சனி, 30 நவம்பர், 2013

சிவகங்கை மாவட்டம் - களப்பணி

          கடந்த வாரம் 23.11.2013 முதல் 30.11.2013 வரை சிவகங்கை மாவட்டத்தில் களப்பணி மேற்கொண்டு ஓலைச்சுவடிகள் திரட்டும் பணியில் ஈடுபட்டேன்.  இம்மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் இருக்கக் கூடிய ஓலைகள் வீட்டுக் கணக்குகளாகவும்,கோயில்  கணக்குகளாகவும், நில உரிமைப் பத்திரங்களாகவும், விழாக்காலங்களில் கோயில் சபையில் அமர்ந்தவர்களின் பெயர்களாகவும், கோயில் விழாக்களின் போது எழுதப்பட்ட வரவு செலவுகளாகவும், கோயில் முறையுடையோரின் பெயர்களாகவும், ஜாதகங்களாகவும் இருக்கின்றன.  சிலரிடம் மட்டும்  மருத்துவம், நாட்டுப்புற இலக்கியம் போன்ற சுவடிகள் காணப்படுகின்றன.  

          பலரிடம் இருந்த சுவடிகள் இன்று இல்லை.  காரணங்களை வினவிய போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.  அத்தகவல்களை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

பலர் பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும்போது வீட்டில் தேவையில்லாமல் இருக்கிறது என்று வெளியில் வைத்துவிட்டோம்.  அவை கரையானுக்கும் செல்லுக்கும் இரையாவரைக் கண்டு அந்தக் காலத்தில் ஆற்றில் சுவடிகளை விட்டதாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.  அதனால் இவ்வாறு வீணாவதைப் பார்க்க முடியாமல் ஆற்றில் விட்டுவிட்டோம் என்கின்றனர்.

1954ஆம் ஆண்டு சிவகங்கைப் பகுதியில் பலத்த புயல் வந்ததாகவும், அப்போது குடிசை வீடுகள் எல்லாம் அடித்துச் சென்றதாகவும், அவ்வீடுகளில் இருந்த சுவடிகள் அவ்வீடுகளோடு அழிந்து விட்டமாகவும் தெரிவிக்கின்றனர்.

ஓலைச்சுவடிகளை இம்மாவட்ட மக்கள் ஓலைமுறி என்கின்றனர்.  ஓலை எழுதுதலையும் ஓலைமுறி என்கின்றனர்.  இன்றும் சில இடங்களில் ஓலைமுறி எழுதுகின்றனர் என்கின்றனர்.

பெரும்பாலான செட்டியார்கள் அயல்நாடுகளிலும், அயலூர்களிலும் குடியேறி விட்டதால், அவர்களிடம் உள்ள சுவடிகளைக் காணமுடியவில்லை.  அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை நிச்சயம் அவர்கள் பிறந்த வீட்டிற்கு வருவார்கள் என்று கூறுகின்றனர்.  பொங்கலுக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை எல்லோரும் தங்கள் பிறந்த ஊருக்கு வந்து செவ்வாய்ப்பொங்கல் வைப்பது வழக்கமாகக் கொண்டுடிருக்கின்றனர் என்றனர்.  அவர்களின் இந்தச் செவ்வாய்ப்பொங்கல் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.   வரமுடியாதவர்கள் அவர்கள் வீட்டு வேலைக்காரியையோ அல்லது தெரிந்தவர்களைக் கொண்டோ செவ்வாய்ப் பொங்கல் வைக்கச் சொல்லுவர் என்கின்றனர்.

ஏனைய இன்னும் சில சுவையான தகவல்களை அடுத்த கட்டுரையில் காணலாம்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக