி முடித்துள்ளார். அவர்தான் இந்நூலின் ஆசிரியர் நண்பர் திரு.மோ.கோ. கோவைமணி அவர்கள்.  இந்நூலின் ஒவ்வொரு தொடலிலும், ஒவ்வொரு பக்கத்திலும் கோவைமணி அவர்களின் உழைப்பை - அறிவின் புலப்பாட்டைக் காணுகிறோம்.  எல்.டி. சாமிக்கண்ணுப்பிள்ளை அவர்களின் காலக்கணக்கீட்டுக் கடலில் மூழ்கி முத்தெடுத்தது போல் முத்தான இந்த அறிய நூலைக் கோவைமணி அவர்கள் படைத்தளித்துள்ளார்கள்.  இன்றைய இளைஞர் உலகிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் கோவைமணி அவர்கள் தாம் எடுத்துக்கொண்ட துறையில் துடிப்பும், ஆர்வமும், நுண்ணறிவும் மிக உடையவர்.  பல்துறை ஓலைச்சுவடியியல் ஆய்வுகளுடன் தொகுப்பியல் முயற்சியில் முறைப்படி ஈடுபட்டுத் தாம் கண்டறிந்தனவற்றைச் சிறந்த கட்டுரையாக்கி உரியஇடத்தில் உரிய முறையில் பலரும் பாராட்ட வெளியிடுவதில் அவர் மிக வல்லவர். கோவைமணி அவர்கள் தமக்களித்த பணிகளைச் சிரமம் பாராமல் இன்முகத்துடன் ஆற்றி முடிக்கும் திறன் உடையவர்.  அனைத்து ஆய்வாளர்கட்கும் மிகச் சிறந்த எளிய காலக்கணக்கீட்டுக் கையேடாக இந்நூல் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.  ஆய்வாளர்கள் கோவைமணி அவர்களின் விளக்கமான முன்னுரையைக் கருத்தூன்றிப் படித்து எளிய முறையில் அட்டவணைகளைப் பயன்படுத்தித் தாம் விரும்பிய காலக் கணக்கீட்டை அறியலாம்.

ஆய்வுலகின் சார்பில் இச்சிறந்த நூலை உருவாக்கிய கோவைமணி அவர்களுக்கு என்  மனப்பூர்வமான பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  இதுபோல் பயனுடைய பல நூல்களை உருவாக்கித் தமிழன்னைக்கு மாலையாகச் சூட்டக் கோவைமணி அவர்களை வாழ்த்துகிறேன்" என்று தம்முடைய ஆய்வுரையில் குறித்துள்ளார். 

Chronological systems : In the field of Indian ephemeris, the services of the late L.D. Swamikannupillai are indeed unforgettable.  With his indepth knowledge of astronomy, literature and epigraphy, he wrote his monumental work Indian Ephemeris in eight volumes and they serve as a standard reference work for chronological calculations.

The author of this volume states that his work is a short summary of the famous work, rendered in Tamil for easy reference and reckoning.  In the first chapter, he gives a list of all the eras or chronological systems that were used in India at various times like Kali, Salivahana or Saka,  Vikrama, Kollam, Hijira, Fasli, etc. and explains their basis and corresponding year in the Christian Era.

He explains the 60-year cyclical systems followed in North and South  India and states how the former starts with the year Viyaya, and the latter with Prabhava and due to some gaps in the former, exact correlation between the two poses problems.

He has given a table, a ready reckoner, to correlate the two calendar systems and also the corresponding Chrisitan era from 700 A.D. to 1999 A.D. i.e. 1300 years. The tables show the days, the month and the year according to the different eras and systems followed in India and the corresponding dates in the Christian era.

This would enable us to correlate the different chronological systems and also find their corresponding date, month, year, etc.  The book will be a useful guide  for epigraphists, historians and chronologists" என்று K.V. Raman (The Hindu, 18.8.1998) குறித்துள்ளார்.

"எல்.டி. சாமிக்கண்ணுப்பிள்ளையவர்கள் எழுதிய An Indian Ephemeris எனும் நூலின் அடிப்படையில் தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த நூலில் இந்திய காலக்கணிப்பு முறைகளான கலியுகம், விக்கிரம சகாப்தம், திருவள்ளுவராண்டு, பசலி ஆண்டு மற்றும் கொல்லமாண்டு ஆகியன பற்றிய குறிப்பு தரப்பட்டு அவற்றை ஆங்கில ஆண்டோடு எவ்வாறு கணக்கிடுவது என்பதும் விளக்கப்படுகிறது.  ஒரு காலக்கணிப்பினை மற்ற ஆண்டுகளோடு தொடர்புபடுத்தத் தேவையான அட்டவணைகள் நூலின் பின்பறுதியில் தரப்பட்டுள்ளன.  இந்தியக் காலக் கணக்கீட்டு முறையை சுருக்கமாக அறிமுகம் செய்கிறது இந்நூல்" என்று முனைவர் ந. அதியமான் அவர்கள் (ஆவணம், இதழ், 10, 1999) குறித்துள்ளார்.

"வரலாற்றாசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உதவும் எளிய காலக்கணக்கீட்டுக் கையேடு" என்று தினமணி- நாளிதழ் (மதுரை), 4.6.1998இல் குறிப்பிட்டுள்ளது.

"காலம் என்பது கணித எல்லைகளில் கட்டுப்படுத்த  முடியாத ஒன்று.  ஆயினும் மனித குலத்தின் தொன்மச் சிறப்புகளை அளந்தறியக் காலக்கணித வரைமுறைகள் மிகமிக அவசியம்.  வரலாறு என்றவுடன் காலக்கணிதம் தான் நம் முன் எழுந்து நின்று மருட்டும்.  யுகங்கள் என்றும், சகாப்தங்கள் என்றும் எளிதாகச் சொல்லிவிடலாம்.  ஆனால், துல்லியமாக  எதையும் அறுதியிட்டுக் கூறவியலாது.  ஹீஜ்ர, கொல்லம், பசலி, திருவள்ளுவராண்டு என எத்தனை குறிப்பிட்டாலும் அதற்கு நாம் கி.பி., கி.மு., என்ற அளவு கோள்களையே நாட வேண்டிய நிலை.  இருப்பினும் காலத்தை அளக்கும் சிந்தனை நம்மவர்களுக்கு அறவே இருந்ததில்லை என்று கூறிவிட முடியாது.  தமிழர்கள் கணிதத் துறையில் வல்லவர்களாகத் திகழ்ந்தமைக்கு தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் சான்று பகர்கின்றன.  அந்த வகையில் காலக்கணிதம் பற்றிய விளக்கநூல் தமிழில் ஏதுமில்லை என்ற குறையைப் போக்க எழுதப்பட்டுள்ள சிறந்த நூல்தான் இது.  இதன் ஆசிரியர் தஞ்சை தமிழ்ப் பல்கலையின் ஓலைச்சுவடித்துறையில் ஆய்வாளராகப் பணிபுரிபவர்.  ஆழ்ந்த புலமையோடு இந்த நூலை எழுதியுள்ளார்.  தமிழ் ஆண்டுகளுக்கு ஒப்பான  ஆங்கில ஆண்டுக்கணக்கும், பல்வேறு அட்டவணைகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் தெளிவாக உள்ளன.  வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயன்படும் நூல் இது" என்று கௌதம நீலாம்பரன் (தினமலர், திருச்சி, 10.02.1999) அவர்கள் குறித்துள்ளார்.