ஞாயிறு, 20 அக்டோபர், 2024

குமரகுருபரரின் நூல்கள்

 


          குமரகுருபரர் இயற்றிய நூல்கள் பதினொன்று எனக் கூறுவர்.  எனினும் மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை, மீனாட்சியம்மை குறம், தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை என்னும் நூல்களும் அவர் அருளியனவே என எண்ணுதற்கு இடமுண்டு.  "பதினாறு கலைகளையுடைய முழுமதிபோல் அவர் நூட்கோவை விளங்குகிறது" (குமரகுருபரர் அடிகள் வரலாறும்           நூலாராய்ச்சியும், ப.21) எனக் கா. சுப்பிரமணியபிள்ளை குறிப்பிடுவதால் இவர் இயற்றிய நூல்கள் பதினாறு என்று தெரிகிறது.  உ.வே. சாமிநாதையர் பதின்மூன்று நூல்களையே அடிகள் அருளியதாகக் குறிப்பிடுகின்றார் (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, முகவுரை, ப.2). இப்பதின்மூன்று நூல்களில் கயிலைக் கலம்பகமும், காசித் துண்டி விநாயகர் பதிகமும் கிடைக்கவில்லை.  எஞ்சிய பதினொன்று மட்டுமே முழுமையாகக் கிடைத்திருப்பவை ஆகும்.  அடிகள் அருளிய நூல்களின் எண்ணிக்கை பற்றிச் சிறப்புப் பாயிரம்,

          "கலிவெண்பாவெறும் ஒலிபெறும் அலங்கல்அக்

          குகன் திருமுடி தனக்கு உகந்திடச் சூட்டி

          பிள்ளைக் கவி முதல் வெள்ளைக் கிழத்தி

          மாலை யீறாகச் சாம்பமை பிரபந்தம்

          முந்நான் கியற்றித் தனக்குச் சமய

          நிலையையுங் காட்டி யுலைவிலாதியாரும்

          தீதெலா மொருவி நீதியே புரிய

          நீதிநெறி விளக்கமென்று ஏதமில் பனுவலும் இயற்றினர்"

(குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, முகவுரை, ப.11)

எனக் குறிப்பிடுகிறது.

ஞானகுருவும் அருள்வாக்கும்

          சிவஞான உபதேசம் பெறவேண்டுமென்ற கருத்து குமரகுருபரருக்கு வரவே தமக்குரிய ஞானாசிரியரைத் தேடி வரும் வேளையில் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்தில் நான்காம் பட்டத்தில் குருமூர்த்தியாக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகர் சிவஞானச் செல்வராக இருப்பதை அறிந்து அவரை ஞானாசிரியராகப் பெற்றார்.  பின் தமக்குத் துறவு நிலையருள வேண்டினார்.  அங்ஙனம் செய்தற்கு முன் தலயாத்திரை செய்து வரும்படி பணித்தல் அவ்வாதீன மரபாதலின் அப்பெரியார் காசி யாத்திரை செய்து வரும்படி கட்டளையிட்டனர்.  காசிக்குச் சென்று வருவதில் நெடுங்காலம் செல்லுமே என்று கூறிய குமரகுருபரரை நோக்கிச் சில காலம் சிதம்பர வாசமேனும் செய்யும்படிப் பணித்தனர்.

          ஞானாசிரியர் கட்டளைப்படியே சிதம்பரம் செல்லும் வழியில் வைத்தீசுவரன் கோயிலில் தங்கித் தரிசனம் செய்து கொண்டு அங்கே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி மீது பிள்ளைத்தமிழ் இயற்றினார்.  பின்பு சிதம்பரம் சென்று சில காலம் தங்கியிருந்தனர். அக்காலத்தில் 'சிதம்பர மும்மணிக்கோவை' என்னும் பிரபந்தம் இவரால் இயற்றப்பட்டது.

          சிவநேசகர்களும் தமிழறிவுடையவர்களும் ஆகிய சில அன்பர்கள் யாப்பருங்கலக்காரிகையில் காணப்படும் உதாரணச் செய்யுட்கள் பெரும்பாலும் சமண சமயச் சார்பு உடையனவாய் இருத்தலின் அதற்கு உதாரணமாக நடராசப் பெருமான் விசயமான செய்யுட்களை இயற்றித் தரவேண்டுமெனக் கூறச், 'சிதம்பரச் செய்யுட்கோவை' எனும் நூலினை அருளினார்.

          சிதம்பரத்தில் இங்ஙனம் வாழ்ந்து வந்த குமரகுருபரர் தம் ஞானதேசிகர்பால் சென்று தம் வேட்கையை மீண்டும் விண்ணப்பிக்க, அவர் தம் பரிபக்குவத்தையறிந்து துறவு நிலை யருளினார்.  அப்பொழுது ஞானதேசிகர் மீது பண்டார மும்மணிக்கோவை என்ற பிரபந்தத்தை இயற்றினார்.

காசி வாழ்வும் கலைமகள் அருளும்

          அடிகளார் ஞானதேசிகரிடம் விடைபெற்றுக் கொண்டு காசிக்குச் சென்று தம்முடைய கல்வியறிவினாலும், தவப் பண்பினாலும் டில்லி பாதுஷாவின் உள்ளத்தைக் கவர்ந்தார்.  அப்பாதுஷாவின் தாய்மொழியாகிய ஹிந்துஸ்தானியை விரைவில் அறிந்துகொள்ள கலைமகளை நோக்கிச் சகலகலாவல்லி மாலை என்னும் நூலினை அருளினார். 

கலைவாணியின் அருளால் சிறந்த அறிவு பெற்றுப் பாதுஷாவிடம் பேசிப் பழகினார்.  இவர்பால் கொண்ட அன்பினால் பாதுஷா காசியில் மடம் அமைக்க இடம் தந்து உதவினார். அதுவரை மறைபட்டிருந்த ஸ்ரீவிசுவலிங்கப் பெருமானை வெளிப்படுத்தி அங்கே கோயில் முதலியன நிறுவி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தார்.

          அடிகளார் காசியில் வாழும் காலத்துப் படைக்கப்பட்ட பிற நூல்கள் காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக் கலம்பகமும் ஆகும்.  குமரகுருபரர் பின்னும் ஒருமுறை தருமபுரம் வந்து ஞானாசிரியரைத் தரிசித்து மீண்டும் காசிக்குச் சென்று வாழ்ந்து விளங்கியிருந்து வைகாசித் திங்கள் கிருட்டினபட்ச திதியில் இறைவனடி அமைந்தார்.

நூல்கள்

          இக்கருத்திற்கேற்ப உ.வே. சாமிநாதையர் பதிப்பில் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சிதம்பரச் செய்யுட்கோவை, பண்டார மும்மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை, மதுரை மீனாட்சியம்மை குறம், தில்லை சிவகாமியம்மை இரட்டைமணிமாலை ஆகிய பதினான்கு நூல்கள் இடம்பெற்றுள்ளன. அடிகள் சிற்றிலக்கிய நோக்கிலே பல நூல்களையும் இயற்றியுள்ளது, அவர்தம் கால இலக்கிய வகைக்குச் சான்றாகும்.  சிவபெருமான் மீது ஐந்து நூல்களும், உமையம்மை மீது நான்கு நூல்களும், முருகன் மீது இரண்டு நூல்களும், கலைமகள் மீதும் ஞானகுரு மீதும் முறையே ஒரு நூலும், நீதிக்கருத்து இயைய ஒரு நூலும் இயற்றியுள்ளார்.

1.      கந்தர் கலிவெண்பா

          இந்நூல் குமரகுருபரர் அருளிய முதல் நூல் ஆகும்.  122 கண்ணிகளை உடையது.  கலிவெண்பா யாப்பில் அமைந்தது.  சைவ சித்தாந்தக் கருத்துக்களை முன்னர்க் கூறி முருகனுடைய தோற்றம், அருட்செயல்களை அடுத்து வைத்த அடிகள் தமது வேண்டுகோளை இறுதியில் அமைத்துப் பாடியுள்ளார்.

          இந்நூல் தோத்திர நூலாகவும், சாத்திர நூலாகவும் திகழ்கிறது.  பழுத்த தமிழ்ப் புலமையும், ஒழுக்கமும் பெறுதற் பொருட்டுச் சைவர்கள் பலராலும் தினந்தோறும் பாராயணம் செய்யப்பட்டு வரும் சிறப்புடையது.  இந்நூலில் கந்தபுராணக் கருத்துக்கள் ஆங்காங்குக் கூறப்பட்டுள்ளன.

2.      மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

          இந்நூல் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.  இது பெண்பாற் பிள்ளைத்தமிழைச் சார்ந்தது.  இதன் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் எடுத்துரைக்கின்றன. 

காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்ற ஏழும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் இரண்டுக்கும் பொதுவானவை.  சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய மூன்றும் ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும், கழங்கு, அம்மானை, ஊசல் ஆகிய மூன்றும் பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கும் இறுதியில் அமைக்கப்படுவன.  ஆசிரிய விருத்தப் பாவால் பாடப்பெறும் குழந்தையின் மூன்றாம் திங்கள் தொடங்கி இருபத் தொன்றாம் திங்கள் வரை, இரண்டு திங்களுக்கு ஒன்றாக ஒவ்வொரு பருவத்தையும் அமைத்துப் பத்துப் பருவங்களால் பாடப்படுவதாகும்.

          அடிகளின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் மேற்கூறிய இலக்கண அமைதிகள் அழகுற அமைந்துள்ளன.  கடவுள் வாழ்த்து ஒன்றும், காப்புப் பருவத்தில் பதினொன்றும், ஏனைய ஒன்பது பருவங்களில் பப்பத்து வீதம் தொண்ணூறுமாக 102 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இந்நூலுக்குச் சிறப்பான இடமுண்டு. மீனாட்சியம்மையைக் குழந்தை யாகப் பாவித்து அன்போடும் பக்தியோடும் ஒப்பில்லாத மகிழ் வோடும் குமரகுருபரர் பாடிப் போற்றுகிறார்.  அடிகள் துறவறத்தை மேற்கொண்டிருப்பினும் இல்லற இன்பமான குழந்தைப் பருவ அனுபவங்களை அழகுற எடுத்தியம்புகிறார்.  இவற்றால் இந்நூலின் சிறப்பு தெரிய வருகிறது.

3.      மதுரைக் கலம்பகம்

          இந்நூல் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும்.  இது கலம்பக அமைப்பில் பாடப்பெற்றுள்ளது.  இந்நூல் மதுரைச் சொக்கநாதப் பெருமான் மீது பாடப்பெற்றது.  கலம்பகம் என்னும் சொல்லுக்குக் கலவை என்பது பொருள். 

'பல்பூமிடைந்த படலைக் கண்ணி'

(பெரும்பாணாற்றுப்படை, அடி.174)

எனவரும் பெரும்பாணாற்றுப்படை தொடருக்கு, உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பல பூக்கள் நெருங்கிய கலம்பகம் ஆகிய மாலை என உரை செய்துள்ளார் என உ.வே.சா. குறிப்பிடுகின்றார் (பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், ப.228).  எனவே, பல்வேறு வகைப்பட்ட நிறமும், மனமும், வடிவமும் உடைய பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை, கலம்பகம் எனப் பெயர் பெறும்.  இங்ஙனம் பலவகைப்பட்ட பாக்களும், இனங்களும், உறுப்புகளும் விரவி வரும் கவிதைத் தொகுதி கலம்பகம் எனப் பெயர் பெற்றிருத்தல் வேண்டும்.

          புயவகுப்பு, தவம், வண்டுவிடுதூது, அம்மானை, பாண், மதங்கியர், கைக்கிளை, சிந்து, ஊசல், கவி, மடக்கு, ஊர், மரம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், மேகவிடுதூது என்னும் பதினெட்டு உறுப்புகளை அமைத்துப் பாடுவது கலம்பகமாகும் என்று வெண்பாப்பாட்டியல் செய்யுளியலில் உள்ள16ஆவது பாடல் எடுத்துரைக்கிறது.  இக்கலம்பக உறுப்புகளில் பல்வேறு பாட்டியல் நூல்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகிறது.  இந்நூல் விநாயகர் காப்புப் பாடலுடன் 103 பாடல்களைக் கொண்டது.

4.      நீதிநெறி விளக்கம்

          அடிகள் மதுரையில் தங்கியிருந்த காலத்துத் திருமலை நாயக்க மன்னன் ஒருநாள் உணவு கொள்ளக் காலந் தாழ்ந்தமை கண்டு,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது"

(திருக்குறள், ப.377)

என்ற குறளை அடிகள் கூறினார்.  அக்குறளின் பொருள் கேட்டு வியந்த மன்னன், திருக்குறட் கருத்துக்களை எளிதாகவும், சுருக்கமாகவும் பாடி அருளுமாறு வேண்டிக் கொள்ள நீதிநெறி விளக்கம் எனும் இந்நூல் அடிகளால் பாடப்பட்டது என்பர் (குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு, பா.21). 

காப்புச் செய்யுளில் நிலையாமையை உணர்த்தும் எம்பிரான் மன்றினை வழுத்தாதது என்னே? என்று கூறுவதை நடராசர் துதி என்று கொண்டு இந்நூல் சிதம்பரத்தில் இயற்றப் பட்டிருத்தல் வேண்டும் என்று தோன்றுவதாக உ.வே.சாமிநாதையர் கருதுகின்றார் (குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு, பா.14).

இக்கருத்திற்கேற்ப இந்நூலின் காப்புச் செய்யுள் அடிகளின் சிதம்பரச்செய்யுட் கோவையிலும்,

கூற்றங் குமைத்த குரைகழற்கால் கும்பிட்டுத்

தோற்றம் துடைத்தேர் துடைத்தேமாற் - சீற்றஞ்செய்

ஏற்றினான் றில்லை யிடத்தினா னென்னினியாம்

போற்றினா னல்கும் பொருள்

(சிதம்பரச் செய்யுட்கோவை, பா.8)

என்று காணப்படுகிறது.

          எனினும் திருமலை மன்னனால் சிறப்பிக்கப்பெற்றவராதலால் அவன் வேண்ட மதுரையில் பாடியிருப்பதாகக் கொள்வதே ஏற்றது.  இலக்கியம் இயற்றவல்ல புலவர்கள் நீதி நூலும் இயற்ற விரும்புதல் அந்தக் காலத்து வழக்கமாக இருந்தது போல் தெரிகிறது.  எனவே தான் குமரகுருபரர் ஒரு நீதி நூலும், சிவப்பிரகாசர் மற்றொரு நீதிநூலும் இயற்றினார்கள் என்று மு. வரதராசனார் குறிப்பிடுகிறார் (தமிழ் இலக்கிய வரலாறு, ப.194).

          இந்நூல் காப்பு உட்பட 102 வெண்பாக்களைக் கொண்டது.  நீதிக் கருத்துக்களைக் கூறினும் இலக்கிய இன்பத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.   கல்வி, செல்வம், அரசுநிலை, காமத்தின் இழிவு, நிலையாமை, உலகியல் ஒழுக்கம், துறவறம் முதலிய கருத்துக்கள் பற்றி அடிகள் எடுத்துரைத்துள்ளார்.

5.      திருவாரூர் நான்மணிமாலை

          இந்நூல் திருவாரூர் தியாகராசப் பெருமான் மீது பாடப் பெற்றது.  வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் ஆகிய பாக்களில் 40 பாடல்கள் அமைவது நான்மணிமாலை ஆகும் என்று வெண்பாப் பாட்டியல் செய்யுளியல் 16ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.

இந்நூல் நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், நேரிசை ஆசிரியப்பா என்ற முறையில் 40 பாடல்கள் அந்தாதியாக அமைய இயற்றப்பட்டதாகும்.  விநாயகர் காப்புடன் 41 பாடல்கள் உள்ளன.  திருவாரூரின் அழகும், கமலாலயமும் தியாகேசரின் அற்புதச் செயல்களும் கற்பனை வளத்துடன் பாடப்பட்டுள்ளன.

6.      முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

          இந்நூல் வைத்தீஸ்வரன் கோயிலில் அமைந்த முருகப் பெருமானைப் பற்றிய ஆண்பாற் பிள்ளைத்தமிழாகும்.  முற்கூறிய பிள்ளைத்தமிழ் இலக்கணங்களுக்கேற்ப முதல் ஏழு பருவங்களும் அமைந்து இறுதியில் சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்ற மூன்றும் இணைய ஆண்பாற் பிள்ளைத்தமிழாகப் பாடப்பட்டுள்ளது.  முருகனைச் சிறு குழந்தையாக்கி அவர்தம் அற்புதச் செயல்களை அழகுபடப் புனைந்துள்ளார்.

முருகனது சிறப்புகளையும் வைத்தீஸ்வரன் கோயில் வருணனையும் விரிவாகப் பாடியுள்ளார்.  இந்நூலிற்கு முத்தையன் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் சேனாபதி பெருமான் பிள்ளைத்தமிழ், புள்ளிருக்கு வேளூர் குமார தேவன் பிள்ளைக்கவி என்னும் பெயர்களும் ஏட்டுப் பிரதிகளில் காணப்படுகின்றன (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.289).

7.      சிதம்பர மும்மணிக்கோவை

          புருடராகம், வைடூரியம், கோமேதகம் என்னும் மூன்று மணிகள் மிடைந்த கோவையைப் போல மூன்று வேறு செய்யுட்களால் அந்தாதித் தொடையமைப்பில் பாடப்படுவது இப்பிரபந்தம் ஆகும் (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.378).  விநாயகர் காப்புடன் இதில் 31 பாடல்கள் உள்ளன. 

மும்மணிக்கோவை இலக்கியத்திற்கு இயைய நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய பாக்களில் அந்தாதியாக 30 பாடல்கள் இந்நூலில் அமைந்துள்ளன. 

இந்நூலைத் (தில்லை சிற்றம்பலவன் மும்மணிக்கோவை) என்றவாறு அடிகள் குறித்துள்ளார் (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.378). தில்லை இறைவனைப் பாட்டுடைத் தலைவனாக அமைத்துப் பாடப்பட்ட நூல்.

8.      சிதம்பரச் செய்யுட்கோவை

சிதம்பரச் செய்யுட்கோவை பல்வகை யாப்பினால் ஆகிய 84 செய்யுட்களைக் கொண்ட கோவை நூல். யாப்பருங்கலக் காரிகையின் செய்யுளியலின் அமைப்பிற்கேற்ப அதனை அடியொற்றிய மேற்கோள் பாடல்களாக யாக்கப்பட்டிருக்கின்றன.  இந்நூல் யாப்பிலக்கணமாகவும் சைவக் கடவுளான சிவனைப் பற்றியதாகவும் அமைத்து இயற்றப்பட்டுள்ளது.  ஒவ்வொரு செய்யுளுக்கும் யாப்பிலக்கணக் குறிப்புக்கள் அடிகளா லேயே எழுதப் பெற்றுள்ளன. 

அடிகளின் இறையனுபவமும், வழி காட்டும் மொழிகளும் விளங்குகிறது.  யாப்பிலக்கணத்திற்கும், இறைச் சிறப்பிற்கும் ஏற்ற வகையில் இருவகை நற்பயன் விளைவித்தல் தனிச் சிறப்பாகும்.  மேலும் இலக்கணத்திற்கு இலக்கியமாகவும் திகழ்கிறது.

9.      பண்டார மும்மணிக்கோவை

          மும்மணிக்கோவையின் இலக்கணத்திற்கு ஏற்ப நேரிசை ஆசிரியப்பா, நேரிசை வெண்பா, கட்டளைக்கலித்துறை என்ற முறையில் அந்தாதியாக அமைந்து 30 பாடல்களைக் கொண்டதாக விளங்குகிறது.  இந்நூலின் முதற்கண் விநாயகர் காப்புப் பாடல் ஒன்றும், இறுதியில் நூற்சிறப்பும் அடிகளின் அடக்கமும் கூறும் முறையில் அமைந்த பாடல்கள் நான்கும் இடம்பெற்றுள்ளன.  சில பழைய பதிப்புகளில் மேலும் இரு பாடல்கள் மாசிலாமணி தேசிகரின் சிறப்பினைக் கூறும் முறையில் அமைந்து இந்நூலின் இறுதியில் சேர்த்துப் பதிப்பித்துள்ளார் (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.450). 

திருமயிலை சுப்பராய ஞானியாரால் பதிப்பிக்கப்பெற்ற பண்டார மும்மணிக்கோவையில் மேலும் ஒரு பாடல் காணப்படுகிறது.  இதனை உ.வே. சாமிநாதையர் தனிச் செய்யுட்களில் சேர்த்துள்ளார் (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.8). 

இவை அனைத்தையும் சேர்க்க இந்நூலிடத்து நூற்கருத்தோடு பெரிதும் தொடர்புடைய வகையில் மற்ற ஏழு பாடல்களும் அமைந்துள்ளன.

          தருமையாதீன நான்காம் பட்டத்திற்குரிய மாசிலாமணி தேசிகர்பால் அடிகள் ஞானோபதேசம் பெற்று, அவர் மீது இந்நூலைப் பாடியுள்ளார். 

இந்நூல் சிறந்த குருவணக்கப் பாமாலையாய்த் திகழ்கிறது. அடிகள் தமக்கு உபதேசித்த குருவின் சிறப்பையும், சிவனே குருவாக வந்துள்ளமையையும் தெளிவாக உணர்த்துகிறார்.  தமக்கு அருளியமையையும், குருவிற்குரிய தருமை, கயிலை, மதுரை ஆகிய தலங்களின் வளத்தையும் இடையிடையே காட்டியும், சித்தாந்தக் கருத்துக்கள் விளங்க அமைத்தும் இந்நூலைப் பாடியுள்ளார்.  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக மூர்த்திகள் ஆதீன மகாசந்நிதான குருமூர்த்திகளாதலால் அவர்கட்குப் பொதுவாக வழங்கும் பெயரால் இந்நூல் "பண்டார மும்மணிக்கோவையெனப் பெயர் பெறுவதாயிற்று" (தருமபுர ஆதீனம் பத்தாண்டு ஆட்சி மலர், ப.160) என்று ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார்.

10.    காசிக்கலம்பகம்

          விநாயகர் காப்புடன் 101 பாடல்கள் பெற்றுள்ள காசிக் கலம்பகம் கலம்பக இலக்கண முறையை ஒட்டிக் காசியில் உள்ள விசுவநாதர் மீது பாடப்பட்டதாகும்.

இந்நூல் இறைக்கருணை யையும், முதன்மையையும், காசிப் பதியின் சிறப்பையும் எடுத்து இயம்புகிறது.  சைவசித்தாந்தக் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன. 

கொச்சகக் கலிப்பா 1ம், நேரிசை வெண்பா 14ம், கலித்துறை 27ம், மருட்பா ஒன்றும், ஆசிரியப்பா 3ம், கலிப்பா 13ம், ஆசிரிய விருத்தம் 35ம், கலிவிருத்தம் 3ம், கலித்தாழிசை 2ம், வஞ்சி விருத்தம் 1ம், வஞ்சித் துறை ஒன்றும் அமைந்துள்ளன. இருபது கலம்பக உறுப்புகள் இடம் பெற்றுள்ளன. அவ்வுறுப்புகளால் 26 பாடல்களும், அகப்பொருள் மரபில் 39 பாடல்களும், இறைவனைப் பற்றி அமைந்த புறப்பொருள் மரபில் 36 பாடல்களும் இடம்பெற்று உள்ளன. 

அடிகள் அருளிய மதுரைக் கலம்பகத்தோடு ஒப்பு நோக்கும்போது தவம், காலம், இரங்கல், மடல், வலைச்சியார், இடச்சியார், கிள்ளைவிடுதூது, கார் ஆகிய உறுப்புகள் காசிக் கலம்பகத்தில் இடம்பெறவில்லை.  பாங்கி விடுதூது என்னும் உறுப்பு மதுரைக் கலம்பகத்தில் இடம்பெறவில்லை.  ஆனால் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

11.    சகலகலாவல்லி மாலை

          கலைமகள் மீது பாடப்பட்டுள்ள இந்நூல் சகலகலாவல்லி மாலை என்றும் சரசுவதி தோத்திரம் (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.581) என்றும், வெள்ளைக் கிழத்தி மாலை (குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு, ப.11) என்றும் வழங்கப்படுகிறது.  பத்து கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் இயற்றப்பட்டுள்ளது. கலைமகள் சிறப்பினை உரைத்துத் தமக்கு அருளுமாறு வேண்டும் முறையில் இந்நூலை அமைத்துள்ளார். 

இதுபோன்று எளிய நடையிலுள்ள சரசுவதி தோத்திரம் வேறு இன்மையின் இந்நூல் மிகவும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.  மண்ணாளும் அரசரையும் தன் பண்ணால் பணியச் செய்ய கலைவாணியை நோக்கி,

          "விண்கண்ட தெய்வம் பல்கோடியன்

                    பேனும் விளம்பிலுன் போற்

          கண்கண்ட தெய்வம் உளதோ

                    சகலகலா வல்லியே"

(சகலகலாவல்லிமாலை, பா.10)

என்று வேண்டுகிறார்.

12.    மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை

          வெண்பாவும், கலித்துறையுமாக இருபது பாடல்கள் அந்தாதி அமைத்துப் பாடுவது இரட்டைமணிமாலை எனப்படும் என்று பன்னிரு பாட்டியல் 151ஆம் நூற்பா எடுத்துரைக்கிறது. 

பவளமும் முத்தும் ஆகிய இருவேறு மணிகள் மிடைந்த மாலை போல் அமைந்துள்ளது.  இந்நூலும் இருபது பாடல்கள் அமைய அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது.  அடிகள் மீனாட்சியம்மை தன் மனத்து உறைவதைப் பலவிடத்தும் குறிக்கின்றார்.  பிற நூல்களில் காணும் சொல்லாட்சி, கருத்து, கற்பனை முதலியன இந்நூலிலும் இழையோடி உள்ளன.

13.    மதுரை மீனாட்சியம்மை குறம்

          இந்நூலும் மதுரை மீனாட்சியம்மையின் மீது பாடப்பெற்றதாகும்.

          "இறப்பு நிகழ்வெதிர் வென்று முக்காலமுந்

          திறம்பட வுரைப்பது குறத்திப் பாட்டே"

(பன்னிரு பாட்டியல், நூ.216)

என்ற இலக்கணத்திற் கேற்பக் குறத்தி, குறிசொல்வதாக அமைந்தது.  இந்நூலில் மதுரை இறைவனிடத்து காமுற்ற தலைவி ஒருத்தியிடம் குறத்தி குறி கூறும் முறையில் மீனாட்சியம்மையின் பெயரும், புகழும் பேசப்படுகின்றன. 

குறத்தியின் பொதியமலைச் சிறப்பும், அவனது வரலாறும், குறிச் சிறப்பும் விரிவாக இடம்பெற்றுள்ளன.  அம்மைக் குரிய தசாங்கம் கூறி வாழ்த்தும் முறையில் நூல் முடிவுறும்.

          விநாயகர் காப்புப் பாடல் ஒன்றும், குறத்தி கூற்றாக 51 பாடல்களும் ஆக 52 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.  இவற்றுள் 29 பாடல்கள் சிந்து என்னும் இசைப்பாடல்களாக இருத்தல் குறிக்கத்தகும்.

'வருங்காலம், நிகழ்காலம், கழிகாலம் என்ற மூன்றையும் ஒக்க வகுத்துப் பார்த்துத் தருகாலம் தெரிந்து உரைப்பது எளிதேயன்றி அரிதன்று.  எங்கள் குறச்சாதிக்கு என்று குறத்தி கூறுவது குறம் என்ற பிரபந்தத்திற்குப் பொருந்துவதாய் உள்ளது.  அப்பாடல் பின்வருமாறு அமையக் காணலாம்.

ஒருகாலங் கஞ்சியுமென் குஞ்சுதலைக் கெண்ணெயுமோ

டுறுப்பு மீந்தார்

பொருகால வேற்கண்ணாய் மனத்துநீ நினைத்தவெல்லாம்

புகல்வன் கண்டாய்

வருகால நிகழ்காலங் கழிகால மூன்றுமொக்க

வகுத்துப் பார்த்துத்

தருகாலம் தெரிந்துரைப்ப தெளிதரிதன் றெங்கள்குறச்

சாதிக் கம்மே.

(மீனாட்சியம்மை குறம், பா.24)

14.    தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை

          இந்நூல் தில்லையில் கோயில் கொண்டுள்ள சிவகாமியம்மை மீது பாடப்பெற்றதாகும். இந்நூல் நேரிசை வெண்பாவும், கட்டளைக் கலித்துறையுமாக அந்தாதித் தொடையில் இருபது பாடல்கள் அமைத்துப் பாடப்பட்டு உள்ளது. தில்லை இறைவனுடைய பெருமையினும், இறைவியின் பெருமை பெரிதென்பது இந்நூலில் குறிக்கப்படுகிறது.

          இவ்வாறுகுமரகுருபரர் நூல்கள் பற்றியும் அந்நூல்களின் அமைப்பு முறைகள் பற்றியும் அறியமுடிகிறது.

 

 

 

 

 

 

 

 

சீவேந்திரர் சரிதம்

 


தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி என்னும் காவியத்தை அடியொற்றிச் சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய அம்மானைக் கதைப்பாடல் சுவடி ‘சீவேந்திரர் சரிதம்’ என்ற பெயரில் கிடைக்கப்பெற்று, ஓலைச்சுவடித்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டு, 1985ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாக வந்துள்ளது.  இச்சுவடிப் பதிப்பினை ஆராயுமுகமாக இக்கட்டுரை அமைகிறது.

சீவகன் சரிதம்

காவியத் தலைவனாகிய சீவகனின் சரிதம் பற்றி வடமொழியில் க்ஷத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஜீவந்தர நாடகம், ஜீவந்தர சம்பு என நான்கு நூல்கள் உள்ளன.  இவற்றுள், க்ஷத்திர சூடாமணியை மூலமாகக் கொண்டு தமிழில் சீவக சிந்தாமணி இயற்றப்பட்டுள்ளது.

மஹாபுராணத்தின் ஒரு பாகத்திலும், ஸ்ரீபுராணத்திலும் சீவகனுடைய வரலாறு கூறப்படுகிறது.

கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் போன்ற பெருங்கவிகளுக்கு வழிகாட்டியாக விளங்கும் திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி என்னும் பெருநூல் சமண சமயத்தவரால் பூசித்துப் பாராயணம் செய்யப்பெற்றுவரும் தெய்வீகச் சிறப்புடையதாகும்.

அம்மானைப் பாடல்கள்

17,18ஆம் நூற்றாண்டுகளில் அம்மானைக் கதைப்பாடல்கள் மிகுதியாகத் தோன்றியுள்ளன.

அம்மானை’ என்பது மகளிரை விளிக்கும் சொல்.  ‘அம்மானை’ என்பது தாய் என்னும் பொருள் தருவது.  இச்சொல் ஈறு திரிந்து அம்மானாய், அம்மானே, அம்மானார் எனப் பாடல்களில் பயின்று வரக் காண்கிறோம்.

பொதுவாக, இராமாயண, பாரத இதிகாசங்களிலுள்ள கதைப்பகுதிகள், புராணக் கதைகள், வரலாறுகள் போன்றவை பிற்காலத்தில் கதை தழுவிய அம்மானைப் பாடல்களாக உருவெடுத்துள்ளன.  காட்டாக, வைகுந்த அம்மானை, பார்ச்சுவநாதர் அம்மானை, இராமப்பய்யன் அம்மானை போன்றவற்றையும், அல்லியரசாணி மாலை, பவளக் கொடி மாலை, அபிமன்னன் சுந்தரி மாலை, சிந்தாமணி மாலை போன்றவற்றையும் சுட்டலாம்.

சித்திரபுத்திர நயினார் கதை, நல்லதங்காள் கதை, தேசிங்குராசன் கதை, சிறுத்தொண்டன் கதை போன்றன கதையம்மானைகள்.

பஞ்ச பாண்டவர் வனவாசம், பூங்காவனப் பிரளயம் போன்றவையும் கதையம்மானைகளே.

இவை, இதிகாச புராண நிகழ்ச்சிகள், வரலாற்று நிகழ்ச்சிகள், அடியார் சரிதங்கள் முதலியன பற்றிய கதையம்மானை நூல்கள் ஆகும்.

கோவலன் கதை, மேருமந்திர மாலை, சீவேந்திரர் சரிதம் போன்றன இலக்கிய அடிப்படையில் எழுந்த அம்மானைகளாகும்.

சீவேந்திரர் சரிதம் - சுவடிகள்

இது, சீவக சிந்தாமணிக் காவியத்தின் வழிநூல்.  இதற்கு இரண்டு ஏடுகள் கிடைத்துள்ளன.

ஒரு சுவடியில் நூலின் பெயர் எதுவும் இல்லை.  ஆயின், காப்புச் செய்யுளில், ‘சீவேந்திரரது சரிதம் பாட’ என எழுதப்பட்டுள்ளது.  மேலும், முதலிலுள்ள நாமகள் இலம்பகம்,

சீதமதி முக்குடைத்தான் சீவேந் திரர்சரிதம்

ஆதரவாய்ப் பாடிநாம் ஆடுவோம் அம்மானார்”                            

(53-54)

எனத் தொடங்குகிறது.  இதில், ‘சீவேந்திரர் சரிதம்’ என்றே குறிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சுவடியில், முதலில், ‘ஜீவேந்திர அம்மானார்’ என்றும், இறுதியில், ‘ஜீவேந்திர ஸ்வாமி அம்மானார் முகிஞ்சது’ என்றும் எழுதப்பட்டுள்ளது.

எனவே, இந்நூலின் பெயர், சீவேந்திரர் சரிதம் என்றும், ஜீவேந்திர அம்மானார் என்றும் வழங்கப்பெற்று வந்ததை அறியமுடிகிறது.

இந்நூல் பதிப்பிற்கான ஏடுகள் கிடைத்த விவரம் குறித்து இதன் பதிப்பாசிரியர் விரிவாக முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.  நூல் முழுவதும் அடங்கிய முதல் ஏடு 158 இதழ்களைக் கொண்டது.  இரண்டாவது ஏடு 138 இதழ்களைக் கொண்டது.  இவ்விரண்டும் முறையே வளத்திக் கிராமம், நெம்மிலிக் கிராமம் (வட ஆர்க்காடு மாவட்டம்) ஆகிய இடங்களிலிருந்து திரு.சிவ. ஆதிநாதன் என்பார் வழியாகப் பெறப்பட்டுள்ளன.

முதல் ஏட்டின் இறுதியில், ‘துந்துபி வருஷம் வையாசி மாதம் 19ஆம் தேதி வளத்தி கிராமம் கனகபிரப நயினார் புஸ்தகம்’ என்னும் குறிப்பு உள்ளது.  இரண்டாவது ஏட்டின் இறுதியில், ‘நெம்மிலியிலிருக்கும் கோமட்டநாத நயினார் குமரன்’ என்னும் குறிப்பு உள்ளது.  இரண்டும் சமண சமயத் தொடர்பானவர்களிடமிருந்து பெறப்பட்டன எனத் தெரிகிறது.  இவை, சுமார் இருநூற்றிருபத்தைந்து ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்டவை என்பதும் விளங்குகின்றது.

நூலமைப்பு

முதலில் கலைவாணியைக் குறித்த காப்புச் செய்யுள் உள்ளது.  அடுத்து, அருகன் வணக்கம், பாயிரம், பத்து இலம்பப் பிரிவும் உள்ளன.  நூலில் மொத்தம் 3284 அடிகள் உள்ளன.  கதையம்மானைப் பாடலாதலின் பாடலுக்குரிய எதுகை மோனைக் கட்டுக் கோப்புகளும் இடம்பெற்றுள்ளன.

நூலாசிரியர்

சீவேந்திரர் சரிதம் நூலின் ஆசிரியர் தேவராசன் என்பவராவார்.  இவர் தச்சாம்பாடி என்னும் தச்சை என்ற ஊரினர்.

பார்புகழும் தச்சைப் பதிவாழ் அருகந்தர்

          சீரடியை அர்ச்சிக்கும் தேவராசன் தமிழால்

          அம்மானை யார்பாடி யாடுவோம் அம்மானார்”              

(41-43)

என்பது பாயிரம்.  மேலும்,

அருகன் அறம்வாழ்க! அம்புவியில் உள்ளோர்கள்

          மருமதி பாற்கரனார் வாழீகாண் அம்மானார்”    

          (49-50)

என்பதிலிருந்து, இந்நூலாசிரியருக்குச் சமய தருமம் உரைத்த குரு பாற்கரனார் என்பவர் என்பதும் புலனாகின்றது.  மேலும்,

பாண்டிமகா ராசனுடன் பார்மன்னர் எல்லோரும்

வேண்டிய கேட்டருளும் வேதமுனி வாக்கியத்தைக்

கங்கை குலத்திலதன் காங்கயர்தன் புத்திரனாம்

அங்கணை வேள்பயந்தான் அன்புடனே கேட்டருளிர்”  

(85-88)

என்பதிலிருந்து, இந்நூலாசிரியருக்கு இப்பெருங்காப்பியப் பொருளை வழங்கியவர் ‘அங்கணைவேள்’ என்னும் தமிழாசான் என்பதும் தெரிகின்றது.

திருத்தக்க தேவரின் சீவகசிந்தாமணிக் காவியத்தை அடியொற்றியே தான் இந்தச் சீவேந்திர சரிதம் நூலைப் பாடியதாக ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

சிந்தனை எல்லாம் கொடுக்கும் சிந்தா மணியிட

அந்தரச காவியத்தின் அர்த்தம் எல்லாம் நானுரைப்பேன்

மாமுனிவர் சொன்னதொரு வாய்மை தவறாமல்

…………...    …………..   …………..  …………..

பன்னும் தமிழ்அதனால் பாடினேன் அம்மானார்”         

(69-84)

இவ்வாறாகக் கதையமைப்பும் காவிய நிகழ்ச்சிகளும் சீவக சிந்தாமணியை அடியொற்றிப் பாடியிருப்பினும், இக்கதைப் பாடலில் பல புதிய சொற்கள் காலத்தால் சேர்க்கப்பட்டுள்ளமையை இவண் குறிப்பிட வேண்டியுள்ளது.

அம்மானார்

பெரும்பான்மையான இடங்களிலும் இச்சொல் பாட்டின் இசையை நிரப்பும் சொல்லாக அசைச்சொல் நீர்மையில் வருகின்றது.

இலம்பகம் - இலம்பம்

சீவக சிந்தாமணியின் உட்பிரிவுகளாக நாமகள் இலம்பகம் முதல் முத்தி இலம்பகம் ஈறாக 13 இலம்பகங்கள் உள்ளன.  சீவேந்திரர் சரிதத்தின் உட்பிரிவுகளாக நாமகள் இலம்பம் முதலாக இலக்கணையார் இலம்பம் வரை 10 இலம்பங்கள் உள்ளன.

இலம்பகம் என்பது நூலின் உட்பிரிவு ஆகும்.  இலம்பம் என்ற சொல்லுக்கு மாலை, தொங்கல் என்னும் பொருள் உண்டு.

சீவேந்திரர் சரித ஆசிரியர், இலம்பகம் என்பதற்குப் பதிலாக ‘இலம்பம்’ என்னும் பெயரை நூற்பகுதிகளுக்குத் தந்துள்ளார்.  மேலும், பதினோர் இடங்களிலும் ஆளுகின்றார்.  இஃது இந்நூலாசிரியர் கண்ட புதுச்சொல் ஆகும்.  சிந்தாமணியினின்றும் மாறுபட்ட பெயர் அமைப்புமாகும்.

கட்டியங்காரன் - கட்டியக்காரன் - காஷ்டாங்கன்

சிந்தாமணியில் சச்சேந்திர மன்னனின் அமைச்சர்களுள் ஒருவனாகக் கட்டியங்காரன் கூறப்படுகிறான்.  இவனுடைய வரலாற்றை விரிவாக விளக்கும் சீவேந்திரர் சரிதம் இவனை, ‘காஷ்டாங்கன்’ என்று கூறுகிறது.  இதற்கு, ‘விறகு வெட்டி விற்றுப் பிழைப்பவன்’ என்று விளக்கமும் தருகிறது.

கேமசரியார் - கேசரியார்

சிந்தாமணியில் கேமசரியார் இலம்பகம் என்பது, சீவேந்திரர் சரிதத்தில் கேசரியார் இலம்பம் என்பதாக அமைந்துள்ளது.  இவ்வாறே, வேறு சில சொற்களையும் பெயர் மாறுபாடுகளையும் பின்வருமாறு காணலாம்.

சீவக சிந்தாமணி    சீவேந்திரர் சரிதம்

சீவகன்         -         சீவேந்திரன், சீவேந்திரர்

          சச்சந்தன்      -         சச்சேந்திரன்

          கந்துக்கடன்  -         கந்தோர்க்கன்

          நந்தட்டன்     -         நந்தாட்டியன்

          சுதஞ்சணன்   -         சுதஞ்செயன்

          சாசுரதத்தன்  -         சக்ரந்தன்

          தரன்             -         தாரன்

இவை போன்ற மாற்றங்கள் மக்களின் பேச்சு வழக்கை ஒட்டியும் மக்களுக்குப் புரிவதற்காகவும், அம்மானையின் நடை கருதியும் அமைக்கப்பட்டவை எனலாம்.

வடசொல்லாட்சி

இவ்வாறே, வடமொழிச் சொல்லாட்சியும் இந்த அம்மானைப் பாடலில் மிகுதியாக உள்ளன.  இவற்றுள், அர்ச்சனை, அர்த்தம் முதலாக வாலிபம், வைராக்கியம் ஈறாகவுள்ள பல சொற்கள் நாட்டு நடப்பில் மக்களிடையே வழங்கப்பெற்று வரும் சொற்களேயாகும்.

வழக்குத் தொடர்கள்

மக்களிடையே காணப்படும் சில தொடர்களும் இந்நூலில் பரவலாக அமையக் காணலாம்.  காட்டாக,

காடு மலைபுனலும் கடிய வனாந்தரமும்” (125)

துஷ்டநிக்கிரக சிஷ்ட பரிபாலன்” (98)

சகலசன ரெட்சகன்” (3176)

அகுதி பரதேசி” (1838)

என்பன நாட்டு வழக்குகளே.

கெடுமதிதான் கண்ணுக்குத் தோணாது கெட்டது போல்”

(493)

என்பது பழமொழி.

இந்தாரும் என்று சொல்லி ஏந்திழையார் தன்கையிலே”

(692)

          கூறிடுவான் கண்டிகளோ கொற்றவனார் தேரும் இப்போ”

(979)

என்பவற்றில் ‘இந்தாரும்’, ‘கண்டிகளோ’ என்னும் சொற்கள் மக்களின் பேச்சு வழக்கில் அடிக்கடிப் பயில்வனவாகும்.

காட்டிக் குடுத்தனன்காண் கந்தோர்க்கன் அம்மானார்’

(1770)

என்பது சாதாரண நடைமுறை வழக்கமாகும்.

பேச்சு வழக்கு

மக்களின் பேச்சு வழக்கில் வரும் பெயர்களும், குறைச்சொற்களும், உருமாற்றச் சொற்களும் இந்நூலில் விரவி வரக் காணலாம்.  காட்டாக,

அகுதி, அடிச்சு, அப்ப, அப்போ, அற்பசி, அன்பது, ஒண்டி, ஒயரம், தீனம், நாலு, வக்கணை, மாட்டாமல், மெச்சி, வாறதும் என்பன போன்று பல.

இவ்வாறு வருவனவற்றை ஆராயின், பேச்சு வழக்கில் சொற்கள் பெறும் உருமாற்ற நிலைகளையும் அவற்றிற்கான ஏதுக்களையும் அறியலாம்.

அரிய வழக்குகள்

1.       கண்டேன் இது வழியில்; காளைஒரு திங்களின்மேல்’

(2062)

இங்கு, ‘இந்த’ என்னும் பொருளில் ‘இது வழியில்’ என்று குறிப்பது ஒரு வகை மக்கள் வழக்கே யாகும்.  இந்த வழியில் என்பது இதன் பொருளாகும்.

2.       அப்படியே நல்லது’ என்று ஆணழகி தான் உகந்து’

(205) 

அரசன்விடை பெற்று அவளும் ஆணழகி போகல் உற்றாள்’

(281)

அரசாளும் மன்னவனும் ஆணழகி தன்னுடனே’

(380)

அப்படியே ஆகுது’ என்றாள் ஆணழகி அம்மானார்’

(2262)

ஆஎன்றேதான் அழுதாள் ஆணழகி அம்மானார்’

(2337)

அந்த வயணம் எல்லாம் ஆணழகி தோழியர்கள்’

(2850)

அன்னை பிதா தன்னுடனே ஆணழகி செப்பிடவே’

(2854)

ஆணழகியாள் சுரமஞ்சரியார் கேட்பதற்கு’

(2800)

என இந்நூலாசிரியர் ‘ஆணழகி’ என்ற புதிய சொல்லைக் கையாண்டிருப்பது இவண் கருதத்தக்கது.

ஆணழகி’ என்பதற்கு ஆளுந்தன்மையுடைய அழகி என்பது நேர் பொருளாம்.  இங்கே பெண்டிருக்கக் குடும்பத்தை ஆளும் தன்மை என்பது பொருள்.

3.       இவ்வாறே, ‘ஏதல்’ என்னும் ஒரு சொல் இந்நூலுள் 22 இடங்களில் வரக் காணலாம்.  இது, ஏது, அறிவுரை, ஆறுதல், வெறுப்பு, கவலை, தெளிவு, உன்னிப்பு, அன்பு, பாசம், ஒற்றுமை, இன்பம், பெருமை, தூண்டுதல், மிகுதி, வியப்பு, முறைமை, திறமை, ஒப்புமை போன்ற பல்வேறு பொருள்களில் வந்துள்ளது.

4.       காரிழையார்’, ‘காரிழையாள்’ என்னும் சொற்களைப் பெண் என்னும் பொருளில் இந்நூலில் வழங்கக் காண்கிறோம்.  ‘கார்’ என்பதற்கு அழகு என்னும் பொருள் கூறுவர்.  எனவே, காரிழையார் எனின் அழகிய ஆபரணம் அணிந்தவர் எனலாம்.

5.       ஆரிழையாள் (2793), ஆரிழையாள் (195, 1158) என்னும் ஆட்சியும் இந்நூலுள் காணலாம்.

6.       கனக்கப் பிரியமுடன்’ (677, 1877, 2188, 2210, 2283)

கனக்க விசாரமுற்று’ (1109)

கனக்கக் கிலேசம் உற்று’ (2447)

கனக்கப் பழிசுமக்கும்’ (2725)

என்னுமிடங்களில், கனக்க என்ற சொல் மிகுதி என்னும் பொருளில் வந்துள்ளது.

7.       குயவனுக்கு மறுபெயர் கும்பகாரன் ஆகும்.  இதனை, ‘கும்பாரன்’ என இந்நூலாசிரியர் கூறுகிறார்.

கும்பாரன் மண்மெதித்தாப் போலே குளறியிட’

(1268)

8.       வெளியே என்னும் பொருளில், ‘வெளிக்கிட்டுப் போய்’ என்னும் வழக்கு இன்றும் யாழ்ப்பாணத் தமிழர்களிடையே இயல்பாயுள்ளது.  இந்நூலில்,

பாவையர்க்காய்த் தோற்றுஇருந்த பார்மன்னர் எல்லோரும்

மேடைதனை விட்டிறங்கி வெளிக்கிட்டே போய்அவர்கள்

வாடி மனங்கலங்கி மயங்கல் உற்றார் அம்மானார்”

(1367-1369)

என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

காலந்தோறும் மக்கள் வாழ்வில் இடம்பெறும் வழக்கு நடைகளை அறிவதற்கு இத்தகைய நூல்கள் துணைபுரியும் என்பதற்கு இவை சான்றுகளாகும்.

காலந்தோறும் ஏற்படும் மாற்றங்களும் புதிய விளக்கங்களும்

சீவக சிந்தாமணி போன்ற பழைய பெருங்காப்பியங்கள் மக்களிடையே பரவியபோது காலத்திற்கேற்ற மாற்றங்களையும் புதிய விளக்கங்களையும் பெற்றுள்ளன.  புதிய புதிய இலக்கிய வடிவங்களில் புதுமையும் சுருக்கமும் தெளிவும் பெற்றுள்ளன என்பதும் உண்மையாகும்.

சீவக சிந்தாமணி 3145 விருத்தங்களில் அமைய, பல நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்ட சீவேந்திரர் சரிதம் 3284 அடிகளில் அம்மானார் பாடலாக மக்களிடையே பரவியதும் இவண் குறிப்பிடத்தக்கதாகும்.  புதிய விளக்கங்கள், தெளிவுகள் அனைத்தும் மக்களின் தேவைக்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வகையில், சீவேந்திரர் சரிதம் நூலின் அமைப்பில் காணும் தனித்தன்மைகளை இந்நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை அவர்கள் தம் முகவுரையில் தொகுத்தளித்துள்ளார்.  அவற்றுள் சில வருமாறு:-

1.       சீவகன் மகளிர் எண்மரை மணந்து கொண்டதாலும் நாமகள், மண்மகள், பூமகள், முத்திமகள் ஆகியோரை அவன் அடைந்தமையாலும் சிந்தாமணிக்கு ‘மணநூல்’ என்றும் ஒரு பெயர் உண்டு.  இப்பெயருக்கு ஏற்புடைய அமைப்பை சீவேந்திரர் சரிதத்தில் உள்ளது.  காந்தருவ தத்தையார் இலம்பம் முதலியவற்றை மணநிகழ்ச்சியுடன் முற்றுவிக்கிறார் ஆசிரியர்.  பிரிவு நிகழ்ச்சிகள் அடுத்த இலம்பத்தில் இடம்பெறுகின்றன.  ஆனால், சிந்தாமணியில் மணவினையும் அதன்பின் நிகழ்ச்சிகளும் அதே இலம்பகத்தில் இடம்பெறுகின்றன.

2.       சச்சேந்திர மன்னனின் அமைச்சர்களுள் ஒருவனான கட்டியங்காரன் வரலாறு சீவக சிந்தாமணியில் சொல்லப்படவில்லை.  ஆயின், அவன் அமைச்சனாவதற்கு முன் இருந்த வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிறுகதை வடிவில் கூறப்பட்டுள்ளன.

இவன் இராசமாபுரத்தில் வாழ்ந்த ஒரு விறகு தலையன்.  தினந்தோறும் காட்டில் விறகு வெட்டி வந்து நகரத்தில் விற்று வயிறு வளர்த்து வந்தான்.  அவன் முன் செய்த பாவ வினைப்பயனால் காடு, மலை, புனல், வனாந்தரங்களை நாடிச் சென்று கொண்டிருந்தான்.  காட்டிலே அவதி ஞானம் பெற்ற ஒரு முனிவரைக் காண்கிறான்.  அம்முனிவரிடம் தன் துயரம் போக ஒரு விரதம் அருள வேண்டுகிறான்.  அவர் அவனுக்கு மாமிச உணவைக் கைவிட்டு நிறைமதி நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதத்தையும் பிரமசரிய விரதத்தையும் போற்றி நடக்கப் பணிக்கிறார்.

ஒரு சமயம் விறகு விற்றபின் பட்டணத்தின் வீதி ஓரத்தில் ஒரு மரத்தடியில் அவன் உறக்கம் கொண்டிருந்தான்.  அப்பொழுது நாடகம் ஆடி அரசனிடமிருந்து விடைபெற்றுப் பல்லக்கில் திரும்பிவரும் தாசியர் இருவர் அவனை இகழ்ந்துரைத்துக் காறி உமிழ்ந்து சென்றனர்.  இதனால் விறகு தலையன் கோபங்கொண்டு தன் நிலைக்கு வருந்தி தன் உயிரை மாய்க்கக் கருதிச் செல்லுகிறான்.  அப்பொழுது மூவுலகும் முக்காலமும் உணர்ந்த ஒரு முனிவர் வர, அவரிடம், ‘என்குப் பிழைக்க வழி சொல்லும்’ என, அவர் சந்தனமரம் மலைபோல் குவிந்திருந்த இடத்தைக் கைகாட்டிச் செல்கின்றார்.  சந்தன விறகை வெட்டி வந்து விற்று அவன் செல்வனும் ஆகிறான்.

தன்னை முன்பு இகழ்ந்து சென்ற தாசியைத் தான் மருவ வேண்டும் என்னும் வைராக்கியத்தால், அவன் சென்ற நாள் நிறை மதி நாள் என்று அறியாமல் தாசி இல்லம் சென்று, ‘ஓரிரவு நித்திரை’க்கான பொன்னைத் தருகிறான்.  இன்பம் துய்க்கவும் செல்லுகிறான்.  அன்று நிறைமதிநாள் நினைவுக்கு வரவே தாசி வீட்டிலிருந்து அவன் வெளியேறுகிறான்.  அவன் செயல் குறித்து வேசி மன்னனிடம் முறையிடுகிறாள்.  மன்னனின் கட்டளைப்படி நகரத்தின் மேலை வாசல் தவிர ஏனைய திசைகளிலுள்ள வாசல்களை அடைத்து அந்த வாசல் வழியே மக்களை வரும்படி செய்கிறான்.  அந்த வாயிலில் வேசியை நிற்க வைத்து விறகு தலையனை அடையாளங்கண்டு பிடித்துவர ஆணையிடுகிறான்.  அவ்வாறே அவனும் அகப்படுகிறான்.  மன்னன் விசாரித்த பொழுது விறகு தலையன் தன் விரதத்திற்குப் பங்கம் வராமலிருக்க நீங்கிச் சென்றமை கூறுகிறான்.  விறகு தலையனின் விரத மேன்மையையும் உறுதிப்பாட்டையும் கண்ட மன்னன் அவனை மெச்சி, அவனுக்கு வெகுமானம் கொடுத்து, கட்டியக்காரன் என்று பெயர் சூட்டி, அவனைத் தன் சேனைகளுக்குத் தலைவனாக்கிச் சேனாபதிப் பட்டமும் அளிக்கிறான்.

இக்கட்டியக்காரன் கதை நிகழ்ச்சி தமிழறியும் பெருமாள் கதையை ஒத்துள்ளது.  மக்கள் வழக்கில் அறிந்த கதை நிகழ்ச்சிகளைக் கூறி விளங்க வைப்பதும் இக்கதைப்பாடலாசிரியரின் கருத்தாகலாம்.

3.       சிந்தாமணி கூறும் கேமசரியார் இலம்பகத்தில், கேமசரி எவனைக் கண்டு நாணுகின்றாளோ அவனே அவளுக்குக் கணவன் ஆவான் என்று கணிதர் கூறுகின்றார்.  சீவகனைக் கண்டதும் கேமசரி நாணமுற்று அவன்பால் மோகம் கொள்ள அவள் தந்தை சுபத்திரன் சீவகனுக்கு அவளை மணம் செய்வித்தான் என்பது சிந்தாமணி தரும் செய்தி.

ஆயின், சீவேந்திரர் சரிதம் இதனை வேறு வகையாகக் கூறுகின்றது.  கேசரி பெண்ணுக்குரிய வெட்கம் இன்றி ஆடையில்லாமல் அம்மணமாய் இருந்தாளாம்.  எவனைக் கண்டு நாணி அவள் ஆடையை உடுத்துகிறாளோ அவனே அவளுக்குரிய கணவனாவான் என்று சோதிடர் சொன்னதாக உள்ளது.  சீவகனைக் கண்டதும் அவள் சேலை உடுத்தி ஒரு மூலையில்போய் மறைந்தாள் என்று உரைக்கிறது இந்தக் கதையம்மானை.

4.       சீவகன் தன் தாய் விசையமகாதேவியை முதன் முதலாகத் தாபசப்பள்ளியில் சந்தித்தபோது இருவர்தம் பற்றும் பாசமும் விஞ்சி நிற்கும் காட்சியைக் காண்கிறோம்.  இந்த இடத்திலே விசையமகாதேவி ‘தன்னைப் பெற்ற தாய்தானா?’ என்று சீவேந்திரன் சோதித்துப் பார்த்த நிகழ்ச்சி ஒன்று இந்த நூலுள் உள்ளது.  இது, சீவக சிந்தாமணிக் காவியத்தில் இல்லாத புதுச்செய்தி.

தன்னை வந்து வணங்கிய சீவகனைத் தாய் விசையை தன்னுடைய கைகளால் தழுவியெடுத்து அன்போடு அணைத்துக் கொள்கிறாள்.  அப்பொழுது சீவகன் தன் தாயை நோக்கி, ‘என்னைப் பெற்றதாய் நீரேயானால் ஐயம் நீங்க என்மேல் உம் முலைப்பால் சொரிய ஆதரத்துடன் அமைக’ என்று கேட்கிறான்.

அப்பொழுது தார்விசையை அன்னையிட மார்முலைகள்

          செப்பமுட னேசுரந்து சீவகர் மீதே சொரிந்தே

          ஆறாய் வழிந்ததனை அங்குஇருந்த தோழரும்தான்

          வீறான சீவகரும் விந்தை யுடனே பார்த்து

          கண்டும் அதிசயித்தே கவலைஎல்லாம் நீங்கிஅவர்

          கொண்டனர்காண் சந்தோஷம் கொற்றவர்கள் எல்லாரும்”

(2497-2502)

என்று விசையையின் முலைப்பால் சுரந்து சீவகன் மேல் ஆறாய்ப் பாய்ந்த அதிசயம் கண்டு உண்மை உணருகின்றனர் என்று காணப்படுகிறது.  பாரதத்தில் குந்தியும் கர்ணனும் சந்தித்தபோது தன் முலைப்பால் சொரிய அவன் தன் முதல் மகன் என்பதைப் புலப்படுத்தினாள் என்று வரும் செய்தியை ஒத்ததாயுள்ளது அம்மானையாசிரியர் கூறும் இந்நிகழ்ச்சி இவ்வாறு வேறு சிலவும் உள.

இவ்வாறு, மக்கள் நன்கு அறிந்த இதிகாச, புராண, இலக்கியக் கதைகளைத் தழுவிய கருத்துக்களைப் பிற்கால ஆசிரியர்களும், தம் நூல்களில் எடுத்தாண்டிருப்பதை அங்கங்கே காணலாம்.

பொது நிலையில், இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களைப் பலரும் அறியும் வகையில், அவற்றைச் சுவடிகளிலிருந்து பெயர்த்தெழுதிப் பதிப்பித்து வெளியிடுவது வளர் தமிழுக்குப் பெருந்துணை செய்வதாகும்.  இவற்றால், தொன்மையான இலக்கிய வடிவங்களை இனங்காண்பதற்கும், காலந்தோறும் வளர்ந்து வந்த வடிவங்களை அறிவதற்கும், இவை மக்களிடையே பரவிய வகைகளை உணர்வதற்கும், மொழிக்கலப்பு மற்றும் பிறமொழித் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பதிவு செய்வற்கும் வழிகள் பல உண்டாகும்.  இவ்வகையில், இத்தகைய நூற் பதிப்புகளை ஒருங்கே தொகுப்பதும், பாதுகாப்பதும், இலக்கிய ஆய்வுகளுக்குட்படுத்துவதும் காலத்தின் தேவையாகும்.

துணை நூல்கள்

1.       சீவேந்திரர் சரிதம், (பதிப்.) பேரா. மு. சண்முகம் பிள்ளை, தமிழ்ப் பல்கலைக்கழகம்,     தஞ்சாவூர், 1985.

2.       திருத்தக்க தேவரியற்றிய சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கியர் உரையும்,      (பதிப்) டாக்டர் உ.வே. சாமிநாதையர், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, நிழற்படப் பதிப்பு, தஞ்சாவூர், 1986.