ஞாயிறு, 17 டிசம்பர், 2023

செயற்கரிய செய்வார் பெரியர்-சிறியர் யார்?

 

செயற்கரிய செய்வார் பெரியர்-சிறியர் யார்?

முனைவர் மோ.கோ. கோவைமணி

பேராசிரியர் (ப.நி.)

ஓலைச்சுவடித்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் – 613 010.

வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறளில் மூன்றாவது அதிகாரமான நீத்தார் பெருமை அதிகாரத்தின் முதற் குறளில் “ஒழுக்கத்து நீத்தார்” என்ற சொற்றொடரே அதிகாரத் தலைப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது.  ஒழுக்கம் என்பது ஓர் சீரான ஒழுங்கைக் குறிக்கும் சொல்லாகும்.  நீத்தார் என்பது துறந்தவர்கள் என்ற நேரயான பொருளைத் தரும்.  “ஒழுக்கத்து நீத்தார்” என்பது பற்றி மணக்குடவர் ‘ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தார்’ என்கிறார்.  காலிங்கர் ‘தாம் முன்னம் ஒழுகிய ஒழுக்கத்தினைப் பின்பு துறவு நெறி சொல்லுகின்ற ஒழுக்கத்தின் கண்ணே கருதி விட்டு நீங்கினார்’ என்கிறார்.  அதாவது, இல்லற ஒழுக்கத்தில் இருந்து துறவறம் சென்றவர்கள் என்பது இவரது கருத்தாக அமைகிறது.  ஒழுக்கத்து நீத்தார் என்பதற்கு தன்னலம் துறந்து அறச்செயல்கள் மேற்கொள்ளும் பெரியவர் எனப் பொருள் கொள்ளலாம். 

மேலும், மக்களின் நன்மைக்காக உயிர் நீத்தவர்களைக் குறிப்பகதாகவும், தியாகிகள் என்ற பொருளும் நீத்தாருக்குப் பொருந்துவதாக உள்ளது.  இச்சொல்லின் நேர்ப்பொருளை உற்றுப் பார்க்கும் போது நீத்தார் என்பது முற்றும் துறந்த முனிவர்களைக் குறிப்பதாகக் கருதுவர்.  ஆனால் இந்நூலுள் துறவுக்கு என்று தனி அதிகாரம் இருப்பதால் பாயிரத்தில் துறந்தாரைப் பற்றி எழுதத் தேவையில்லை.   வள்ளுவம் காட்டும் நீத்தார், பொதுநலம் நாடித் தவம் செய்பவர்கள்.  இவர்களுடைய தவமானது உடலாலும் உயிராலும் உணர்வாலும் செய்யக் கூடியது.  இவர்கள் தனக்கென்று இல்லாமல் பிறரின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றுபவர்கள்.

          அறத்தையே தன்னுடைய வாழ்க்கைப் பணியாகக் கொண்டு, அதற்காகவே தம்மை அர்ப்பணித்து தொண்டு செய்து மாந்தர்களின் வாழ்க்கையைச் செப்பமாக்கும் செம்மல்களாக விளங்கும் அப்பெரியவரை வள்ளுவர் ஒழுக்கத்து நீத்தார், தன்னலம் துறந்தார், அறம் பூண்டார், ஐந்தையும் காப்பான், ஐந்து அவித்தான், செயற்கரிய செய்வார், ஐந்தின் வகை தெரிவான், நிறைமொழி மாந்தர், குணமென்னும் குன்றேறி நின்றார், அறவோர் என்றெல்லாம் சிறப்பிக்கின்றார். 

          சமுதாயத்தை இயக்கும் உயர்ந்தோரது தன்னலமற்ற தொண்டு பற்றி எடுத்துரைக்கும் அதிகாரமே நீத்தார் பெருமை ஆகும்.   குறள் கூறும் நீர்தார் என்பவர் துய்த்தலைத் துறந்தவர், மக்களுள் சிறந்தவர், தன்னலம் கடிந்து பிறர் நலம் பேணும் பெற்றியாளர், வாழ்க்கையின் சுமை தாங்கமாட்டாது கசப்புற்று உலகினைத் துறந்தவர் அல்லர்.  வாழ்க்கையை வெறுத்தவர் அல்லர்.  வாழ்வின்பம் துய்த்தோ துய்க்காமலோ வாழ்வும் மனமும் முதிர்ச்சி பெற்று அறநெறி நிற்கும் தூயவர்.  அவர்கள் அறத்தைப் பணியாகக் கொண்டதால் அறவோராயினர்.

அறத்தை அறத்திற்காகவே செய்பவர்கள், தீய நெறிகளை ஒதுக்கி மன உறுதியுடன் ஐம்புலன்களை ஒடுக்கி, விழுப்பமுடைய வினைகளை ஒழுக்கம் வழுவாது ஓம்பி தொண்டாற்றுபவர்.  சமயம், மொழி, இனம், குலம், குடி என்ற வேறுபாடு ஏதுமில்லாமல் யாவரிடமும் கருணை காட்டுபவர். இவர்களின் பெருமையை எடுத்துரைப்பதாக நீத்தார் பெருமை அதிகாரக் குறட்பாக்கள் அமைந்திருக்கின்றன.  இவற்றில், “செயற்கரிய” எனத் தொடங்கும் நீத்தார் பெருமை அதிகாரத்தில் வரக்கூடிய 26ஆம் குறள் திருவள்ளுவரின் வாக்காக இருக்குமா? என்கிற கருதுகோளை வினாவாக எழுப்பி, திருவள்ளுவப் பெருந்தகையின் உண்மையான வாக்கு, எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை நிரூபிக்கும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

உரையாசிரியர்கள்     

திருக்குறளுக்குப் பழைய உரையாசிரியர்கள் பத்துப் பேர் என்பது மரபு. இதனை,

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்.

எனும் பழம்பாடல் மூலம் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பத்துப்பேர் உரையெழுதினர் என்றும், இவர்களின் காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை என்றும் அறிய முடிகின்றது.

வர்களில் மணக்குடவர் முதல் உரையாசிரியர் என்பது ஆய்வாளர்களின் துணிபு. பழைய உரையாசிரியர்கள் பத்துப்பேர் என்றாலும் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர், பரிமேழகர் ஆகிய ஐவரின் உரைகளே இதுவரை கிடைத்துள்ளன. ஏனையோர் உரைகளில், ஒரு சில குறள்களுக்கு மட்டுமே உரைகள் கிடைத்துள்ளன.  தமிழிலக்கியங்களில் மிகுதியாக உரை கண்ட நூல் திருக்குறள்.

இவ்வுரைகளில், “மணக்குடவர் உரை இயல்பாகவும் எளிமையாகவும் அமைந்துள்ளது.  பரிப்பெருமாள் உரை பெரிதும் மணக்குடவரைச் சொல்லிலும் பொருளிலும் தழுவிச் செல்வது. பரிதியார் உரை பல இடங்களில் நூலறுந்த காற்றாடிபோல் மூலத்தோடு தொடர்பில்லாமல் தனித்து நிற்பது. காளிங்கர் உரை நல்ல நடையழகோடு அமைந்திருப்பது. பரிமேலழகர் உரை செறிவும் நுண்மையும் இலக்கணத் திட்பமும் உடையதாய் இருப்பது” என்கிறார் தெ. ஞானசுந்தரம்.

பழைய உரைகளில் பரிமேலழகர் உரையே தனிச்சிறப்போடு திகழ்கிறது. அதனை மூலநூலுக்கு இணையாகப் போற்றிப் பரவுவாரும் உண்டு. சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் திருக்குறளுக்குப் பலப்பல உரைகள் வந்துள்ளன.  குறிப்பாக, நாகை தண்டபாணிப் பிள்ளை, தேவநேயப்பாவாணர் போன்றோரின் புலமையுரையும்,  கா.சு.பிள்ளை, மு.வரதராசனார், இரா.சாரங்கபாணி போன்றோரின் எளியவுரையும், வ.உ.சி., நாமக்கல் இராமலிங்கம்பிள்ளை போன்றோரின் காந்தியப் பார்வையில் உரையும், கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் போன்றோரின் பகுத்தறிவுப் பார்வையிலான உரையும், பொதுவுடைமைப் போக்கிலும் சமயநோக்கிலும் எழுதப்பட்ட உரைகளும் உண்டு.

கோ.வடிவேலுச்செட்டியார், வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் போன்றோர் தாம் பதிப்பித்த பரிமேலழகர் உரையில் இலக்கண இலக்கிய நுட்பங்காட்டும் அரிய குறிப்புரையும், டாக்டர் மு.வ அவர்களின் கையடக்க உரைப் பதிப்பினையொட்டி வெளிவந்துள்ள அவ்வகைப் பதிப்புகளுக்குக் கணக்கேயில்லை. இன்னும் வந்துகொண்டே இருக்கிறது.

தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் எந்த வகையிலேனும் திருக்குறள் தொடர்பான நூல் படைப்பதில் தணியாத ஆர்வம் உடையவர்களாக விளங்குகிறார்கள். இப்போக்கு மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், பெரும்பாலான உரைகள் முன் வந்த உரைகளையே பெரிதும் சார்ந்து உரையாசிரியர்களின் பங்களிப்பு ஏதுமின்றி காணப்படுகின்றன. எந்தப் போக்கில் அமைந்த உரையாக இருந்த போதிலும் அதில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் பரிமேலழகரின் உரை பின்பற்றப்பட்டிருத்தல் காணலாம்.  ஒரு சிலவற்றிலேயே புதிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன” என்கிறார் தெ. ஞானசுந்தரம். 

உரைகள்

“செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்

செயற்கரிய செய்கலா தார்”    (திருக்குறள்.26)

என்ற குறட்பாவுக்குப் பழைய உரைகள் தொடங்கி தற்காலம் வரை பல்வேறு உரைகள் எழுந்திருக்கின்றன.  இவற்றில் குறிப்பாக சில உரையாசிரியர்களின் உரைகள் இக்குறட்பாவிற்குப் பின்வருமாறு வரைந்துள்ளனர்.

பரிமேலழகர் உரை

செயற்கரிய செய்வார் பெரியர் - ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கெளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்; செயற்கரிய செய்கலாதார் சிறியர்  - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர்.

செயற்கெளியவாவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களிற் செலுத்தலும், வெஃகலும், வெகுடலும் முதலாயின.  செயற்கரியவாவன இயமம், நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புக்கள்.  நீரிற் பலகான் மூழ்கல் (புறப்பொருள் வெண்பா மாலை, வாகைத்திணை, 14) முதலாய "நாலிரு வழக்கிற் றாபத பக்கம்" (தொல். பொருள். புறத்.20) என்பாருமுளர். அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கேலாமை அறிக.

மணக்குடவர் உரை

செயற்கு அரியன செய்வாரைப் பெரியோர் என்று சொல்வர்; அவற்றைச் செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினும் சிறியோரென்று சொல்லுவார் என்றவாறு.

செயற்கரியன – இயமம் நியமம் முதலாயின.  இவ்வதிகாரம் நீத்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார்; செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று.

பழைய உரை

ஒருவராலும் செய்தற்கரியனவே செய்வார் பெரியர்; சிறியவர் அவ்வாறு செய்யமாட்டார்.

பரிதியார் உரை

ஒருவராலுஞ் செயற்கரிய துறவறத்தைச் செய்வார்  பெரியர்; சிறியவர் செய்யுந் தொழிலாகிய இல்லறஞ் செயலறியா ரென்றவாறு.

காளிங்கர் உரை

யாவரானுஞ் செய்தற்கரியவாகிய தவநெறித் திறத்தைச் செய்து முடிப்பார் உலகத்துப் பெரியோரென்று சொல்லப்படுவார்; மற்றிவற்றை முயன்று முடிக்கலாகாரே சிறியரென்று சொல்லப்படுவார் என்றவாறு.

பரிப்பெருமாள் உரை

செயற்கு அரியன செய்வாரைப் பெரியரென்று கொள்ளப்படும்.  அதனை செய்யமாட்டாதாரைத் துறந்தார் ஆயினுஞ் சிறியரென்று  கொள்ளப்படும் என்றவாறு.

செயற்கரியன – இயம நியம முதலியன.  இவ்வதிகாரம் துறந்தார் பெருமையென்று கூறப்பட்டதாயிலும், துறவு மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படாது.  செயற்கரிய செய்வாரையே பெரியரென்று கொள்ளப்படுவதென்று கூறப்பட்டது.

ஜைன உரை

மனுஷ சென்மத்திலே பிறந்துஞ் செய்கிறத்துக்கும் (செய்கிறதற்கும்) அருமையா யிருக்கிற தானம் தர்மம் விரதந் தபசு இதுகளைச் (இவற்றை) செய்கிறவர்கள் பெரியவர்கள்.  இதுகளைச் (இவற்றை) செய்யமாட்டாம லெளிதாயிருக்கிற சங்கார (சம்சார) காரியங்களைச் செய்கிறவர்கள் சிறியவர்க ளென்பதாம். 

இராமாநுஜக் கவிராயர் வெள்ளுரை

பிறப்பு ஒத்தவராகிய மனிதருக்குள்ளே எளியவைகளைச் செய்யாது செய்வதற்கு அரியவைகளைச் செய்பவர் பெரியவராம்.  அந்த எளியவைகளைச் செய்து செய்வதற்கு அரியவைகளைச் செய்யமாட்டாதவர் சிறியவராம் என்றவாறு.

செய்வதற்கு எளியவைகளானவை, மனத்தை வேண்டியபடியே இந்திரிய வழியாக ஐம்புலன்களிலே செலுத்துவதும், பேராசை கொள்வதும், கோபித்தலும், முதலானவையாம்.  செய்வதற்கு அரியவைகளானவை, இயமம், நியமம் முதலான எட்டுவகை யோக அங்கங்கள் முதலானவையாம்.  இனி நீரிலே பலகால முழுதுவது முதலான எட்டு வகைப்பட்ட முனிவர் இடத்து வழக்கு என்று சொல்வாரும் உண்டு.  அவை நியமத்துள்ளே அடங்குவதினாலே துறந்தார் பெருமைக்கு ஒவ்வாமை அறிக.

சரவணப் பெருமாளையர் தெளிபொருள் விளக்கம்

ஒத்த பிறப்பினராகிய மனிதர்களிலே பெரியர்-பெரியோர் செயற்கரிய- செய்தற்கரியவைகளை செய்வார்-செய்வார்கள்.  சிறியர்-சிறியோர் செயற்கரிய - அச்செய்தற்கரியவைகளை செய்கலாதார் – செய்யமாட்டார் என்றவாறு.

எனவே, பெரியோர் செய்தற்கெளியவைகளைச் செய்யாரென்பதும், சிறியோர் அவைகளைச் செய்வார் என்பதும் தோன்றுதல்  அறிக.  செய்தற்கெளியவை – மனத்தை வேண்டியபடியே போகவிடுதல், ஆசை கொள்ளுதல், கோபித்தல் இவை முதலானவையாம்.  செய்தற்கரியவை – இயமம், நியமம், இவை முதலான எண்வகை யோகங்களாம்.

வேதகிரி முதலியார் கருத்துரை

ஒத்த பிறப்பினராகிய மனிதர்களிலே பெரியர்-பெரியோர் செயற்கரிய- செய்தற்கரியவைகளை செய்வார்-செய்வார்கள்.  சிறியர்-சிறியோர் செயற்கரிய - அச்செய்தற்கரியவைகளை செய்கலாதார் – செய்யமாட்டார் என்றவாறு.

பெரியோர் செய்தற்கரியவைகளைச் செய்வார்கள்.  சிறியோர் செய்தற்கரியவைகளைச் செய்யார்கள் என்பதாம்.  எனவே, பெரியோர் செய்தற்கெளியவைகளைச் செய்யாரென்பதும், சிறியோர் அவைகளைச் செய்வார்ரென்பதும், தோன்றுதல் அறிக.  செய்தற்கெளியவை, மனத்தை  வேண்டியபடியே போகவிடுதல், ஆசை கொள்ளுதல், கோபித்தல், இவை முதலானவையாம்.  செய்தற்கரியவை, இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என எண்வகை யோகங்களாம்.

சுந்தர முதலியார் கருத்துரை

பெரியோர் செய்தற்கு அரிதானவைகளை அறிந்து செய்வார்கள். சிறியோர் அவ்விதம் அறிந்து செய்யார்கள்.

ஆ. அரங்கநாத முதலியார் கருத்துரை

ஒத்த பிறப்பினராகிய மனிதர்களிலே செய்வதற்கு அரிய காரியங்களைச் செய்பவர் பெரியோர் ஆவர்.  அவ்வரிய காரியங்களைச் செய்யத் திறமையற்றவர் சிறியோர் ஆவர்.

நா. கிருஷ்ணசாமி நாயுடுவின் விசேஷ ஞான விருத்தி

ஆழிய கடலுள் அமிழ்ந்து நீந்தத் தெரியாமல் தத்தளிக்கின்ற ஒருவன் ஆங்கே தற்செயலாக வருகிற ஒரு மரக்கட்டையை அவாவிப் பிடித்து அதன் மீதேறி இருந்துகொண்டு பின்னர் பிழைத்துய்ய வழி பார்ப்பதல்லாமல் அசிரத்தையாக அக்கட்டையை அகலவிட்டுவிட்டால் அவன்கதி அதோகதியாவது போலவே நல்வினைப் பயனால் சுவர்க்கத்திற்கும் தீவினைப் பயனால் நரகத்திற்கும் இவ்விரண்டினும் எஞ்சிநின்ற பயனால் புவனத்திற்கும் போக்குவரத்தாகக் காற்றில் பஞ்சு சுழல்வது போல் சுழன்று கொண்டிருக்கிற ஆன்மாக்கள் தற்செயலாகக் கிடைத்திருக்கிற இம்மானிட சரீரத்தைப் பெற்றுங்கூட மோட்ச இச்சையில் அசிரத்தையாய்ப் போக இச்சையில் மருந்டு மனத்தை அதன் இஷ்டப்படி போக விடுதல் பற்றி அவரைச் “சிறியர் செயற்கரிய செய்கலாதார்” என்றும் இத்துன்பங்களை எல்லாம் உணர்ந்து மாய்கையெனத் தள்ளி யோக முதலிய அரிய செயல்களைச் செய்வதற்கேற்ற மானிடப்பிறவி நழுவுதற்கு முன்னரே ஆத்மாவாகிய தன்னை அறிய விரும்பும் துறவிகளைச் “செயற்கரிய செய்வார் பெரியர்” என்றும் கூறியருளினாரென்ப.  இதனை “இந்த மானிட தேகமும் நழுவிடில் இரு வருகிற தேகம் வந்த மானிட தேகமென் றெண்ணிட வகையிலை யதனாலே பந்தமற்றுனைப் பரம்பொருள் நீயெனப் பார்த்திட மறந்தீங்கே பிந்தவிட்டனை என்றிடிற்கெட்டனை பிறப்பிறப்பகலாதே” என்ற சுயம்பிரகாச ஆத்மஞான விளக்கச் செய்யுளாலும் அறிந்துகொள்ளலாம்.

மு.வரதராசனாரின் தெளிவுரை

செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர்.  செய்வதற்கு அரிய செயல்களைச் செய்ய மாட்டாதவர் சிறியோர்.

வ.சுப. மாணிக்கம் தெளிவுரை

அரிய செயல்களைச் செய்பவர் பெரியவர்.  அவற்றைச் செய்ய முயலாதவர் சிறியவர்.

கலைஞர் உரை

பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.

சாலமன் பாப்பையா உரை

பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

கருதுகோள் ஆய்வு

இவை போன்ற உரைகளை உற்று நோக்கும்போது செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர் பெரியோர் என்றும், அவ்வரிய செயல்களைச் செய்யாமல் எளிய செயல்களைச் செய்பவர் சிறியோர் என்றும் கொள்ள முடிகிறது.  இக்கருதுகோல் உரையானது இப்பொழுது நடைமுறையில் உள்ள குறட்பா வரிக்குப் பொருந்துவதாக அமையலாம்.  ஆனால், வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு இதுவாக இருக்காது என்பதைக் கருதுகோளாக் கொண்டு ஆராயும் போது,

செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்

          செயற்குரிய செய்கலா தார்.

என்றிருக்க வேண்டும் என்று எண்ணத் துணிய முடிகிறது.  இதற்கான காரணங்களைப் பின்வருமாறு ஆராய முற்படுகிறது இவ்வாய்வு.

          ஓலைச்சுவடியில் இருக்கக் கூடிய எழுத்தமைவுகளைப் பார்க்கும் போது சில எழுத்து வரிவடிங்கள் மயக்க எழுத்துக்களாகத் தோற்றம் அளிக்கும்.  ஓலைகளில் எழுத்தைக் கீறல் முறையில் உருவாக்குகின்றனர். 

கீறல் முறையில் எழுத்தினை உருவாக்கும் போது எழுத்து கீறக் கீற ஓலை எழுத்தின் அளவு ஓலை இடம் பெயர்ந்துவிடும்.  அப்படிப் பார்க்கும் போது கீறப்பெற்ற எழுத்திற்குப் பின்னோக்கி வரக்கூடிய வடிவங்களை இன்று நாம் காண்பது போல் முழுமையாகக் கீற முடியாத அளவுக்கு அமைவதால் குறைபாட்டோடு கீறி முடிப்பர். 

அவ்வாறு கீழ் விலங்கு மற்றும் கீழ் விலங்கு சுழி அமையக் கூடிய கு, டு, மு, ரு, ழு, ளு, டூ, மூ, ரூ, ழூ, ளூ ஆகிய எழுத்துக்களைக் கீறும்போது முதலில் அகர உயிர்மெய் கீறப்பெற்றதின் ஈற்றுப் பகுதியில் இருந்து கீழ் விலங்கையோ கீழ் விலங்கு சுழியையோ கீற வேண்டும்.  அகர உயிர்மெய் எழுத்து கீறி முடிக்கப்பெற்ற பின் அந்த எழுத்து கீறப்பெற்ற அளவுக்கு ஓலை இடம்பெயர்ந்து இருக்கும். 

இந்நிலையில் கீழ் விலங்கையோ கீழ் விலங்கு சுழியையோ கீறும் போது தேவையான அளவுக்குக் பின்னோக்கி வலைத்துக் கீறுவதில் எழுத்து கீறுபவனுக்குச் சிக்கல் ஏற்படும்.  மேலும், எழுத்து எழுதும்போது வெள்ளோலையில் எழுதினைக் கீறுவதால் உருவாகும் எழுத்தானது வெள்ளெழுத்தாக இருப்பதாலும், இவ்வகைப்பட்ட எழுத்துக்களை முழுமையாகக் கீறமுடியாமல் குறைபட்டுக் கீறுவதாலும் வரிவடிவத்தில் மயக்கம் ஏற்படும். 

இவ்வாறு அமையும் போது குகரம் ககரமாக மயங்கி நிற்கும்போது அதைப் படிப்பவரோ படியெடுப்பவரோ அங்கே தோன்றும் வரிவடித்தைப் படிப்பதாலோ படியெடுப்பதாலோ எழுத்து மயக்கத்தால் சொல் மாற்றம் காண்பது இயல்பு.  இந்நிலையில் தான், செயற்குரிய என்ற சொல் செயற்கரிய என்றவாறு படிக்கப்பெற்றும் எழுதப்பெறும் காலப்போக்கில் செயற்கரிய என்றே நிலைத்து விட்டது எனலாம். 

தெய்வப் பெருந்தகை வள்ளுவரால் தோன்றுவிக்கப்பெற்ற இந்நூல் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பெற்ற உரைகள் எழுத்து மயக்கத்தால் எழுதப்பெற்ற ஓலைச்சுவடிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அதற்கான உரைகளையே கண்டிருக்கின்றனர்.  இவ்வெழுத்து மயக்கத்தால் யாப்பு குறைபாடும் (வெண்சீர் வெண்டளை) ஏற்படாததால் இவ்வுரைகள் வள்ளுவரின் உயரிய நோக்கத்தை எடுத்துரைக்காமல் எழுதப்பெற்றிருக்கின்றன எனலாம். 

அதாவது, யாவராலும் செய்ய முடியாத செயல்களைச் செய்து முடிப்பவர்கள் பெரியோர் என்றும், அவர்களாலே செய்யத்தக்க செயல்களையும் செய்யமாட்டாதவர்கள் சிறியோர் என்றும் கொண்டால்தான் வள்ளுவரின் உண்மையான நிலைப்பாட்டை உணர முடியும்.  செயற்கரிய செயல்களைச் செய்யாதவர் என்பதை விட செயற்குரிய செயல்களைச் செய்யாதவரே சிறியவர் என்று எண்ணிப்பார்த்தால் வள்ளுவரின் உள்ளம் உச்சிமேல் விளக்காகும்.

புதன், 22 நவம்பர், 2023

பன்னிரு பாட்டியல் மூலமும் உரையும் - அணிந்துரை

 

பன்னிரு பாட்டியல் மூலமும் உரையும்

அணிந்துரை

முனைவர் மோ.கோ. கோவைமணி

பேராசிரியர் (ப.நி)

ஓலைச்சுவடித்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர் – 613 010.

 

எழுத்தியல், சொல்லியல், இனவியல் பற்றி எடுத்துரைக்கும் பாட்டியல் நூல்கள் தமிழில் பல உள்ளன.  அவற்றில் அறுபத்தொரு பா இனங்களை எடுத்துரைக்கும் பன்னிரு பாட்டியல் சிறப்பானதாகக் கருதப்பெறுகிறது. இந்நூலின் ஆசிரியர் பெயரும்  காலமும் மதமும் தெரியவில்லை.  எனினும்  "அவை, பண்டைச் சான்றோர்களால் செய்யப்பட்டன அல்ல; பிறராற் செய்யப்பட்டு, அவற்றிற்கு மேன்மை தோன்றற் பொருட்டுப் பண்டையச் சான்றோர்களால் இயற்றப்பட்டவை எனக் கற்பனையாக வழங்கப் பட்டனவாகவேனும், பிற்காலத்து அப்பெயர் கொண்டிருந்தவர்களாற் இயற்றப்பட்டனவாகவேனும் இருக்கும்" என்கின்றனர். இவ்வாறு  கூறுவதற்கான முக்கிய  காரணங்கள் இரண்டாகக்  காணலாம்.

1. பாட்டியல் நூல்களில் உள்ள முதல் சீரானது முக்கியமானதாகக் கருதுகின்றனர். அதில் அறியப்படும் பொருத்தங்கள் யாவும் வடமொழி நூல்களின் மரபைத் தழுவி இருந்தாலும் தமிழுக்கே உரிய செந்தமிழ் வழக்கைக் கொண்டே பாடலை இயற்றினார்கள் பழந்தமிழ் புலவர்கள். இதனால் வடமொழி நூலைத் தழுவி இயற்றினார்கள் என்னும் கருத்தை ஏற்கபடமாட்டாது

2. பண்டைச் சான்றோர்கள் இயற்றிய பாடல்கள் அனைத்தும் தொகை நூல்களில் சேர்த்துள்ளனர். இத்தகைய புலவர்கள் இயற்றியதாகக் காணப்படும் நூற்பாக்களின் நடை வேறுபட்டிருக்கின்றன. இதனால் அப்புலவர்கள்தான் இந்நூற்பாக்களை இயற்றினார்கள் என்பது ஏற்கவியலாது.

சிலருடைய செய்யுள்கள்   யாவும் ஒரே நடையில் அமைந்திருக்கும். ஆனால் சிலரது  நடை வன்மை, மென்மை பொருந்தியதாக இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் அறியலாகும் கபிலரின் பாடல்களை நூற் பயிற்சியாளரும் பன்முக  நோக்கம் கொண்டவரும்   காணும்போது கடுமையாக இருக்க, அவர் இயற்றிய  இன்னா நாற்பது கற்பதற்கு எளிமையாக இருக்கின்றது. அதைப் போலவே எட்டுத் தொகையில் காணப்படும் சீத்தலைச் சாத்தனார் பாடல்கள் வன்மை உடையதாக இருக்க,  அவர் இயற்றிய மணிமேகலை எளிய நடையைக் கொண்டிருக்கின்றது. அதனால் இந்நூல்களில் உள்ள நடைக்கும் அதே புலவர்கள் இயற்றிய தொகை  நூல்களின் உள்ள நடைக்கும் வேறுபாடு உண்டு. எனவே, நடை வேறுபாட்டைக்  அப்புலவர்கள் இந்த நூல்கள் இயற்றவில்லை என்னும் கருத்தை ஏற்கவியலாது

இந்நூலை இயற்றியவர் சிறந்த புலமை உள்ளவராகத்தான் இருக்க வேண்டும். இருந்தாலும் இந்நூலில் சிறப்புப்பாயிரம் இல்லாததால் நூலாசிரியர் பெயர், காலம், மதம் போன்ற விவரம் தெரியாத நிலை இருக்கிறது.  இந்நூற் பதிப்பானது திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள சுவடியை அடிப்படையாகக் கொண்டு பேராசிரியர் ப. ஜெயகிருஷ்ணன் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றிருக்கிறது. 

வெண்பாப்பாட்டியல் போன்ற வேறு சில பாட்டியல் நூல்களில் பொன், பூ முதலிய மங்கலச் சொற்கள்  இடம்பெறுவதை மங்கலப் பொருத்தம் எனவும், மூன்று முதலிய எழுத்துக்கள் வருவதை எழுத்துப் பொருத்தம் எனவும்  பொருள் தரும் சொற்களை ஈறு திரிதல் வகையில் இடம்பெறாமல்  அமைப்பதைச் சொற் பொருத்தம் எனவும் அமைத்துக் கூற இப்பன்னிரு பாட்டியல் மேற்குறிப்பிட்ட யாவும் ஒரே பொருத்தமாக மங்கலப் பொருத்தத்தில் வைத்துச் சிறப்பித்துக் கூறியிருப்பது நோக்குதற்கு ரியதாகும்.

பாப்பொருத்தத்தில் சாதிக்கேற்பப் பாக்களை அமைக்குமாற்றைச் சொல்லும் நூற்பாவில்,

 “தவிர்ந்தனர் வரையார்”

என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த அந்தச் சாதிக்கு உரிய பாவே அந்தந்தச் சாதிக்கு அமைத்தல் வேண்டும். கவிஞர் ஒரு சாதியினருக்குரிய பாவினை மற்றொரு சாதியினருக்குப் பாடினாலும் புவர்கள் ஏற்றுக்கொள்வார்.  இங்குத் தவிர்ந்தனர், வரையார் என்று இரண்டு அர் விகுதிகள் இடம்பெற்றிருப்பது  என்பது சொற்பொருள் பொருந்துவதாக இல்லை.  எனவே, 'தவிர்ந்தன வரையார்' என்று இருந்திருக்க வேண்டும் என்று கா.ர. கோவிந்தராச முதலியார் தன்னுடைய பன்னிரு பாட்டியல் உரையில் எடுத்துரைத்திருக்கின்றார். 

அதேபோல், பிள்ளைப்பாட்டின் காப்பிற்குரிய கடவுளர் பற்றி எடுத்துரைக்கும் நூற்பாவில்,

“எழுவகை மங்கையர் இந்திரர் சாத்தன்”

என்றிருப்பதில் இந்திரர் என்பது இந்திரன் என்றிருக்க வேண்டும் என்று கா.ர. கோவிந்தராச முதலியார் தன்னுடைய பன்னிரு பாட்டியல் உரையில் எடுத்துரைத்திருக்கின்றார். அவரது கருத்திற்கு ஏற்ப இந்நூற்பாக்கள் இச்சுவடியில் அமைந்திருப்பது இப்பதிப்பின் சிறப்பாகக் கருதலாம்.

       அறுபத்தொரு பா இனங்களை எடுத்துரைக்கும் இப்பன்னிரு பாட்டியலின் இனங்கள் இன்னவை என்பதை எடுத்துரைக்கும் “மேதகு சாதகம்” எனத் தொடங்கும் நூற்பாவில் 58 இனங்கள் மட்டுமே கூறப்பெற்றிருக்க இன விளக்கத்தில் சாதகம் முதல் கையறுநிலை இறுதியாக 61 இனங்களை மேலது நூற்பாவில் கண்டதுபோல் வரிசைப்படுத்தி விளக்கி இருக்க, சொல்லிய எனத் தொடங்கும் இடத்தில் வரவேண்டிய செந்தமிழ் மாலையும்,  செருக்கள வழியை அடுத்து வரவேண்டிய மறக்கள வஞ்சி, செருக்கள வஞ்சி ஆகியனவும் மேலது தொகுப்பு நூற்பாவில் விடுபட்டிருக்கின்றன.  இவற்றைக் கா,ர. கோவிந்தராச முதலியார் இடைச்செருகலாகச் சேர்த்திருக்க இப்பதிப்பில் அடிக்குறிப்பில் சுட்டிச் சென்றிருப்பது பதிப்பாசிரியரின் பதிப்பு நேர்மையைச் சுட்டுகிறது.

'பணைமுலை நயனம்' என்பதை இரண்டாகப் பிரித்து பணைமுலை, நயனம் என்று பத்துப் பத்தாகச் சேர்த்து 'பணை முலை பத்து, நயனப்பத்து என்றானது. இரண்டு நூலாக இருப்பதை பத்து என்பதை நோக்கி ஒன்றாகச் சேர்த்துள்ளனர். விருத்த வகையில் பணைமுலை பத்து, பயோதரப் பத்து எனக் கூறியுள்ளனர்.  ஆக, ஒரே தலைப்பில் இரண்டு இலக்கிய வகைகளைச் சுட்டியிருப்பது நோக்கத்தக்கது.

'திங்கள்' என்று கூறாமல் 'ஆன்ற திங்கள்' என்றது, பிள்ளைப் பாட்டை ஒற்றைப்படை எண்களில்   உள்ள மாதங்களில் கேட்க வேண்டும் என்பதும் அதேபோல் ஒற்றைப்படையான மூன்று, ஐந்து, ஏழு ஆண்டுகளில் கேட்டாலும் பிழையாகாது என்ற வச்சணந்திமாலை மற்றும் இலக்கள விளக்க நூற்பாக்களின் கருத்தை இப்பாட்டியல் எடுத்துரைத்திருப்பாது நோக்கற்பாலது.

முன்னைய பதிப்புக்களில் இல்லாத சில நூற்பாக்களும் சில மேற்கோள் நூற்பாக்களும் இச்சுவடியில் இடம்பெற்று இருக்கின்றதைப் பதிப்பாசிரியர் அடிக்குறிப்பில் எடுத்துரைத்திருக்கின்றார்.  குறிப்பாக, உண்டி மற்றும் பால் பகுதிகளில் இல்லாத பின்வரும் மேற்கோள் நூற்பாக்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

43. நஞ்செனப் படுபவை நாடுங் காலை

   யரல ஆஓ வியைந்தவு மளபுங்

   குறுகிய வொற்றெழுத் திரண்டுங் கொளலே.   

44. நஞ்செனப் படுபவை பெயரொடு கிற்பிற

   றுஞ்சல் கெடுதல் சொல்லினர் புலவர்.  

46. ஆண்பெண லியென நின்ற மூன்றே

    பாலென மொழிந்தனர் நூலறி புலவர்.

என்னும் நூற்பாக்கள் மேற்கோள் நூற்பாக்களாக சுவடியில் இடம்பெற்றிருக்கின்றன. முன்னைய பதிப்புக்களில்

நெடிலேழ் இருவகை பெண்பால் என்ப

என்ற 49ஆம் நூற்பாவானது சுவடியில்,

        ஆணெழுத் தென்ப க்கரமோ டைங்குறில்

       நெடிலே ழிருவகை பெண்பா லென்ப

என அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டலாம். அதேபோல்,

        ஒற்றும் ஆய்தமும் அலியெனப் படுமே

என்ற 50ஆம் நூற்பாவானது சுவடியில்,

        நெட்டெழுத் தேழும் பெண்னெப் படுமே

       ஒற்று மாய்தமு மலியெனப் படுமே

என அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டலாம்.  முன்னையப் பதிப்புக்களில் மேற்கோள் நூற்பாவாகக் காட்டப்பெற்ற சில நூற்பாக்கள் இச்சுவடியில் நூற்பாவாகக் காட்டப்பெற்றுள்ளன.  குறிப்பாக,

       இயற்பெயர்முத லெழுத்துப் பால னாக

நால்வகை யெழுத்தினும் வட்ட மாக

முறைநட் புதாசீனம் பகை வரும்.

என வரும் தொடர் நூற்பா எண்.60யைக் குறிப்பிடலாம்.

இராப்பொழு திற்கு மிவ்வகை கொள்க

என்னும் முன்னையப் பதிப்புக்களில் இந்திர காளியாரின் மேற்கோள் நூற்பாவாகக் கொள்ளப்பட்டது சுவடியில் நூற்பாவாக, தொடர் நூற்பா எண்.75ஆகக் காட்டப்பெற்றுள்ளது. அதேபோல்,

        தேவப் பிரணாம மெனும்வட மொழியைத்

தேவ பாணியெனத் திரித்தனரே.

என்னும் தொடர் நூற்பா எண்.198ஆனது செயிற்றியனாரின் மேற்கோள் நூற்பாவாகக் காட்டப் பெற்றது முன்னைய பதிப்புக்களில் நூற்பாவாக பதியப்பெற்றுள்ளது.

முன்னைய பதிப்புக்களில் இல்லாத சில மேற்கோள் நூற்பாக்கள் சுவடியில் இடம்பெற்றிருக்கின்றன.  குறிப்பாக,

        ஈகாரம் பகை யென்றறி

எனும் தொடர் நூற்பா எண்.68 இச்சுவடியில் மட்டுமே இருக்கிறது. முன்னையப் பதிப்புக்களில் இரண்டு நூற்பாக்களை சுவடியில் ஒரு நூற்பாக்கிப் பார்த்ததையும் காணமுடிகிறது. குறிப்பாக,

 

“நன்மை செய்கட னாடி னவற்றிற்குத்

தொன்னெறி மரபி னின்மை யானே”.

“நாலசைச் சீரு மேலோ ரொழித்தனர்”.

ஆகிய இந்திரகாளியாரின் இரண்டு மேற்கோள் நூற்பாக்கள் சுவடியில் ஒரே மேற்கோள் நூற்பாவாகக் காட்டப்பட்டு உள்ளது. முன்னைய பதிப்புக்களில் நூற்பாவாகவும்  மேற்கோள் நூற்பாகவும் சுட்டப் பெற்றது சுவடியில் நூற்பாவாகவே சுட்டப்பெற்று உள்ளது.  குறிப்பாக,

 

       நால்வகைப் பாவு நால்வகைக் குலத்தின்

பால்வகைப் படுமே முதலன விரண்டின்

புணர்ச்சி மருட்பாப் பொருந்திய வருணம்.

நாளு மோரையு நலந்தகு நிலனும்

விரையுஞ் சாதியு நிறனுங் குணமு 

முரைபெறும் பாணற் குடைய வென்ப.

என்னும் தொடர் நூற்பா எண்.157ஆனது முதல் மூன்று வரிகள் நூற்பாவாகவும் இறுதி மூன்று வரிகள் கல்லாடனாரின் மேற்கோள் நூற்பாவாகவும் முன்னைய பதிப்புக்களில் இருக்க சுவடியில் இரண்டையும் மேற்கோள் நூற்பாவாகக் காட்டப் பெற்றிருக்கிறது. அதேபோல், முன்னைப் பதிப்புக்களில் காட்டப்பெற்ற ஒரே நூற்பாவாகக் காட்டியதைச் சுவடியில் தொடர் நூற்பா எண்.216 மற்றும் 217 என இரண்டு நூற்பாக்களாக்கிக் காட்டியதையும் காணமுடிகிறது.  குறிப்பாக,

 

216. மலையு மாறு நாடு மூருந்

     பரியுங் களிறுங் கொடியு தாரும்

     முரசும் பெயரு மெனத்தெரி பத்துஞ்

     சொல்லு மெல்லையின் முதற்குறட் கண்ணே.

217. சின்னத் தொழிலை மன்னவை வைத்துப்

     பின்னர்க் குறளிற் பாட்டுடைத் தலைவ

     ரியற்பெயரை வைத்தவர்க் குரிமை தோன்றுஞ்

     செயல் பெற வைப்பது சின்ன மதுவே

     யாதிப் பாவி னதனினம் வருமே.

என்னும் இரண்டும் முன்னைப் பதிப்புக்களில் ஒரே நூற்பாவாக உள்ளது.

       முன்னையப் பதிப்புக்களில் நூற்பாவாகக் காட்டப் பெற்றதை சுவடியில் மேற்கோள் நூற்பா வாகவும், மேற்கோள் நூற்பாவை நூற்பாவாகவும் காட்டப்பெற்றதையும் காணமுடிகிறது.  குறிப்பாக,

     வேந்தர் கடவுளர் விதிநூல் வழியுணர்

     மாந்தர் கலிவெண் பாவிற் குரியர்.

    நாலு வருணமு மேவுத லுரிய

    வுலாப்புறச் செய்யுளென் றுரைத்தனர் புலவர். 

என்னும் தொடர் நூற்பா எண்.214 மற்றும் 215ஆனது சுவடியில் 214ஆவது நூற்பா அவிநயனாரின் மேற்கோள் நூற்பாவாகவும், 215ஆவது நூற்பா நூற்பாவாகவும் அமைந்துள்ளது. இதில் ஆசிரியரின் நூற்பாதான் முதலில் இடம்பெறவேண்டும்.  ஆனால் மேற்கோள் நூற்பா முதலில் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

நரகரும் விலங்கும் வரைவ ரீண்டே (33) என்னும் நூற்பாவில் நரகர் என்பவர் மக்களைக்  குறிக்கும். ஆனால் பாடவேறுபாடாக நரகும் என்று தவறுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

உயிர்க்குறி னான்கொடு கசதப நமவ

மயக்கற வழுதெழுத் தாகு மென்ப  (37)

என்னும் நூற்பாவில் வழுதெழுத்து என்பதற்குப் பாடவேறுபாடாக அமுதெழுத்து அமைந்திருக்கிறது.  மேற்கோள் நூற்பாவில் “அமுதென மொழிப” என்று வருவதால் சுவடி படியெடுத்தோரின் எழுத்து மயக்கத்தால் இப்பிழை நேர்ந்திருக்கலாம் எனலாம்.  ஆக, இங்கு வழுதெழுத்து என்பதை அமுதெழுத்து எனலே சரியாகும்.

“குறியதன் முன்வைத்தப் புள்ளி

யுயிரெனப் புணர்ந்த வல்லாறன் மிகைத்தே”

என்னும் 41வது தொடர் நூற்பா எண்ணில் வரும் தொடர்கள் கழகப் பதிப்பில் இல்லை.  இது சுவடியில் கூடுதலாகக் கிடைத்ததாகும்.  மேலது வரிகள் உயிரளபெடையை உணர்த்தியதால் இவ்வரிகள் ஒற்றளபெடையை உணர்த்தி நின்றது எனலாம்.  இவ்வரிகளால் இவ்விலக்கணத்திற்கு இச்சுவடி கூடுதல் செய்தியைத் தந்திருக்கிறது எனலாம்.

       கன்னல் (நாழிகை) மற்றும் புள் (பறவை) என்னும் இரண்டு பொருத்தங்களைத் தொடர் நூற்பா எண்.71 முதல் 77வரை உள்ள நூற்பாக்களில் நூற்பாவாகவும் மேற்கோள் நூற்பாவாகவும் வந்துள்ளவை பற்றி வேறெந்த பாட்டியல் நூல்களும் கூறாதபோது பன்னிரு பாட்டியல் மட்டும் எடுத்துரைப்பது இதன் சிறப்பாகும்.

“நால்வகைப் பாவு நால்வகைக் குலத்தின்

பால்வகைப் படுமே முதலன விரண்டின்

புணர்ச்சி மருட்பாப் பொருந்திய வருணம்”.

என்னும் நூற்பா எண்.157இல் மருட்பாவுக்கு வெண்பாவும், ஆசிரியப்பாவுமாகிய பாக்களின் சேர்க்கையால் உண்டாகும் பா என்பதால் அதற்கும் வருணம் பொருந்தும் என்ற கருத்து முன்னைய பதிப்பில் வருணம் பொருந்தா எனக் குறிப்பிடப்பெற்றுள்ளதை ஆராய வேண்டும்.

       “திருமகள் திருமதி யென்றிவ ரெல்லா”

என்பது,

       “திருமக ணாமக டிகழ்மதி யென்ப”

என்று பாடவேறுபாடகக் காட்டப்பெற்றுள்ளது.  இங்குத் திருமகளுக்கு அடுத்து நாமகள், திகழ்மதி (திருமதி) என வந்திருப்பது சுட்டத்தகும்.

       “காட்டிய முறையே நாட்டிய வாண்டாற்”

என்னும் நூற்பா எண்.211இல் வரியானதில் நாட்டிய வாண்டாற் என்பது நாட்டிய ஆண்பால் என்றிருக்க வேண்டும்.  இங்கு ஆண்பாற்குரிய பருவங்கள் குறிப்பிடுவதால் நாட்டிய வாண்டாற் என்பது தவறாக சுவடியில் இடம்பெற்றிருக்கிறது எனலாம்.

“முன்னர்க் காண்டல் செருக்கள மதனி

லடுகூழ் வார்த்த லின்னன் பிறவுந்

தொடர்நிலை யாகச் சொல்லுதல் கடனே”

என்னும் நூற்பா எண்.220இல் வரக்கூடிய இவ்வரிகள்,

       மரபினி துரைத்தன் மறக்களங் காண்டல்

       செருமிகு களத்திடை யடுகூழ் வார்த்தல்

       பரவுத லின்ன வருவன பிறவுந்

       தொடர்நிலை யாகச் சொல்லுதல் கடனே”

என்று பாடவேறுபாடாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.

       “தத்த மினத்தி லொற்றுமுறை பிறழ்ந்து”

என்னும் நூற்பா எண்.244இல் வருவது பாட வேறுபாடாக,

       “தத்த மினத்தி லோப்புமுறை பிறழாது”

என்றமைந்துள்ளது.  இங்குப் பொருள் அடிப்படையில் இவ்விடத்தில் பிறழாது என்றே இருக்க வேண்டும்.  ஆனால் சுவடியில் பிறழ்ந்து என்று தவறுதலாக உள்ளதை அறிய முடிகிறது.

       இவ்வாறு பல சிறப்புக்கள் அமையப் பதிப்பிக்கப்பெற்ற இப்பதிப்பு பதிப்பு வரலாற்றில் தடம் பதிக்கும் வண்ணம் அமைத்திருப்பதற்கு இந்நூலின் பதிப்பாசிரியர் பேராசிரியர் ப. ஜெயகிருஷ்ணன் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன்.

 

தஞ்சாவூர் – 10                                        - மோ.கோ.கோவைமணி

31.10.2023

 

 

 

 

-