வெள்ளி, 17 ஜூலை, 2015

முனைவர் மோ.கோ. கோவைமணி பற்றிப் பேராசிரியர் தெய்வசுந்தர நயினார்

பேராசிரியர் தெய்வசுந்தரநயினார் அவர்கள் தன்னுடைய முகநூலில் முனைவர் மோ.கோ. கோவைமணி பற்றி 17.07.2015 அன்று ஒரு இடுகையை இட்டுள்ளார்.  அதனை இங்குப் பகிர்கிறேன்.

தமிழறிஞர்கள்பற்றி (74)





முனைவர் மோ.கோ.கோவைமணி (1963) …. தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை, எம் ஃபில் பட்டங்களையும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும், சுவடியியல், கணிப்பொறி பயன்பாடு, சைவ சித்தாந்தம் போன்ற பட்டயங்களையும் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில் 1989 முதல் கல்விப்பணியில் ஈடுபட்டுள்ள இவர் தற்போது அத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சுவடியியல், இந்திய காலக்கணிதம், தமிழும் விசைப்பலகையும், பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு, புலைமாடத்தி வரத்து, கதைப்பாடல்கள் மூன்று, புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை, தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் அட்டவணை, தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணைகள், ஐக்கூ ஐநூறு, பதிப்புலகத் தூண்கள், நாடி மருத்துவம், செம்புலப்பெயல் நீர், எண்ணும் எழுத்தும், ஓலைச்சுவடியியல் ஆகிய நூல்கள்; வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆய்வுமாலை, குமரகுருபரர் ஆய்வுமாலை, முருகன் இலக்கிய ஆய்வுமாலை, திருக்குறள் ஆய்வுமாலை, செவ்வியல் தமிழ்ச்சுவடிகள் போன்ற தொகுப்பு நூல்கள் என 30க்கும் மேற்பட்ட நூல்களுக்குச் சொந்தக்காரர். இவரின் ஓலைச்சுவடியியல் என்னும் நூலுக்குத் தமிழ்நாடு அரசு 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு வழங்கியுள்ளது. சுவடியியல், இலக்கியம், நாட்டுப்புறவியல், கணினியியல் உள்ளிட்ட பல துறைகளில் 250க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர். பல கருத்தரங்கங்களையும் மாநாடுகளையும் நடத்தியவர். பல்கலைக்கழக மானியக்குழு, தமிழக அரசு, தமிழ்ப் பல்கலைக்கழக நிதியில் பல ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டவர். சுவடியியல் தொடர்பாக மலேசிய வானொலியிலும், சென்னை தொலைக்காட்சியிலும் உரையாற்றியவர். மலேசியா சென்று மலேசியா பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சுவடிப்பயிற்சி அளித்தவர். தமிழகமெங்கும் களப்பணி மேற்கொண்டு ஓலைச்சுவடிகளைத் திரட்டி மின்பதிவாக்கம் செய்து பாதுகாத்து வருபவர். தமிழகமெங்கும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சுவடி எழுதும் பயிற்சியை மூன்று மணி நேரத்திற்குள் எளிய முறையில் அளிக்கும் வல்லமை பெற்றவர். இவர் சிறந்த ஐக்கூக் கவிஞரும் ஆவார். இவருடைய மின்னஞ்சல் முகவரி - paamozhi@gmail.com இவருடைய இணையதளம் -http://kovaimani-tamilmanuscriptology.blogspot.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக