ஞாயிறு, 14 அக்டோபர், 2018

சுவடிகளை மாற்றுருவாக்குவதில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்

தொடக்க காலத்தில் பனையோலைகளில் எழுதப்பெற்ற செய்திகளைப் படியெடுத்தல் என்ற முறையில் மீண்டும் பனையோலைகளிலேயே படியெடுத்தனர்.  இது அச்சுப்பொறியும் காகிதமும் கண்டெடுக்கப்படுவதற்கு முன்பு வரையே இவ்வழக்கம் இருந்தது.  இவ்விரண்டின் வரவிற்குப் பிறகு சுவடிகளில் உள்ள செய்திகளை அச்சிட்டு பதிப்பிக்கத் தொடங்கினர்.  ஒரு சிலர் அச்சுப் புத்தகத்தின் நம்மபகத் தன்மை உறுதிப்படுத்தப்படாததால் அச்சுப் புத்தகத்தைப் பார்த்து பனையோலைகளில் எழுதிப் படித்த வழக்கத்தையும் காணமுடிகிறது.  அண்மைக் காலத்தில் பனையேடுகளில் உள்ள செய்திகளை மாற்றுருவாக்கிப் பாதுகாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  மாற்றுருவாக்குதல் என்பது, பனையோலையில் உள்ள செய்திகளைப் பனையோலையில் உள்ளவாறே மின்கருவி கொண்டு நகலெடுத்தல் ஆகும்.  மாற்றுருவாக்குவதற்குச் செராக்ஸ், டிஜிட்டல் கேமரா, ஸ்கேனர் போன்ற மின் கருவிகள் தேவைப்படுகின்றன.  இக்கருவிகளால் பனையோலைச் சுவடிகளை மாற்றுரு வாக்குவதனால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன? அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகள் யாவை என்பது குறித்து இவ்வாய்வு அமைகிறது.

ஓலைச்சுவடிகளின் நிலை

  • தனியார் மற்றும் அரசு சுவடி நூலகங்களில் பாதுகாக்கப்பெற்ற நிலையிலும், தனியார் வீடுகளில் பலரிடம் பாதுகாப்பற்ற நிலையிலும் சுவடிகள் இருக்கும்.  இச்சுவடிகள் நல்ல நிலையில், சுமாரான நிலையில், பழுதுற்ற நிலையில், மிகவும் பழுதுற்ற நிலையில், செல்லரித்த நிலையில், முறிந்த நிலையில், உடைந்த நிலையில், கிழிந்த நிலையில், தேய்ந்த நிலையில் என்றவாறு பல்வேறு நிலைகளில் இருக்கும்.  
  • எண்ணெய்க்காப்பு செய்யப்பெறாத வௌ¢ளெழுத்து கொண்ட சுவடிகளாகவும், ஓலைகள் சுத்தம் செய்து எண்ணெய்க்காப்பு செய்யப்பெறாத சுவடிகளாகவும், சுத்தம் செய்யப்பெறாமல் கறை, தூசு மற்றும் அழுக்குடன் எண்ணெய்க்காப்பிடாத சுவடிகளாகவும் இருக்கும்.
  • ஓலைச்சுவடிக் கட்டுகளில் உள்ள ஓலைகள் கட்டு பிரிந்து இடம்மாறி இருக்கும்.
  • தொடக்கம், இடையில் மற்றும் இறுதியில் சிலபல ஏடுகள் இல்லாமலும், முறிந்தும், செல்லரித்தும் இருக்கும்.
  • ஏட்டெண் குறிப்பிடாமல் இருக்கும்.
  • ஒரு சுவடிக் கட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கும் போது ஏட்டெண் தொடரெண்ணாக இருக்கும் அல்லது ஒவ்வொரு நூலுக்கும் தனி ஏட்டெண் கொடுக்கப்பட்டிருக்கும் அல்லது நூலெட்டெண்ணும் தொடரேட்டெண்ணும் முறைப்படி கொடுக்கப்பட்டிருக்கும்.
  • உரைநடையாகவோ செய்யுள் நடையாகவோ அல்லது இரண்டும் கலந்த செய்யுளும் உரைநடையுமாகவோ சுவடிகள் இருக்கும்.
  • நாட்டுப்பனை, சீதாளப்பனை ஆகியவற்றின் தன்மைக்கேற்ப சுவடிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நீளம் மற்றும் அகலம் உடையதாக இருக்கும்.  ஒரே கட்டில் வெவ்வேறு நீள அகலங் கொண்ட ஏடுகளும் இருக்கும்.
  • ஒவ்வொரு சுவடிகளிலும் உள்ள கையெழுத்துக்கள் சுவடி எழுதுபவரின் கையெழுத்துப்படி வெவ்வேறாக இருக்கும்.  ஒரே சுவடியில் பலருடைய கையெழுத்தும் இருக்கும்.  ஒருவருடைய கையெழுத்தே பல்வேறு காலத்தில் எழுதப்படும் போது வேறுபட்டமைந்து, வேறுபட்ட கையெழுத்து கொண்ட ஒரே சுவடியாகவும் இருக்கும்.
  • ஓரு நூல் ஒரு ஏடு தொடங்கி பல நூறு ஏடுகள் கொண்டதாக இருக்கும்.
  • ஒரு சுவடியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கும்.  அந்நூல்கள், ஒரு பொருண்மை கொண்டவையாகவும், வெவ்வேறு பொருண்மை கொண்டவையாகவும் இருக்கும்.  இந்நூல்கள் செய்யுளாகவும், உரைநடையாகவும், செய்யுளும் உரைநடையுமாகவும் முறையே தனித்தனியாகவும் கலந்தும் இருக்கும்.
  • ஓலையின் ஒரு பக்கம் எழுதப்பெற்றும், இரு பக்கமும் எழுதப்பெற்றும் சுவடிகள் இருக்கும்.  இரு பக்கமும் எழுதப்பெற்ற சுவடிகளே பெரும்பான்மை இருக்கின்றன.
  • ஒரு பக்கத்தில் பல்வேறு எண்ணிக்கையிலான வரிகளையும், ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு பத்திகள் கொண்டவையாகவும் இருக்கும்.
  • பல்வேறு மொழிகளில் (தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, பாலி, ஒரியா போனற…), பல்வேறு பொருண்மைகளில் (இலக்கணம், உரைநடை இலக்கியம், காப்பியம், சிற்றிலக்கியம், சைவத் திருமுறைகள், சோதிடம், தத்துவம், தலபுராணம், நாட்டுப்புற இலக்கியம், நீதிநூல், பதினெண்கீழ்க்கணக்கு, பல்வகை நூல்கள், பிற தோத்திரங்கள், மருத்துவம், மாந்திரீகம், மெய்கண்ட சாத்திரம்) சுவடிகள் இருக்கும்.
  • பிற்குறிப்பு மற்றும் முற்குறிப்புச் செய்திகள் பெற்றும் பெறாமலும் இருக்கும்.  பிற்குறிப்பு மற்றும் முற்குறிப்புச் செய்திகளில் ஏடெழுதிய காலம், இடம், ஏடெழுதியவர், ஏடெழுதுவித்தவர், நூலாசிரியர் மற்றும் உரையாசிரியர் குறிப்பு, சுவடி பாதுகாப்பதற்கான வாசகம் போன்ற செய்திகள் இருக்கும்.

மாற்றுருவாக்குவதன் நோக்கம்

மேற்காணும் நிலைகளில் அமைந்த ஓலைச்சுவடிகளை மாற்றுருவாக்குவது இன்றைய தேவையாகிறது.  ஏனெனில், ஓலைச்சுவடிகளை நன்றாக பாதுகாத்து வந்தால் குறைந்தது நானூறு ஆண்டுகளே இருக்கக் கூடும்.  அதற்கு மேல் அவை அழியும் நிலைக்குத் தள்ளப்படும்.  அதனால்தான் முற்காலத்தில் சுவடிகளில் உள்ள செய்திகள் தேவைப்பட்டோரும், அழிந்து வரும் நிலையில் உள்ள சுவடிச் செய்திகளைப் பனையோலைகளில் படியெடுத்து வந்துள்ளனர்.  அவ்வாறு பனையோலைகளில் படியெடுக்கப்பட்டதாலேயே இன்று ஒரு நூலுக்குப் பல பனையோலை படிநிலைச் சுவடிகள் கிடைக்¢கக் காண்கிறோம்.  இன்று பனையோலைகளில் எழுதும் வழக்கம் அருகிவிட்டதின் காரணத்தினாலும், அண்மைக்கால அறிவியல் கருவிகளின் வரவினாலும் பனையோலையில் எழுதும் வழக்கம் மாறி, அறிவியல் கருவிகளின் மூலம் மாற்றுருவாக்கிக் கொள்ளும் நிலை வளர்ந்துள்ளது.   இன்று, சுவடிகள் அழியும் நிலைக்கு வரும் முன்பே அவற்றை அண்மைக்கால அறிவியல் கருவிகளின் மூலம் மாற்றுருவாக்கிக் கொள்வதால் பழைய பொருளைக் காப்பாற்ற முடியாவிட்டாலும் பழைய செய்திகளைக் காப்பாற்றலாம் என்ற உயரிய எண்ணமே இதன் நோக்கமாகும்.  இருப்பினும் இவ்வாறு மாற்றுருவாக்குவதற்கு முன் சில வரன்முறைகளைச் சுவடிகளில் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.  ஆனால், வேகமாக அழிந்துவரும் இச்சுவடிகளை வேகமாக மின்னணுப் பதிவு செய்துவிடல் என்ற நோக்கத்தில் இன்றைய கணினியாளர்கள் கருதுகின்றனர்.  இதுவொரு வகையில் உண்மையானதும் கூட, இருப்பினும்,  முறைப்படுத்தப்பெறாத பனையோலைகளையெல்லாம் மின்னணுப் பதிவு செய்துவிட்டால், அவற்றை முறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் தோன்றுகின்றன.

மாற்றுருவாக்குவதில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்

  • ஓரு நூலுக்கான ஏடுகள் முழுமையும் முறையாக ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைக்கப்பெற்றிருக்கும் ஓலைச்சுவடிகளில் ஒவ்வொரு ஏட்டிற்கும் பக்க எண் கொடுக்கப்படாமல் ஏட்டெண் கொடுக்கப்பட்டிருக்கும்.  இதனால் ஏட்டின் முதல் பக்கத்தில் ஏட்டெண்ணும் அதன் மறுபக்கத்தில் எண் குறிப்பிடாமலும் இருக்கும்.  மறுபக்கத்தை அப்படியே மாற்றுருவாக்குவதால் கவனக்குறைவின் காரணமாக சிக்கல் தோன்றும்.  அதாவது, எண் குறிப்பிடாத பக்கத்தை எந்த ஏட்டெண்ணின் பக்கத்தில் வைப்பது?,  மாற்றி வைத்துவிட்டால் பொருள் குற்றம் நிகழும்.  மாற்றுருவாக்கும் போது ஒவ்வொரு ஏட்டின் முன் மற்றும் பின் பக்கத்திற்குப் புதியதாக தொடரெண் கொடுக்கப்படல் வேண்டும்.  சுவடிக் கட்டில் உள்ள ஏடுகளை முறைப்படுத்தி, சுத்தப்படுத்தி வைக்கப்பெற்றிருக்கும் சுவடிகளை மின்னணுப்பதிவு செய்வதில் ஏட்டெண், பக்கவெண் குழப்பமே யன்றி வேறொரும் நிகழ வாய்ப்பில்லை.  இவற்றை கனமுடன் செய்தால் இச்சிக்கலை எளிமையாக்கலாம்.  தொடரெண் அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தினால் இச்சிக்கல் தீரும்.  
  • கட்டு பிரிந்து களைந்த ஏடுகளையும், உதிரி ஏடுகளையும், முறிந்த, செல்லரித்த, குறைச்சுவடிகளையும் வரன்முறைப்படுத்துவதில் பல்வேறு வகையான சிக்கல்கள் தோன்றுகின்றன.  அச்சிக்கல்கள் பின்வருமாறு:-
  • பல்வேறு அளவுடைய ஏடுகளில் ஒரு நூல் எழுதப்பெற்றிருக்கும்.  இவ்வாறு எழுதப்பெற்ற சுவடி கட்டு பிரிந்துவிட்டது என்றால் வரன்முறைப்படுத்துவது இயலாது.
  • பல நூல்கள் ஒரே அளவுடைய ஏடுகளில் ஒரே வகையான கையெழுத்தில் எழுதப்பெற்றிருக்கும்.
  • பலவகையான கையெழுத்தில் ஒத்த அளவுடைய ஒரு நூல் எழுதப்பெற்றிருக்கும்.
  • இடைச்செருகலாக எழுதப்பெற்றிருக்கும்.
  • ஒரே வகையான கையெழுத்தில் ஒத்த அளவுடைய ஏட்டில் இருவேறு நூல்களின் ஏட்டின் கடைசித் தொடர் வேறொரு நூலேட்டின் தொடக்கம் பொருள் மாறுபடாமல் ஒத்து வரல்.
  • ஒரே வகையான கையெழுத்தில் ஒத்த அளவுடைய ஏட்டில் இருவேறு நூல்களின் ஏட்டின் கடைசிச் சொல்லின் விடுபாடு (நிலைமொழி) வேறொரு நூலேட்டின் தொடக்கச் சொல்லின் விடுபாடு (வருமொழி) பொருள் மாறுபடாமல் ஒத்து வரல்.
  • பாட்டெண் ஒத்து வரல்.
  • முதல், இடை, கடை-யில் ஏடு குறைதல்.
  • முதல், இடை, கடை-யில் ஏடு மிகுதல்.
  • ஏட்டெண் இல்லாமல் ஒரு சுவடியில் பல நூல்கள் இருத்தல்.
  • ஒரு கட்டில் பல நூல்கள் இருந்து, வரிகளும் பத்திகளும்  வேறுபடல் மற்றும் ஒத்துவரல்.
  • உரைநடையாக இருந்து ஏட்டெண் இல்லாதிருத்தல்.
  • நரம்பு நீக்கப்பட்ட நாட்டுப்பனையோலை, நரம்பு நீக்கப்படாத நாட்டுப்பனை, சீதாளப்பனை என்று பனையோலையின் புறஅமைப்பு கொண்டு பிரித்தல்.
  • கறையான் அரித்திருத்தல்.
  • முறிந்த பகுதியும், கறையான் அரித்த பகுதியும் ஏட்டெண் பக்கமாக (வலது பக்கமாக) இருத்தல்.
  • முறிந்த பகுதியும், கறையான் அரித்த பகுதியும் இடது பக்கமாக இருத்தல்.

முடிவுரை

சுவடியியல் அறிஞர்களுக்குக் கணிப்பொறி அறிவும், கணினி அறிஞர்களுக்கு சுவடியியல் பற்றிய தெளிவும் இருத்தல் வேண்டும்.  சுவடியியல் அறிஞர்களும் கணினி அறிஞர்களும் ஒத்திசைவுடன் செயற்பட்டால் மட்டுமே இச்சிக்கல்களுக்கெல்லாம் நல்லதொரு பொதுவான தீர்வு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக