ஞாயிறு, 28 அக்டோபர், 2018

சமயக் குரவர்களின் சமூகச் சிந்தனை


சமூகத்தில் வாழும் மக்களின் நலன்களுக்காகவே சமயக் குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி போன்றோர் தலங்கள் தோறும் சென்று வழிபட்டு தங்களின் சமூகச் சிந்தனைகளை பனுவல்களா கப் பாடி வைத்துள்ளனர்.  திருக்கோயில் சென்று இறைவனை வழிபட்டு முத்தி அடைவதோடு தம் ஆன்மீக உணர்வைச் சுருக்கிக் கொள்ளாமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று சிந்தித்துத் தேவார மூவரும் தங்களின் பனுவல்களில் பல்வேறுபட்ட சிந்தனைகளைப் புலப்படுத்தியுள்ளனர்.  அவற்றுள் சிலவற்றை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.  திருநாவுக்கரசர்,
“என்க டன்ப ணிசெய்து கிடப்பதே”               (தேவாரம், 5:19:9)
என்று பணிசெய்வதே தன்னுடைய கடமை எனப் பாடியுள்ளார்.  திருமூலரும் அடியார்களுக்குச்செய்யும் தொண்டு நேரடியாக இறைவனை அடையும் என்ற கருத்தில்,
            “படமாடக் கோயிற் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயிற் பகவற்க தாமே”               (திருமந்திரம், பா.1857)
என்று பாடியுள்ளார்.  சமயக் குரவர்களின் செயற்பாடுகள் அவர்களின் சமூகச் சிந்தனையை படம்பிடித்துக் காட்டுவனவாக உள்ளன.  குறிப்பாக சில மட்டும் எடுத்துரைக்கப்படுகிறது. 
வழிபாட்டுச் சிந்தனை
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இணைந்து சில தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டனர்.  அவ்வாறு அவர்கள் திருமறைக்காடு என்னும் தலத்திற்கு வந்தபோது வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக்கோயிலின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்தது.  மக்கள் வேறோர் பக்கத்தில் வாயில் ஒன்றை அமைத்து அதன் வழியே சென்று வழிபட்டு வருவதைக் கண்டனர்.  திருஞானசம்பந்தர், மக்கள் நேர்வழியே சென்று இறைவனை வழிபட வேண்டும் எனக் கருதி, திருநாவுக்கரசரைப் பணிந்து, மறைக்கதவம் திறக்கப் பாடுமாறு வேண்டினார்.  திருநாவுக்கரசர், “பண்ணி னேர்மொழி” என்று தொடங்கும் பதிகம் பாடினார் (தேவாரம், 5:10:1). இறைவன் அருளால் கதவு திறந்தது.  மக்கள் மகிழ்ச்சியுடன் இறைவனை அவ்வாயிலின் வழியே சென்று வழிபட்டனர்.  திருஞானசம்பந்தர் “சதுரம் மறைதான்” எனத் தொடங்கும் பதிகம் பாடி மீண்டும் அக்கதவுகள் மூடவும் திறக்கவும் வழிசெய்தார் (2:மறைக்காடு:1). பொதுமக்கள் அதுநாள் தொடங்கி நேர்வழியில் சென்று இறைவனை வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பதால் இவ்விருவரின் சமூகச் சிந்தனை வெளிப்படுகிறது.
மனிதநேயச் சிந்தனைகள்
            தேவார ஆசிரியர்கள் வழிபாட்டோடு மனிதநேயச் சிந்தனைகளைச் சமூகத்தில் வளர்ப்பதிலும் மிகுந்த அக்கறை செலுத்தினர்.  இனம், மொழி, பண்பாடு, நாடு என்று பலவாக வேறுபட்டுள்ள மனிதர்களை ஒன்றுபடுத்துவதில் பக்தியையும் திருக்கோயில் வழிபாட்டையும் பயன்படுத்தி உள்ளனர்.  அதில் வெற்றியும் கண்டனர் எனலாம்.  மனிதர்களுக்குள் வேறுபாடுகள் இல்லை எனவும், ஆன்மாவிற்கு ஆண், பெண், அஃறிணை என்ற தன்மைகள் இல்லை எனவும், பக்தியும் இறைவழிபாடும் அனைவருக்கும் அனைத்திற்கும் பொதுவானது எனவும், நாடெங்கும் வலியுறுத்தி தலயாத்திரை சென்றுள்ளனர்.  திருமூலர்,
            “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”                        (திருமந்திரம், பா2104)
என்று குறிப்பிடுவது ஈண்டு சிந்திக்கத் தக்கது.  இக்கருத்தினை அடியொற்றியே தேவார மூவர்களும் தலயாத்திரை சென்று மனித நேயத்தை வளர்த்துள்ளனர்.  மனிதன் இறைவனுக்குச் செய்யும் தொண்டை விட, மனிதன் மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்கும் செய்யும் தொண்டே சிறந்தது என்று போற்றி உரைத்துள்ளனர்.
            திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் பாணர் குலத்து அடியாரைக் குலவேறுபாடு கருதாது தாம் செல்லும் தலங்கள் அனைத்திற்கும் உடன் அழைத்துச் சென்றவர் திருஞானசம்பந்தர்.  திருஞானசம்பந்தர் பாடல்களுக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணரே பண்ணமைத்து யாழில் இசைத்து சம்பந்தரின் பாடல்களுக்கு உயிரூட்டியவராவார்.
            திருஞானசம்பந்தர், பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் அழைப்பை ஏற்று மதுரை வந்து ஒரு திருமடத்தில் தங்கினார்.  இதனை அறிந்த சமணர்கள், அவர் தங்கியிருந்த மடத்திற்கு இரவு தீர் வைத்தனர்.  இதனை அறிந்த சம்பந்தர் இச்செயலுக்குக் காரணம் அரசனே என உணர்ந்து அத்தீயை வெப்பு நோயாகப் பாண்டிய மன்னனைப் பற்றுமாறு செய்தார்.  இந்நிகழ்ச்சியிலும் பாண்டிய மன்னனை அத்தீ அழிக்கக் கூடாது என்ற மனிதநேயச் சிந்தனையுடனும், தவறுக்குத் தண்டனை என்ற நிலையில் வருத்தமுறச் செய்து, அம்மன்னன் திருந்தப் பயன்படவேண்டும் என்ற நிலையிலும்,
            “செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே”          (தேவாரம், 3:33:9)
என்று பாடினார்.  இப்பாடலில் சம்பந்தர் ‘பையவே’ என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் தன்மையை நோக்கும்போது தண்டிப்பதிலும் ஒரு மென்மையைக் கடைபிடித்துள்ளமை வெளிப்படுகிறது.  வழிபாடு, மனித நேயத்திற்குத் துணைபுரிய வேண்டும் என்ற அடிப்படையைச் தங்களுடைய செயல்கள் மூலம் சமயக் குரவர்கள் புலப்படுத்தியுள்ளனர்.
சுயமரியாதைச் சிந்தனை
            மனிதன் தன்னை முழுமையாக நம்பினால் மட்டுமே அவனுடைய வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும்.  தாழ்வு மனப்பான்மை வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்தி மனிதனை நிலைகுலையச் செய்யும்.  இத்தாழ்வு மனப்பான்மையை அகற்றவும், மனிதப் பிறவியின் மேன்மையை உணர்த்தவும் சமயக் குரவர்கள் பலவிடங்களில் தங்களின் கருத்துக்களைப் புலப்படுத்தியுள்ளனர்.
            “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்”  (தேவாரம், 4:81:5)
என்ற பாடலடியைச் சுட்டலாம்.  மேலும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் முகமாக,
            “மலையே வந்து வீழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்”        (தேவாரம், 5:91:5)
“அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை” (தேவாரம், 4:2:1)
என்றெல்லாம் பாடி மனிதனுக்கு வாழ்வில் ஊக்கமளித்துள்ளனர்.
சமூகச் சிந்தனைகள்
            சமயக் குரவர்கள் தம் வாழ்வில் சிறந்து விளங்கவும், வீடுபேறு அடையவும் பல அறிவுரைகளைக் கூறிச் சென்றுள்ளனர்.  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் வஞ்சம் என்பர்.  இத்தீய குணம் இல்லாத மனித்தையே இறைவன் விரும்புவான் எனக் கூறி மனிதனை ஆற்றுப்படுத்தியுள்ளனர்.  இதனை,
            “வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லான்”     (தேவாரம், 7:19:5)
“வஞ்சம் மனத்து இறையும் நெஞ்சணு காதவன்”       (தேவாரம், 7:84:7)
“கள்ள நெஞ்சே வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தியோடு
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளன்”   (தேவாரம், 2:10:6)
என்றெல்லாம் சுட்டுவதைக் காணலாம்.  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதும், நம்பிக்கைத் துரோகம் செய்வதுமாகிய வஞ்சகச் செயல்களை மனதில் எண்ணுதல் கூடாது என்பதே இப்பாடலடிகள் பெரிதும் வலியுறுத்துகின்றன. 
            வள்ளுவர், ஒருவன் வாய்மையைக் கடைபிடித்தால் வேறு அறங்கள் செய்ய வேண்டியதில்லை என்கிறார்.  இக்கருத்தைச் சமயக் குரவர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.  இதனைச் சுந்தரர்,
            “பொய்யாத வாய்மையால் பொடிபூசிப் போற்றிசைத்து” (தேவாரம், 7:30:6)
என்கிறார்.  சங்க காலந்தொட்டே ஈதலறம் பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளது.  “ஈதம் இசைபட வாழ்தல்” என்று வள்ளுவப் பெருந்தகை ஈதலறம் பற்றிக் குறிப்பிடுகிறார்.  நக்கீரரும்,
 “செல்வத்துப் பயனே ஈதல்”               (புறம், பா.189)
என்கிறார்.  சமயக் குரவர்கள் ஈதலறத்தை நேர்மறையாகவும், செய்யாவிடில் ஏற்படும் துன்பத்தை எதிர்மறையாகவும் கூறி வலியுறுத்தியுள்ளனர்.
            “இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
காப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்” (தேவாரம், 4:ஐயாறு:10)
            “தாழாது அறம் செய்ம்மின்”                            (தேவாரம், 7:79:11)
            “அறம் புரிந்து நினைப்பது ஆண்மை”             (தேவாரம், 7:53:3)
என்றெல்லாம் சுட்டிச் செல்கின்றனர்.  இவைகள் அறம் செய்பவர்களுக்குப் பொருளை வாரி வழங்குவான் என்பதும், கள்ளத்தால் பொருளைப் பதுக்கினால் நரகமே அவர்களுக்குக் கிட்டும் என்பதும் இதன் மூலம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஊக்கத்தோடு அறம் செய்ய வேண்டும் என்பதையும் இது பற்றி நிற்கிறது.
            இவ்வாறு சமயக்குரவர்களின் பாடல்களில் சமூகச் சிந்தனைகள் எவ்வளவோ இருப்பினும் அவற்றுள் ஒருசில மட்டும் சான்றுக்கு எடுத்துக்காட்டுப்பட்டுள்ளது எண்ணற்பாலது.

கதிர்காம வேலவன் தோத்திரம்


           இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம் கதிர்காமம் ஆகும்.  இலங்கையின் சில சமயத் தளங்களில் ஒன்றானதுசிங்களவர்பௌத்தம்சோனகர்தமிழர், மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் போற்றப்படுகிறது. இங்குத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடி (சுவடி 2596) பாதுகாத்து வைத்துள்ள கதிர்காம வேலவன் தோத்திரம் என்னும் சுவடியில் இருக்கக் கூடிய செய்திகளைக் இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
கோயில் வரலாறு
கதிர்காம கந்தனின் பெயர்  தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உள்ளன. அவையெல்லாம் அவனின் குணாதிசயங்கள், லீலைகள். வீரதீரச் செயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும். இக்கோயிலில் அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதைக் கதிர்காம யாத்திரை என்பர்.  கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான  எல்லாளனுடனான  போரில், சிங்கள மன்னனான  துட்டைகைமுனு  இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், போரில் வென்ற பின்னர், இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும்  மகாவம்சம் நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கோயில் அமைப்பு
ஏழு மலைகளில் ஒன்றின் மீது கதிர்காம கந்தன் காட்சி கொடுத்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புரிந்ததைக் குறிக்கும் முகமாகவும் கதிர்காமக்கோயில் அவன் பெயரில் கட்டப்பட்டது. முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கோயில் சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கல் கட்டியால் கட்டப்பட்டுள்ளது. சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன.  கதிர்காம கந்தனின் அண்ணன் கணபதிக்கும் மூத்த மனைவி தெய்வயானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் அழகும் பொலிவுங்கொண்ட அரசமரம் உண்டு. இவ்வரசு புத்தருக்கும் விஷ்ணுவுக்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இருவாசல்கள் உள்ளன. தெற்கேயுள்ள பிரதான வாசல் வில்போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தே சிறு கதவுண்டு. தேவாலயத்திற்கு எதிரே கந்தனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மாவின் கோயில், இக்கோயிலுக்கு இட்டுச்செல்லும் வழி 300 யார் நீளமும் 20 யார் அகலமும் உடையது.
கருவறையின் சிறப்பு
ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரம ரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாத முறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளைச் செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்லமுடியாது
விழாக்கள்
வருடாந்தரப் பெருவிழா
பிரசித்தி பெற்ற கதிர்காமம் வருடாந்தரப் பெருவிழாவின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்தி வாய்ந்த யந்திரத்தைக் கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சூட்சுமசக்தி எங்கும் நிலவுகிறது. பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.  வருடாந்தரப் பெருவிழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வான சாத்திரத்தையொட்டி மிக நுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட பூரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். மாணிக்கங்கையாற்றின் நீர்ப் பரப்பில் பூசையில் வைக்கப்பட்ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார்.
பிற விழாக்கள்
ஆடித்திருவிழா ஆடி அமாவாசையில் தொடங்கி முழு நிலவு முடிய நடைபெறும். இதுபோன்றே கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு, தை மாதப்பிறப்பு, மாசிமகம்,  வைகாசி விசாகம் போன்ற நாட்களிலும் சிறப்பாக விழா எடுக்கப்பட்டு வருகின்றது.
கதிர்காம வேலவன் தோத்திம்
            காப்பு 1ம் நூல் 31ம் ஆக 32 பாடல்களால் ஆனது  கதிர்காம வேலவன் தோத்திரம்.  இச்சுவடி தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை நூலகத்தில் சுவடி எண்.2596இல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  இச்சுவடி ஒன்பது ஏடுகளைக் கொண்டு தெளிவான கையெழுத்தில் முழுமையாக அமைந்திருக்கிறது.  இந்நூல் எப்பொழுது எழுதப்பட்டது, யாரால் எழுதப்பட்டது, யாரால் எழுதுவிக்கப்பட்டது, இந்நூலாசிரியர் யார், அவரது காலம் என்ன என்பது போன்ற தகவல்கள் ஏதும் சுவடியில் இல்லை.  இருப்பினும் செய்யுள் நடை, எழுத்து நடை இவற்றைக் கொண்டு பார்க்கும் இச்சுவடி ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்.  நூலின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் “கதிகாம வேலோனே” என்று முடிக்கப்பட்டுள்ளது.
“சீறார் கதிர்கா மச்செவ் வேளரு முகவன்
பாராரும் மாலை தன்னைப் பாட வரமேயருள்வாய்
தாரார் குள(ழ)லுமைய் பாதா னீன்ற தற்பரனே
காராரு மேனி கணபதியே காப்பாமே.”
என்ற கணபதி காப்போடு இந்நூல் தொடங்குகிறது. இந்நூலுள் கந்தனின் பெருமைகள் பலவாறு எடுத்தோதப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.  அவற்றுள் சில மட்டும் இங்குக் காணலாம்.
            கந்தப்பெருமானின் பெயரை விளித்துக் கூறும் பாங்கு இந்நூலில் வெளிப்படுகிறது.  மாயோன் மருகன், அமரர் சிறை மீட்டவன், முக்கண்ணார் தன்புதல்வன், மயேஸ்பரன் புதல்வன், பெருமாள் மருகோன், வள்ளி பங்காளன், வேலாயுதன், விசாகன், தென்கோவே, சிவன்மகன் என்றெல்லாம் நூலாசிரியர் முருகப் பெருமானை இந்நூலுள் விளித்துக் கூறப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
            தனக்கு என்னனென்ன வேண்டும் என்பதை நூலாசிரியர் தம்முடைய பாடல்களில் பதிவு செய்திருக்கின்றார்.  தினந்தினமும் நான் உன்னைத் துதித்துப் பாடிக் கொண்டாடவும் பத்து லட்சங்க கோடி தமிழ்ப் பாடல்களில் உன்னையே வைத்துப் பாடவும் எனக்கு அருள் தரவேண்டும் என்றும், என்னுடைய வாக்கு மனம் அனைத்தும் உன்னையே பாட வரம் தரவேண்டும் என்றும், அனுதினமும் உன்னையே நினைத்துப் பாடும் எனக்கு உன்னுடைய மலர்ப் பாதத்தை வழங்கிடுவாய் என்றும், நான் துயரப்படுவதை நீயறியாமல் இருப்பாயோ என்றும் சுட்டுகின்றார். 
            “நித்தமுனைத் துதித்து நீரிலத்தோர் கொண்டாட
            பத்துலட்சங் கோடிதமிழ்ப் பாட வரமே யருள்வாய்”               (பா.1.1-2)
            “வாக்குமனது மொத்து வண்மையுட னின்பதத்தை
யேற்குந் தமிழ்ப்பாட யெனக்கு வரமே யருள்வாய்”               (பா.2.1-2)
“அனுதினமு முனைநினைந்து அடியேனு மீடே
உனதுடைய மலர்ப்பதத்தை யுகந்தெனக்கு நீயருள்வாய்”     (பா.3.1-2)
“என்னெஞ்சு நானுமிடஞ் சலப்படுந் துயரம்
உன்னெஞ் சரியாதோ உண்மையெனக் காத்தருள்வாய்”      (பா.18.1-2)
இவ்வரங்களை நீ எனக்கு அளித்தால் நான் எவ்வாறு இருப்பேன் என்பதையும் பல பாடல்களில் எடுத்தோதுகின்றார்.  அதாவது,  நினைவிலும் கனவிலும் என்றும் நான் உன்னை மறவேன் என்கிறார்.  இதனை,
            “மனதிலையும் பாக்கிலையும் வஞ்சக மில்லா தடியேன்
கனவிலையும் நான்மறவேன் கதிர்காம வேலோனே”           (பா.3.3-4)
எனும் பாடல் வரிகள் உணர்த்தக் காணலாம்.  மேலும், நான் இவ்வாறெல்லாம் உன்னிடம் இருக்கின்றேனே நீ மட்டும் என்னிடம் நல்லவிதமாக இல்லையே! என்னிடம் என்ன உனக்கு வெறுப்பு என்று கேட்கும் விதமாகவும் ஆசிரியர்,
“மனக்கோல மாகையினால் வந்தீர் மதியாமல்
இனக்கோ யவளுமக்கு யிட்ட மருந்தின் பிசகோ
பிணக்கோ யென்னோடுமக்குப் பேசாமல் மோடிபண்ண
கணக்கோ தான்சொல்லுங் கதிர்காம வேலேனோ.”              (பா.24)
என்கின்றார்.  பழம் புராணக் கூறுகளை வெளிப்படுத்தும் முகமாக சில புராணச் செய்திகளை ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.  விசையனுக்குச் சிவபெருமாள் பாசுபதம் வழங்கிய செய்தியையும், மகாசூரனை வதைத்து நாடு காத்த செய்தியையும், அமரர் சிறை மீட்டு வாழ்வளித்த செய்தியையும், ஔவையாரோடு முருகப்பெருமான் கலந்தாலோசனை செய்த செய்தியையும்,  பத்துத் தலையணிந்த இராவணைனை அடக்கிய மாயோனைப் பற்றிய செய்தியையும், தலையில் கங்கையை வைத்திருக்கும் சிவபெருமான் குறித்தும் தம்முடைய பாடல்களில் சுட்டிச் செல்கின்றார். இதனை,
“வில்லா லடித்த விசையனுக்குப் பாசுபதம்
வல்லாயுதங் கொடுத்த மயேஸ்பரன் புதல்வா”                       (பா.6.1-2)
“வாணா லுதைத்த மகாசூரனை வதைத்து
சேனாடு காத்தருளும் செங்கை வடிவேலோனே”                   (பா.8.1-2)
“மண்டிப்பெருமாள் சூரர் வானாள்தனை வதைத்து
தண்டித் தமரர்சிறை தான்மீண்டுஞ் சேவகனை”                    (பா.10.2-3)
“பொய்யாக வைத்தீர்போல் தலைமேல் பொற்பாதம்
மெய்யாக வைத்தால் வினையகலுங் கண்டீரே”                     (பா.13.1-2)
“பூட்டேனோ நானுமுந்தன் ஔவையிதன் வாயமிர்தம்
ஊட்டேனோ மெத்தவுப சாரஞ் செய்தாளோ”                        (பா.28.1-2)

“படைக்குப் பெரியதொரு பத்துமுடி ராவணனை
யடைக்கிச் சிரமமிணிந்த ஆயோன் மருகோனே
சடைக்குள் தண்ணீ ரணிந்த சங்கரனார் தன்புதல்வா”           (பா.31.1-3)
போன்ற பாடல் வரிகள் எடுத்தோதுகின்றன.  கந்தபெருமானின் அருள்திறம் குறித்தும் பலவாறாக ஆசிரியர் போற்றியுள்ளார்.  இதனைச்,
            “சுத்தனே ஞான சுடரே சுடர்க்கொழுந்தே
            பித்தனார் பேரேறே பெருமாள் மருகோனே
            குத்தமே செய்தாலுங் கொண்டு பொருத்தே யருள்வாய்”       (பா.7.1-3)
            “ஏட்டா லெழுத வொன்னா தெருத்தது துயிதிலங்கை
நாட்டா றரிய நடத்துவ துன்புதுமை
கோட்டானை சங்கங்கொடிப் புலிகள் வந்தாலுங்
காட்டாமலே யருவாள் கதிர்காம வேலோனே”                      (பா.12)
போன்ற பாடல் வரிகளின் வாயிலாக அறியமுடிகிறது. 
            இக்கட்டுரை, இலங்கையில் சிறப்பு வாய்ந்த ஊரான கண்டியில் குடிகொண்டிருக்கும் கதிர்காம வேலவனைப் பற்றிய தோத்திரத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய சில சிறப்புச் செய்திகள் மட்டும் இங்கு எடுத்தோதப்பட்டுள்ளன.  இதுபோல் முருகப்பெருமானின் தோத்திரங்கள் பலப்பல இன்னும் ஓலைச்சுவடிகளில் முடங்கிக் கிடக்கின்றன.  அவற்றையெல்லாம் எடுத்துப் பதிப்பிக்க வேண்டுவது இன்றைய தேவையாகிறது. 
நூல்
சீறார் கதிர்கா மச்செவ் வேளரு முகவன்
பாராரும் மாலை தன்னைப் பாட வரமேயருள்வாய்
தாரார் குள(ழ)லுமைய் பாதா னீன்ற தற்பரனே
காராரு மேனி கணபதியே காப்பாமே.
நித்தமுனைத் துதித்து நீரிலத்தோர் கொண் டாட
பத்துலட்சங் கோடிதமிள்(ழ்)ப் பாடவரமே யருள்வாய்
அத்தனருள் குமறா(ரா) ஆயோன் மருகோனே
கத்தனே யெங்கள் கதிர்காம வேலோனே.                             (1)

வாக்குமனது மொத்து வண்மையுட னின்பதத்தை
யேற்குந் தமிள்(ழ்)ப்பாட யெனக்கு வரமே யருள்வாய்
ஆற்(ர்)கும் பெரியோனே அமரர்சிரை மீட்டோனே
காற்கும்  பெருமாளே கதிர்காம வேலோனே.                         (2)

அனுதினமு முனைநினைந்து அடியேனு மீடே
உனதுடைய மலர்ப்பதத்தை யுகந்தெனக்கு நீயருள்வாய்
மனதிலையும் பாக்கிலையும் வஞ்சக மில்லாதடியேன்
கனவிலையும் நான்மறவேன் கதிர்காம வேலோனே.             (3)

அன்னையுநீ தந்தையுநீ ஆனாலும் மெந்தனுக்கு
பின்னை யுலகுதனில் பேசுவது நீயலவோ
முன்னே புறமெறித்த முக்கண்ணார் தன்புதல்வர்
கன்னல் மொளி(ழி)வள்ளி பங்கால கதிர்காம வேலோனே.   (4)

மயிலாடும் மாமலர்கள் வரிப்புலிகள் வானரங்கள்
பயிலாக வாழும் பரம்பது நன்னாட்டில்
துயிலாவிழக் கோழிபோல் துலங்கும் வடிவா கனத்தில்
கயிலாச மென்னுங் கதிர்காம வேலோனே.                           (5)

வில்லா லடித்த விசையனுக்குப் பாசுபதம்
வல்லாயுதங் கொடுத்த மயேஸ்பரன் புதல்வா
யெல்லாற்கும் நல்லபிறான் என்றேனே யென்னாளும்
கல்லாய் தோமளது கதிர்காம வேலோனே.                            (6)

சுத்தனே ஞான சுடரே சுடர்க்கொழுந்தே
பித்தனார் பேரேறே பெருமாள் மருகோனே
குத்தமே செய்தாலுங் கொண்டுபொருத்தே யருய்வாய்
கத்தனே யெங்கள் கதிர்காம வேலோனே.                             (7)

வாணா லுதைத்த மகாசூரனை வதைத்து
சேனாடு காத்தருளும் செங்கை வடிவேலோனே
பூணாரம் பூண்ட வுந்தன் பொற்கமலச் சேவடியைக்
காணாத கண்ணென்கண் கதிர்காம வேலோனே,                  (8)

செங்கரத்தில் வேலுதவுஞ் சிந்தையுள்ளே வீற்றிருந்து
பங்கப்படுந் துய்யும் பாதகமே தீத்தருள்வாய்
மங்கை வள்ளி பங்காளா மாணிக்க மின்றுதருங்
கங்கைவழ(ள) நாடான கதிர்காம வேலோனே.                     (9)

மின்(ண்)டிச்ச மாகழ(ள)த்தில் மென்மேலுங் கைகலந்து
மன்(ண்)டிப்பொருமாள் சூரா வானாள்தனை வதைத்து
தண்டித்த மரர்சிரை(றை) தான்மீண்(ட்)டுஞ் சேவகனை
கண்டிவழ(ள ) நாடான கதிர்காம வேலோனே.                      (10)

பாலாறு நெய்யாறு பரதேசிக் கன்னமிடுங்
கோலாகலக் குமறா(ரா) கோவேவினைத் துதிப்பேன்
வேலாயுதனே விசாகா விளங்கு தண்டை
காலாயுதக் கொடியேன் கதிர்காம வேலோனே,                     (11)

ஏட்டா லெழுதவொன்னா தெருத்தது துயிதிலங்கை
நாட்டா ற(ர)ரிய நடத்துவது உன்புதுமை
கோட்டானை(ச்) சங்கங்கொடிப் புலிகள் வந்தாலுங்
காட்டாமலே யருள்வாய் கதிர்காம வேலோனே.                   (12)

பொய்யாக வைத்தீர்போல் தலைமேல் பொற்பாதம்
மெய்யாக வைத்தால் வினையகலுங் கண்டீரே
அய்யா முருகா அன்புவள்ளி பங்காளா
கையாலுனைத் தொழுவேன் கதிர்காம வேலோனே.             (13)

நல்லா தற(ர)வுடனே நானுனது பாதகெதி
யல்லாது வேறுளதோ அஞ்சலெனக் காத்தருள்வாய்
பல்லாயிற(ர)ஞ் சொற்பகிற்(ர்)ந்து மென்நெஞ் சுருகி
கல்லாய தோமனது கதிர்காம வேலலோனே.                        (14)

நீயிருக்கத் தெய்வானை நேரிருக்க வள்ளியம்மை
தாயிருக்க செய்த சலித்து வருவானேன்
வேயிருக்க குழலூதி வெண்ணையுண்ட மால்மருகா
காயிருக்கு தென்கோவே கதிர்காம வேலோனே.                   (15)

உன்றாள் துணையெனவே உறுதியுட னம்புமெந்தன்
சிந்தாகுலந்த விளத்து செல்வமிகத் தந்தருள்வாய்
திந்தாவென் றாடுஞ் சிவன்மகனே தேவர்தொளு(ழு)ங்
கந்தா குமரா கதிர்காம வேலோனே.                                      (16)

பட்டுடைய மொப்பினையும் பாசாங் குசதாமும்
இட்டசரப பணியு மிலங்கு முகமாறுந்
துட்டான சூரர்களைத் துரத்திவடி வேல்விடித்து
கட்டழகா வாகா கதிர்காம வேலோனே.                                (17)

என்னெஞ்சு நானு மிடஞ்சலப் படுந்துயரம்
உன்னெஞ் சரியாதோ உண்மையெனக் காத்தருள்வாய்
அன்னஞ் சிறுநடையா ளன்புவள்ளி பங்காளா
கன்னெஞ்சோ நீதான் கதிர்காம வேலோனே.                       (18)

உண்டெனவே நாள்தோரு முன்பாதம் போற்றிசெய்ய
வண்ட(டெ)ன கவட்டு நெஞ்சனவஞ் சனுக்குநீ யிரங்காய்
அன்(ண்)டற் தமக்கு அருள்கொடுத்தால் போலிறங்கி
கன்(ண்)டன்பு தந்தருள்வாய் கதிர்காம வேலோனே.             (19)

சொல்லையா நெஞ்சிற் றுலையாக கவலை தன்னை
வெல்லையா யெந்தனக்கு வேண்டும் பதந்தாயர்
கல்லையா கந்தா கதிர்காம வேலலோனே.                            (20)

பூட்டுகிறீ ராசையின்பம் போதாக் குரச்சனுக்கு
மூட்டுகிறீர் சண்டைமுடிப் பெனக்குத் தந்தவர்போல்
தீட்டுகிறீர் தேனமிர்தஞ் செங்கையில் வைகுண்டந்தன்னை
காட்டுகிறீர் செம்மா கதிர்காம வேலோனே.                          (21)

உள்ளான னுப்பாமல் யோடிவந் தீராசை கொண்டு
துள்ளாதே போம்போம் துடுக்காகுமோ தீருடா
கள்ளா வரிவேன் கதிர்காம வேலோனே.                               (22)

துள்ளிமயி லேறி துடிதுடித்து ஓடிவந்தீர்
வெள்ளிநகை தந்தவற்போற் வேசையுடன் சொல்வானேன்
அள்ளிக் கொடுத்தாற் அழ(ள)ந்துகொடுத்தாற் கடன்காண
கள்ளியென்ன சொன்னீற் கதிர்காம வேலோனே.                 (23)

மன(ண)க்கோல மாகையினால் வந்தீர் மதியாமல்
இன(ண)க்கோ யவளுமக்கு யிட்ட மருந்தின் பிசகோ
பிணக்கோ யென்னோ டுமக்குப் பேசாமல் மோடிபண்ண
கன(ண)க்கோ தான்சொல்லுங் கதிர்காம வேலோனே.         (24)

என்னுடைய கவலை தன்னை யீடழிய வேல்விடுத்து
பண்ணுதமிழ்த் தெறிந்து படிக்கவரமே யருள்வாய்
அன்னநடை வள்ளிபங்கா ஆயோன் மருகோனே
கன்னல் சொறிமுத்தே கதிர்காம வேலோனே.                      (25)

போறீறோ தேவறீர் பொன்னுமயில் மீதேறி
வாறீறோ யென்வீட்டில் வந்தால் வாக்குன்ரமோ
நீற்தாமோ யென்னழவும் நெட்டூறுஞ் செய்தகந்தா
காறீறோ சொல்லுங் கதிர்காம வேலோனே.                          (26)

வச்சுதோ யன்பவளமேல் மாறன்விடுங் கணைகள்
தச்சுதோ மோகந் தலைக்குமேலாய் விடுமோ
பொச்சுதோ யென்வாற்(ர்)த்தை போச்சோ யென்மீன்பு
கச்சுதோ சொல்லுங் கதிர்காம வேலோனே.                          (27)

பூட்டேனே(னோ) நானுமுந்தன் ஔவையிதன் வாயமிர்தம்
ஊட்டேனோ மெத்தவுப சாரஞ் செய்தாளோ
காட்டேனோ சொல்லுங் கதிர்காம வேலோனே.                   (28)

பூ(ளுதோ) ஆசையின்பம் லொரிந்தியவள் சொல்ல
வேளுதோ யென்னிலவள் வேடிகளகப் பெண்ணாமோ
தோணுதோ நானுமக்கு தொக்கான பெண்போலே
காணுதோ சொல்லுங் கதிர்காம வேலோனே.                      (29)

மன்னீர்மையாக மனம்வைத்த நாள்முதலாய்
சொன்னீரெனை மறந்தீர் தோகைதனக் குள்ளானீற்
பன்னீர் தனக்குப் பல்நீர் நிகறாமா
கன்னீரென்ன சொன்னாள் கதிர்காம வேலோனே.               (30)

படைக்குப் பெறி(ரி)யதொரு பத்துமுடி றாவணனை
யடைக்கிச் சிரமணிந்த ஆயோன் மருகோனே
சடைக்குள் தண்ணீ ரனி(ணி)ந்த சங்கரனார் தன்புதல்வா
கடைக்குப் பதந்தருவாய் கதிர்காம வேலோனே.                   (31)

முற்றும்.
குமரன் துணை.