ஞாயிறு, 3 நவம்பர், 2013

செம்மொழித்தமிழ் இலக்கியங்களில் கிரகணம்

கிரகணம் பற்றி பலவாறான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  பாம்பு நிலவை விழுங்குகிறது என்றும்,  அந்நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும், கிரகணம் முடிந்தவுடன் கோயிலுக்குச் சென்று சாமியைக் குப்பிட்ட பிறகுதான் உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் சொல்லும் செய்திகளைக் கேட்டிருக்கின்றோம்.  கிரகணம் என்பதன் அறிவியல்  உண்மை இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.  நிலவும் பூமியும் நேர்க்கோட்டில் வரும் போது நிலவின்  வீச்சு பூமியில் தெரியாது.  அந்த நேர்க்கோடு வரும் போது நிலவு மறையவும், விலகும் போது நிலவு தெரியவும் செய்யும்.  இந்த நேரம் பூமியின் இயல்புகளில் சற்று மாறுதல் நேரிடும்.  எனவேதான், இந்த நேரத்தில் வெளியில் வரவேண்டாம் என்றெல்லாம் கூறுவர். கோயில்களில் அந்நேரத்தில் நடை அடைப்பதும் உண்டு.
     
        கிரகணம் பற்றிய செய்தி செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் இருக்கிறதா என்று ஆயப் புகும் போது, எட்டுத்தொகை அக இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு மற்றும் நீதி இலக்கியங்களில் தலைசிறந்ததான திருக்குறளில் இதுபோன்ற செய்திகள் இருப்பதைக் காணமுடிகிறது.   

         கேளாய், எல்ல! தோழி! வேலன்
         வெறிஅயர்  களத்துச் சிறுபல தாஅய
          விரவுவீ உறைத்த ஈர்நறும் புறவின்,
         உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு,
         அரவு நுங்கு மதியின், ஐயென மறையும்
         சிறுபுள் மாலையும் உள்ளார், அவர்என... (அகம்.114.1-6)

என்னும் பாடலில் தலைவன் தலைவியை நினைக்காததைத் தோழி கூறுவதாக அமைந்த இப்பாடலில்,  ஏண்டி தோழி, யான் கூறுவதைக் கேட்பாயாக, வேலன் வெறியாடும் களத்தில் பரவிக் கலந்து கிடக்கும் பூக்கள் உதிர்ந்து கிடக்கும். வலியினையுடைய ஞாயிறு, தன் வெம்மை குறைந்து பாம்பு விழுங்கும் நிலவினைப் போல மேற்கு மலையினைச் சேர்ந்து மெல்ல மெல்ல மறையும். அத்தகைய சிறிய புல்லிய மாலைக் காலத்தும் நம் தலைவர் நம்மை நினைக்கவில்லையே என்று கூறுகின்றதாக இப்பாடல் அமைந்துள்ளது.  திருக்குறளில், 

        கண்டது மன்னும் ஒருநாள்  அலர்மன்னும்
        திங்களைப் பாம்புகொண் டற்று.   (குறள்.1146)

இடையீடுகளானும் அல்லகுறியானுந் தலைமகனை எய்தப் பெறாத தலைமகள்  அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவுகடாயதாக இப்பாடல் அமைந்துள்ளது.  யான் காதலரைக் கண்ணுறப் பெற்றது  ஒருஞான்றே, அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர்போன்று உலகெங்கும் பரந்தது என்பதாக இப்பாடல் பொருள் அமைகிறது.

இவ்விரு பாடல்களால் நிலவைப் பாம்பு விழுங்கும் செய்தி பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் காணும் போது சங்க காலந்தொடங்கி இச்செய்திப் பரவல் நம் தமிழரிடையே நீடித்து நிலைத்திருக்கிறது என்பது உண்மை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக