வியாழன், 23 ஜனவரி, 2014

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார்

அருணாசலம் பிள்ளை என்கிற தேவசகாயத்திற்கும் ஞானப்பூவிற்கும் 07.09.1774இல் திருநெல்வேலியில் வேதநாயக சாஸ்திரியார் மகனாகப் பிறந்தார்.  1794இல் தரங்கம்பாடியில் அருட்தந்தை சுவார்ட்சு அவர்கள் தொடங்கிய பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.  சிறந்த கவிஞர், கிறித்துவ போதனை நூல்கள் பலவற்றை அரங்கேற்றியவர்.   தஞ்சை இரண்டாம் சரபோஜிக்கு இவர் நெருங்கிய நண்பராக விளங்கினார்.  சரபோஜி மன்னர் இவருக்கு ஆண்டு தோறும் 50 வராகன் கொடுத்துள்ளார்.  சரபோஜியின் அரண்மனைக்கு இவர் வந்து செல்ல தனியாக பல்லக்கு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.  தாம் இறந்தால் கவிஞர் வேதநாயகம் சாத்திரியார் வந்து பாடல் பாடிய பின்புதான் தம் சடலத்தை அரண்மனையிலிருந்து எடுக்க வேண்டும் என்று சரபோஜி மன்னர் சொல்ல அவ்வாறே அவர் இறந்த காலத்து சாஸ்திரியார் நேரில் வந்து பாடல் பாடியவர்.

அண்ணாவியார், ஞானதீபக் கவிராயர், சுவிசேடக் கவிராயர் போன்ற பட்டங்களைப் பெற்றவர்.

பெத்லகேம் குறவஞ்சி, சென்னைப் பட்டினப் பிரவேசம், ஆரணாதிந்தம், சாத்திரக்கும்மி, ஞான அந்தாதி, ஞான உலா, ஞான ஏற்றப்பாட்டு, ஞானபதக் கீர்த்தனைகள், தோத்திரப்பாடல்கள், பராபரமாலை,  பாலசரித்திரம், பேரின்பக் காதல், வண்ண சமுத்திரம், சாத்திரக்கும்மி, ஞானதச்சன் நாடகம், ஞான நொண்டி நாடகம், சுவிசேட நாடகம் போன்ற இயல் இசை நாடக நூல்களை யாத்த பெருமைக்குரியவர்.

தொண்ணூறு ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து இறைத்தொண்டாற்றிய இவர் 24.01.1864இல் மறைந்தர்.  இவரின் 150ஆம் நினைவுநாள் 24.01.2014இல் வருகிறது.  இந்நினைவு நாளைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் மறைந்த பெரியவர்களின் பிறந்த மற்றும் நினைவு நாளில் கருத்தரங்கு, சொற்பொழிவு நடத்தும் என்னத்தில் 24.01.2014இல் தஞ்சாவூர் சி.நா.மீ. அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் காசி குமரகுருபரர் மாநாட்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவரின் தொண்டினைப் போற்றும் வகையில் இவரது இந்த 150ஆம் நினைவு ஆண்டில் சிறப்பாக ஒரு மாநாடு  நடத்தி தமிழுலகம் இவருக்குப் பாராட்டுச் செய்தல் வேண்டும் என்ற எண்ணத்தை இதன் வாயிலாக வெளிப்படுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக