வியாழன், 24 அக்டோபர், 2013

ஆழ்வார் திருநகரியில் - சுவடிகள் களப்பணி

ஆழ்வார் திருநகரியில் பெரியன்  வெ. நா. சீனிவாச ஐயங்கார் அவர்களின் பயன்பாட்டில் இருந்த 85 ஓலைச்சுவடிக் கட்டுகளை அவரது மகன் பெரியன் வெ.சீ. அழகியநம்பி அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அளித்துள்ளார்கள்.  அவர்களைப் பற்றிச் சிறிது இங்குக் கூறவேண்டும். வெ.நா. சீனிவாசன் அவர்கள் அக்காலத்தில் ஆழ்வார்திருநகரியில் திருஞானமுத்திரைப் பிரசுராலயம் ஒன்றை வைத்து அதன் மூலம் பல சுவடிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளார்.  குறைந்தது 20க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.  குறிப்பாக கம்பராமாயணம் காண்டம் காண்டமாக பதிப்பித்துள்ளார்.  சுவாமி நம்மாழ்வார் நூற்றெட்டுத் திருப்பதி தாலாட்டு, சடகோபன் திவ்ய சரிதம், சடகோபன் சந்திர கலாமாலை, இராமாணம், துலைவில்லி மங்கலம் தேவர்பிரான் சந்திர காலமாலை, நம்மாழ்வார் பிள்ளைத்தமிழ், திருக்குருகூர் மகிழ்மாறன் பவனிக்குறம், குருகூர்ப்பள்ளு, ஆழ்வார்கள் வைபவம், தெந்திருப்பேரை திருக்கோளூர் திருப்பணிமாலை, திருவைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ், கம்பராமாயணம் பாலகாண்டம், தெய்வச்சிலையார் விறலிவிடுதூது, கம்பராமாயணம் பால காண்டம் ஆழ்வார்திருநகரிப் பிரதிகளின்படி, கம்பராமாயணம் அயோத்தியா காண்டம், கம்பராமாணயம் ஆரண்யா காண்டம், கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம், கம்பராமாயணம் சுந்தர காண்டம், கம்பராமாயணம் யுத்த காண்டம், கம்பராமாயணம் உத்தர காண்டம், பராங்குச நாடகம், குருகாஷேத்திர மகாத்மியம், திருக்குருகூர் திருப்பணிமாலை போன்ற பல நூல்களைப் பதிப்பித்த பெருமைக்குரியவர். அவர்  வெளியிட்ட பல நூல்கள் இன்னும் முற்றிலும் விற்பனை ஆகாமல் ஆழ்வார் திருநகரியில் திரு. அழகிய நம்பியிடம் இருக்கின்றன.  தமிழன்பர்கள் அவரிடம் +914639273039 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவையன்றி பல அரிய நூல்களையும் அவர்கள் பாதுகாத்து வைத்துள்ளனர்.  பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்திருக்கின்றார்.  பல பழம் பெரும் தமிழறிஞர்கள் அவர்களிடம் பழக்கம் வைத்திருந்திருக்கின்றனர்.