திங்கள், 1 அக்டோபர், 2018

சிறுவர்-சிறுமியர் விளையாட்டுகள்

நாட்டுப்புறவியல் பல வகைகளைத் தன்னகத்தே கொண்டது.  அவற்றுள் ஒன்றே நாட்டுப்புற விளையாட்டு.  நாட்டுப்புற விளையாட்டுகள் எண்ணற்றன.  வட்டத்திற்கு வட்டம் பகுதிக்குப் பகுதி மக்களுக்கு மக்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் இருப்பிடத்திகு ஏற்பவும் நாட்டுப்புற விளையாட்டுகள் மாறுகின்றன.  நாட்டுப்புற விளையாட்டுகளைப் பொதுவாக இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம்.  அவை,

1.  பொதுவான நாட்டுப்புற விளையாட்டு
2.  வட்டார நாட்டுப்புற விளையாட்டு

என்பனவாகும்.  பொதுவான நாட்டுப்புற விளையாட்டு என்பது, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாடும் விளையாட்டைக் குறிக்கும்.  வட்டார நாட்டுப்புற விளையாட்டு என்பது, நாட்டின் ஏதாவதொரு வட்டத்தில் மட்டும் விளையாடும் விளையாட்டைக் குறிக்கும்.  மேலும், இவ்விளையாட்டை விளையாடும் நபர்களைக் கொண்டும் இவற்றைப் பாகுபடுத்தலாம்.  அவ்வகையில்,

  1. சிறுவர்-சிறுமியர் நாட்டுப்புற விளையாட்டு
  2. பெரியவர்கள் நாட்டுப்புற விளையாட்டு
  3. ஆண்கள் நாட்டுப்புற விளையாட்டு
  4. பெண்கள் நாட்டுப்புற விளையாட்டு
  5. ஆண்கள்-பெண்கள் நாட்டுப்புற விளையாட்டு

எனப் பொதுவாக ஐந்து நிலைகளாகப் பகுக்கலாம்.  இங்கு, பள்ளிப்பட்டு வட்டாரம் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சிறுவர்-சிறுமியர் விளையாடும் விளையாட்டுகள் மட்டும் காண்போம்.  இவ்வாய்வாளன் இவ்வூரைச் சார்ந்தவன் என்பதால் இங்குக் குறிப்பிடப்பெறும் விளையாட்டுகள் அனைத்துக்கும் தகவலாளியும் இவரேயாவர்.  மேலும் இங்குக் குறிப்பிடப்பெறும் விளையாட்டை இவ்வாளன் சிறுவயதில் விளையாடியதாகும்.

பொதட்டூர்பேட்டை

தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்தில் பொதட்டூர்பேட்டை அமைந்துள்ளது.  இவ்வூர் தமிழகத்தின் வடவெல்லையில் அமைந்துள்ளது.  மேற்கே ஆறுமுகமலையையும், கிழக்கே 22 கி.மீ. தொலைவில் திருத்தணிகையையும், வடக்கே 5 கி.மீ. தொலைவில் குசஸ்தலை ஆற்றையும், தெற்கே 20 கி.மீ. தொலைவில் சோளிங்கபுரத்தையும் கொண்டு இவ்வூர் அமைந்துள்ளது.  ஊரின் தென்மேற்கில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது.  இவ்வூரில் சிவன் கோயில், பிள்ளையார் கோயில்(தெருதோறும் அமைந்திருக்கும்), ஆறுமுகமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் சுப்பிரமணியர் கோயில், மலை உச்சியில் அமைந்திருக்கும் உச்சிப்பிள்ளையார் கோயில், சுப்பிரமணியர் கோயில், கெங்கையம்மன் கோயில், மாரியம்மன் கோயில், திரௌபதியம்மன் கோயில், பெருமாள் கோயில், கிருத்துவக் கோயில்(சர்ச்சு), இசுலாமியர் கோயில் (மசூதி) எனத் தனித்தனியாக ஊரினுள்ளும் ஊரைச் சுற்றியும் எழில்மிகு தோற்றத்துடன் காணப்படுகின்றன.

இவ்வூரில் சிறுவர்-சிறுமியர் விளையாட்டுகள் பல உள்ளன.  அவை, கோட்டிப்பந்து விளையாட்டு, கோட்டி விளையாட்டு, புளியங்கொட்டைத் தாயவிளையாட்டு, கில்லு விளையாட்டு, நொண்டி விளையாட்டு, சில்லு விளையாட்டு, கண்கட்டு விளையாட்டு, தொடு விளையாட்டு, ஒளிதல் விளையாட்டு, கோலி விளையாட்டு, இரயில் விளையாட்டு, சொப்பு விளையாட்டு, நீர்மேல் கல்லெறி விளையாட்டு போன்ற விளையாட்டுகள் ஆகும்.  இவ்விளையாட்டுகள் எல்லாவற்றையும் கூறின் ஆய்வு விரியும்.  இன்று பழக்கத்தில் இல்லாத கோட்டிப்பந்து விளையாட்டு, கோட்டி விளையாட்டு, புளியங்கொட்டைத் தாயவிளையாட்டு ஆகியவற்றை மட்டும் இங்கு ஆராயப்பெறுகிறது.

1.  கோட்டிப்பந்து விளையாட்டு

இவ்விளையாட்டு இவ்வூரில் சிறுவர்களால் விளையாடப்பட்டதாகும்.  இன்று இவ்விளையாட்டை யாரும் விளையாடுவதில்லை.  இவ்விளையாட்டு மறைந்துபோன ஒரு விளையாட்டாகத் திகழ்கின்றது.  இவ்விளையாட்டை விளையாட இரு அணிகள் வேண்டும்.  ஒவ்வொரு அணியிலும் குறைந்தது இரண்டு பேராவது இருக்கவேண்டும்.  அதிகப்படியாக எத்தனைபேர் வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஆனால், இவ்வணியில் இடம்பெறுபவர்கள் எல்லோரும் சற்றேறக்குறைய ஒத்த வயதினர்களாக இருக்கவேண்டும்.  இவ்விளையாட்டிற்குப் பந்தும் கோட்டியும் தேவைப்படும்.  அதாவது, இரப்பராலோ அல்லது நூலாலோ செய்யப்பட்ட சிறிய பந்து ஒன்றும், மூன்று விரல் அகலமும், ஒரு விரல் நீளமும், 1 முதல் 1லு அடி உயரமும் கொண்ட கோட்டி ஒன்றும் தேவைப்படும்.

அ.  விளையாட்டுக்களம்

20-30 கால் அளவு (இரண்டு பாத அளவே ஒரு கால் அளவு) இடைவெளி கொண்ட ஒரு நேர்க்கோட்டின் ஒரு பக்கம் இரண்டு காலளவு கொண்ட ஒரு கோடும் எதிர்ப்பக்கம் நான்கு காலளவு கொண்ட ஒரு கோடும் காலால் போடப்படும்.  இந்த அளவு தோராயமானதாகும்.  விளையாடும் இடத்தைப் பொருத்து அளவு மாறும்.  பந்து விளையாடுபவர் இரண்டு காலளவு கோடுபோட்ட பக்கத்திலும் எதிர் அணியினர் நான்கு காலளவு போட்ட பக்கத்திலும் இருப்பர்.  எதிர் அணியினர் கோட்டிற்கு வெளியே அங்கங்கே பிரிந்து (இன்றைய கிரிக்கெட் விளையாட்டில் எதிர் அணியினர் பிரிந்து நிற்பதுபோல்) நிற்பர்.  இவ்வாறு விளையாட்டுக் களம் அமைக்கப்படும்.  இக்களம் தெருவிலோ, தோப்பிலோ, மைதானத்திலோ அமையும்.

ஆ.  விளையாடும் முறை

முதலில் எந்த அணியினர் விளையாடுவது என்று முடிவு செய்யவேண்டும்.  அதற்குப் பல முறைகளைக் கையாள்வர்.  அவற்றுள் சில:

  1. கண்ணை மூடிக்கொண்டு விரலெண்ணிக்கையைச் சொல்லல்
  2. காசைச் சுண்டிவிட்டு பூவா? தலையா? பார்த்தல்
  3. கண்ணை மூடிக்கொண்டு காயா? பழமா? (உள்ளங்கையைப் பழமாகவும், மேற்புறம் காயாகவும் கருதுவர்.  அதாவது, இடது உள்ளங்கையின் மேல் வலது உள்ளங்கையை இணைத்தால் காய் என்றும், இடது உள்ளங்கையின் மேல் வலது கையின் பின்புறம் (கருமை நிறப்பகுதி) வைத்தால் பழம் என்றும் கொள்வர்) சொல்லல்

இந்த மூன்று முறைகளில் முதல் முறையில் எண்ணிக்கையைச் சரியாகச் சொன்னால் அந்த அணி விளையாடும்.  மற்ற இரண்டு முறைகளில் ஒவ்வோர் அணியும் பூவா? தலையா? என்பதையும், காயா? பழமா? என்பதையும் முன்கூட்டியே முடிவு செய்து பின்னர் தேர்வு செய்யத்(மேற்கூரிய முறையில்) தொடங்குவர்.  வெற்றி பெற்றவர் முதுலில் ஆட்டத்தைத் தொடங்குவர்.

அடுத்து, இவ்விளையாட்டின் கோட்டியளவு நிர்ணயிக்கப்படுகிறது.  அதிக நேரம் விளையாட எண்ணுபவர்கள் கோட்டியளவை 1000 என்றும், குறைந்த நேரம் விளையாட எண்ணுபவர்கள் கோட்டியளவை 100 என்றும் வைத்துக்கொள்வர்.  இந்த அளவு விளையாடும் கால அளவைப் பொருத்து மாறுபடும்.  ஒரு கோட்டி அளவு என்பது விளையாடுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தட்டையான அலகு-கோட்டியே அளவுகோலாகும்.

முதலில் விளையாடும் அணியினர் தங்கள் அணியில் யார் முதலில் விளையாடுவது என்று தீர்மானிப்பர்.  அவ்வாறு தீர்மானிக்கப்பட்டவர் பந்தையும் கோட்டியையும் எடுத்துக்கொண்டு விளையாட்டுக் களத்திற்கு வருவார்.

முதலில் விளையாடுபவர் பந்தையும் கோட்டியையும் எடுத்துக்கொண்டு இரண்டு காலளவு கோடுபோட்ட இடத்தில் பந்தை வைத்து பந்திற்குப் பின்புறம் பந்தையொட்டி கோட்டியை அகல வாக்கில் வைத்து கோட்டியின் மேற்புறத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையால் தட்டுவர் (இடது கைப்பழக்கம் உள்ளவர் வலது கையால் பிடித்துக்கொண்டு இடது கையால் தட்டுவர்).  அவ்வாறு தட்டும் போது பந்து தரையோடும் தூக்கியும் போகும்.  தரையில் படாமல் தூக்கிப் போகும் பந்தை எதிர் அணியில் உள்ளவர்கள் கோட்டிற்கு முன்வந்தும் பின்சென்றும் பிடித்துவிட்டால் பந்தடித்தவர் ஆட்டம் இழக்க நேரிடும்.  அவ்வாறு பிடிக்காமல் போனால், எதிர் அணியில் உள்ளவர்கள் தட்டிய பந்தைத் தடுக்கவேண்டும்.  எந்த இடத்தில் பந்தைத் தடுத்தார்களோ அந்த இடம் குறிக்கப்படும்.

இப்பொழுது பந்தைத் தட்டியவர் கோட்டியை இரண்டு காலளவு கோடுபோட்ட இடத்தில் நீள வாக்கில் நிற்கவைத்து மேல் நுனிப் பகுதியில் தன்னுடைய வலதுகை விரலால் பிடித்திருக்கவேண்டும்.  இடதுகை ஆட்டக்காரர்கள் இடதுகை விரலால் பிடித்திருப்பர்.  இந்த நிலையில் கோட்டியை வைத்த பிறகு எதிர் அணியில் இருந்து ஒருவர் (திறமையானவர்) கோட்டியைப் பார்த்துப் பந்தை எறிவார்.  எறிந்த பந்து கோட்டியின் மீது பட்டுவிட்டால் பந்து விளையாடுபவர் ஆட்டம் இழப்பார்.  அப்படி இல்லையாயின் அவர் ஆட்டத்தைத் தொடருவார்.

ஆட்டம் இழக்காமல் விளையாடும் ஒருவர் அடுத்த கட்டமாகப் பந்தை எடுத்துக்கொண்டு வேறொரு முறையில் பந்தைத் தட்டுவார்.  அதாவது, இடது கையில் பந்தையும் வலது கையில் கோட்டியையும் எடுத்துக்கொண்டு எதிர் அணியினர் நின்று கொண்டிருக்கும் பக்கம் நோக்கிப் பந்தடிக்கத் தயார் நிலையில் இருப்பார்.  இந்த நேரத்தில் எதிர் அணியினர் தங்களுடைய கள வியூகத்தை மாற்றி அமைத்துக்கொள்வர்.  இப்பொழுது பந்தாடுபவர் பந்தைச் சற்றுத் தூக்கி எறிந்து கோட்டியால் பந்தைத் தட்டவேண்டும்.  இவ்வாறு தட்டும் போது கோட்டி பந்தில் பட்டு விரைவாகச் செல்லும்.  இவ்வாறு செல்லும் பந்து தரையில் படாமல் மேலே சென்று அதை எதிர் அணியினர் ஒருவர் பிடித்துவிட்டால் விளையாடுபவர் ஆட்டம் இழக்கநேரிடும்.  அடித்த பந்து எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் செல்லலாம்.  ஏதாவதொரு இடத்தில் எதிர் அணியினர் பந்தைத் தடுப்பர்.  தடுக்கும் அந்த இடம் குறிக்கப்படும்.  இப்பொழுது எதிர் அணியினர் 'எவ்வளவு கோட்டி' என்று கேட்பர்.  பந்தை அடித்தவரோ அல்லது அவர் அணியைச் சேர்ந்தவரோ ஒரு குறிப்பிட்ட எண்ணைச் சொல்லவேண்டும்.  இங்கு எண் என்பது எத்தனை கோட்டியளவு என்பதையே குறிக்கும்.  விளையாடுபவர் சொல்லும் எண்ணை எதிர் அணியிர் ஏற்றுக்கொண்டால் விளையாடுபவர் மீண்டும் தனது ஆட்டத்தை முதலில் இருந்து தொடங்குவர்.  ஏற்றுக்கொள்ளவில்லையாயின் பந்தைத் தடுத்த இடத்திலிருந்து கோட்டியால் அளப்பர்.  இவ்வளவை,  அவர்கள் விளையாடும் பகுதிவரை அளப்பர்.  விளையாடுபவர் சொன்ன எண், அளக்கும் போது இல்லையென்றாலும் விளையாடுபவர் ஆட்டம் இழக்க நேரிடும்.  எண் அளவு  சரியாகவோ கூடுதலாகவோ இருந்தால் அடுத்த சுற்று ஆட்டத்தைத் தொடருவர்.  அப்போது குறிப்பிட்ட எண்ணளவு அவ்வணிக்குக் கிடைத்த கோட்டியளவாகும்.

இவ்வாறு ஒவ்வொரு முறையும் ஆட்டம் நிகழும்.  ஆட்டம் இழக்கவேண்டிய முறைகளில் அணியினர் எல்லோரும் ஆட்டம் இழந்தாலோ அல்லது முதலில் குறித்த எண்ணை (கோட்டியளவு) எடுத்துவிட்டாலோ அவர்கள் எதிர் அணியை விளையாட அழைப்பர்.

எதிரணியினரும் முன் சொன்ன முறைப்படி விளையாடுவர்.  ஆட்டம் இழக்க வேண்டிய முறைகளில் அணியினர் எல்லோரும் ஆட்டம் இழந்தால் (எண்ணைப் பெறாத நிலையில்) முதலில் விளையாடியவர்கள் எண்ணைப் பெறாத போது மீண்டும் விளையாடுவர்.  முதலில் விளையாடியவர்கள் எண்ணைப் பெற்றிருந்தார்கள் என்றால் இரண்டாவது விளையாடியவர்கள் எண்ணைப் பெறாத நிலையில் தோற்றவர்களாகக் கருதப்படுவர்.  எண் அளவை முதலில் தீர்மானம் செய்யாமல் முதலில் முதல் ஆட்டத்தில் எடுக்கும் எண்ணே (கோட்டியளவே) அளவாகக் கருதி விளையாடுவர்.  எதிரணியினர் முதல் அணியினர் எடுத்த கோட்டியளவை அளவாகக் கொண்டு விளையாடத் தொடங்குவர்.  முதல் ஆட்டம் இழப்பதற்குள் முதல் அணியினரின் கோட்டியளவை எதிரணியினர் எடுத்துவிட்டால் முதல் அணியினர் தோற்றதாகவும், எடுக்காவிட்டால் எதிரணியினர் தோற்றதாகவும் கருதப்படுவர்.  

இரு அணியினரும் குறித்த கோட்டியளவை முதல் ஆட்டத்திலேயே எடுத்துவிட்டார்கள் என்றால் யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி போட்டியை சமனில் முடிப்பர்.  இறுதியில் வெற்றி பெற்றவர்கள் என்று தீர்மானித்த பிறகு தோற்றவர்கள் அவர்களைப் பொதி சுமக்கவேண்டும்.  தங்களை யார் பொதி சுமக்கவேண்டும் என்பதைத்  தாங்களே முடிவு செய்வர்.  பொதி சுமக்கும் தூரம் தொடங்கிய இடத்தில் முடிவதாக எல்லையை வகுத்துக்கொள்வர்.  இது, வீட்டைச் சுற்றியோ, தெருவைச் சுற்றியோ, கிராமத்தைச் சுற்றியோ இருக்கும்.

2.  கோட்டி விளையாட்டு

இவ்விளையாட்டு இவ்வூரில் சிறுவர்களால் விளையாடப்பட்டதாகும்.  இன்று இவ்விளையாட்டை யாரும் விளையாடுவதில்லை.  இவ்விளையாட்டு மறைந்துபோன ஒரு விளையாட்டாகத் திகழ்கின்றது.  இதற்குப் பந்தும் (இரப்பராலோ நூலாலோ ஆன பெரிய பந்து), கோட்டியும் (அலகு), இரண்டு ஒத்த அளவுடைய செவ்வக வடிவான கற்களும் தேவை.  இவ்விளை யாட்டிற்கு இரண்டு அணிகள் தேவை.  ஒரு அணியில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பர்.  ஒவ்வொரு அணியிலும் ஏறக்குறைய ஒத்த வயதுடையவர்கள் இடம்பெறுவர்.  அணிகள் இரண்டிலும் சம எண்ணிக்கை யோடு இருப்பர்.

அ.  விளையாட்டுக்களம்

இவ்விளையாட்டைத் தெருவிலோ, தோப்பிலோ, மைதானத்திலோ விளையாடுவர்.  முதலில் இடத்தைத் தேர்வு செய்த பின் இரண்டு பெரிய செவ்வக வடிவமான கருங்கல்லோ, செங்கல்லோ கோட்டின் (ஒரு மீட்டர் நீளம் கொண்டது) இருமுனையும் பதியத்தக்க அளவில் நேர்க்கோட்டில் வைக்கவேண்டும்.  பின்னர் அவ்விரு கல்லின் மீது கோட்டியை வைக்க வேண்டும்.  பிறகு சம இடைவெளியில் இரண்டு பக்கமும் அளந்து (சுமார் 20-30 காலளவு) கோடு போட்டுக்கொள்வர்.  

தரைக்கும் கோட்டிக்கும் இடையே உள்ள வாயிலைச் சரிபார்ப்பர்.  அதாவது, விளையாட எடுத்துக்கொள்ளும் பந்து வாயிலின் வழியே மிக எளிதாக நுழைந்து செல்லத்தக்கவாறு தரைக்கும் கோட்டிக்கும் இடையே இடைவெளியை அமைத்துக்கொள்வர்.

ஆ.  விளையாடும்முறை

முதுலில் எந்த அணியினர் விளையாடுவது என்று முடிவு செய்யவேண்டும்.  இதனைக் கோட்டிப்பந்து விளையாட்டில் தேர்வு செய்த அதே முறைகளில் தேர்வு செய்வர்.  ஒவ்வோர் அணியினரும் தங்கள் அணிப்பக்கம் போடப்பட்ட கோட்டில் நின்றுகொண்டிருப்பர்.  விளையாடுபவர் பந்தை எடுத்து கோட்டியின் மீது எறிவார்.  பந்து கோட்டியின் மீது பட்டு கோட்டி கீழே விழுந்தது என்றால் அந்த அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும்.  மீண்டும் அவர் பந்தை எடுத்து கோட்டி மீது எறிவார்.  தொடர்ந்து கோட்டி விழுந்துகொண்டே இருந்தால் அந்த அணிக்குப் புள்ளிகள் கூடிக்கொண்டே போகும்.  பந்து எறியும் போது, பந்து கோட்டியின் மீது படாமல் போனாலோ கோட்டியின் மீது பட்டு ஒருபக்கம் மட்டும் கோட்டி தரையில் விழுந்தாலோ விளையாடுபவர் ஆட்டம் இழக்கநேரிடும்.  இம்முறையில் முதலில் விளையாடுபவர் ஆட்டம் இழந்த பின் எதிர் அணியில் ஒருவர் விளையாடுவார்.  அவரும் ஆட்டம் இழந்த பின் முதலில் விளையாடிய அணியில் மற்றவர் விளையாடுவார்.  

இப்படியாக ஒவ்வொரு அணியிலும் முறையே ஒவ்வாருவராக ஆடி முடித்தபிறகு எந்த அணி அதிகப் புள்ளிகள் எடுத்ததோ அந்த அணி வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.  வெற்றி பெற்றவர்களைத் தோல்வியுற்றவர்கள் பொதி சுமக்கவேண்டும்.  தங்களை யார் பொதி சுமக்க வேண்டும் என்பதைத் தாங்களே முடிவு செய்வர்.  பொதி சுமக்கும் தொலைவு ஓர் இடத்தில் தொடங்கி அந்த இடத்தில் முடியுமாறு இருக்கும்.  இது தெருவைச் சுற்றுவதாகவோ, ஊரைச் சுற்றுவதாகவோ, வீட்டைச் சுற்றுவதாகவோ அமையும்.

3. புளியங்கொட்டை தாயவிளையாட்டு

இவ்விளையாட்டு இவ்வூரில் கோடை காலத்தில் மட்டும் விளையாடும் விளையாட்டாகத் திகழ்கின்றது.  இக்காலத்தில்தான் புளியம்பழம் அதிகமாகக் கிடைக்கும்.  எனவே இவ்விளையாட்டை சிறுவர்- சிறுமிகள் இக்காலத்தில் மட்டுமே விளையாடுகின்றனர்.  இவ்விளையாட்டை இன்று இவ்வூரில் யாரும் விளையாடுவதில்லை.  இவ்விளையாட்டிற்கு நான்கு முழு புளியங்கொட்டை தேவைப்படும்.  இந்த நான்குப் புளியங்கொட்டையையும் தரையில் தேய்த்து கருப்பு-வௌ¢ளை என ஆக்கிக் கொள்வர்.  இப்போது நான்குப் புளியங்கொட்டையில் நான்குப் பக்கம் கருப்பும் நான்கு பக்கம் வௌ¢ளையும் என அமைந்திருக்கும்.  இவ்விளையாட்டிற்குக் குறைந்தது இரண்டுபேர் அவசியம் தேவைப்படுவர்.  அதற்குமேல், உட்காரும் இடத்தைப்பொருத்து 3,4,5,6 என அமைவர்.

விளையாடும் முறை

இருவர் விளையாட்டாகவும் குழுவிளையாட்டாகவும் இவ்விளையாட்டை விளையாடுவர்.  இருவர் விளையாட்டில் ஒருவர் மாறி ஒருவர் விளையாடுவர்.  குழு விளையாட்டில் 1,2,3,4,5,6 என்ற முறையில் முறையே விளையாடவேண்டும்.  இவ்விளையாட்டு குழுவிளையாட்டாக அமையும் போது அது தொடர்விளையாட்டாகத் திகழும்.  விளையாடத் தொடங்கும் போது முதலில் விளையாட்டின் நிறைவிற்கு எத்தனைப் புள்ளிகள்(எண்கள்) எடுக்கவேண்டும் என்பதை எல்லோரும் ஒன்று கூடி முடிவு செய்வர்.  இப்புள்ளி 50, 100, 150, 200 என அமையும்.  புள்ளியைத் தீர்மானம் செய்த பின் யாராவது ஒருவர் விளையாடத் தொடங்குவர். இதில் முதலில் விளையாடுபவரைத் தேர்வு செய்யும் முறை இல்லை.  

முதலில் விளையாடுபவர் நான்குப் புளியங்கொட்டையையும் எடுத்துக் குலுக்கித் சோழி போடுவது போல் தரையில் போடுவார்.  அவ்வாறு போடும் போது நான்குப் புளியங்கொட்டையும் கருமை நிறத்துடன் அமைந்தால் அவருக்கு எட்டுப் புள்ளிகளும், வெண்மை நிறத்துடன் அமைந்தால் அவருக்கு நான்கு புள்ளிகளும் கிடைக்கும். 

இவ்விரு முறைகளிலும் அமையாமல் புளியங்கொட்டை அமைந்திருந்தால் ஒரு புளியங்கொட்டையை மற்றொரு புளியங்கொட்டையால் ஆள்காட்டி விரலைக் கொண்டு தள்ளவேண்டும்.  புளியங்கொட்டையைத் தள்ளுவதற்கு முன் எந்தப் புளியங்கொட்டையுடன் மோதச் செய்யவேண்டும் என்பதை விளையாடுபவர் முடிவு செய்துவிட்டு அவ்விரு புளியங்கொட்டைக்கு மிடையே சுண்டு விரலின் நுனியளவு இடைவெளியாவது இருக்கவேண்டும் என்பதற்காகச் சுண்டுவிரலின் நுனியை இவ்விரு புளியங்கொட்டையையும் மோதப் போகிறேன் என்பதற்கு அடையாளமாக விரல் நுனியைத் தரையில் தேய்த்துக் காட்டிப் பின் ஆள்காட்டி விரலால் புளியங்கொட்டையைத் தள்ளவேண்டும்.  அவ்வாறு தள்ளும் போது புளியங்கொட்டை குறிப்பிட்ட புளியங்கொட்டை மீது மோதினால் விளையாடுபவர் புள்ளி பெறுவார்.  அதாவது, கருப்பும் கருப்பும் மோதினால் இரண்டு புள்ளிகளும், வௌ¢ளையும் வௌ¢ளையும் மோதினால் ஒரு புள்ளியும், வௌ¢ளையும் கருப்பும் - கருப்பும் வௌ¢ளையும் மோதினால் ஒரு புள்ளியும் முறையே பெறுவர்.

புளியங்கொட்டையைப் போடும் போது ஒன்றன் மீது ஒன்று ஒட்டி அமைவதும் உண்டு.  அவ்வாறு ஒட்டி அமையும் போது விளையாட்டில் இடம்பெற்றிருக்கும் மற்றொருவர் வேறொரு தனியாக உள்ள புளியங்கொட்டையை எடுத்து அதன்மீது போட்டு ஒட்டியுள்ளதை விலக்கிவிடுவர்.  எட்டும், நான்கும், இரண்டும், ஒன்றும் எனப் புள்ளிகளை எடுத்துக்கொண்டே செல்வர்.  

பெரும்பாலும் இரண்டு மற்றும் ஒரு புள்ளி எடுக்கும் போது மட்டுமே, விளையாடுபவர் ஆட்டம் இழக்க நேரிடும்.  காய்களை மோதவைக்கும் போது மோதவில்லை என்றாலும், சுண்டுவிரலைத் தேய்க்கும் போது புளியங்கொட்டையின் மீது பட்டுவிட்டது என்றாலும் ஆடுபவர் ஆட்டம் இழக்க நேரிடும்.  இவ்வாறு ஒவ்வொருவரும் ஆட்டம் இழந்தபிறகு அடுத்து முறையில் உள்ளவர் ஆடத்தொடங்குவர்.  இப்படியே சுற்றுகள் வந்துகொண்டே இருக்கும்.

குழு விளையாட்டில் குறிப்பிட்ட புள்ளிகள் (முதலில் நிர்ணயிக்கப்பட்ட புள்ளிகள்) எடுத்தவர் முதலில் ஆட்டத்தில் இருந்து நீங்குவார்.  மீண்டும் சுற்றுகள் பழைய புள்ளிகளுடன் மற்றவர்கள் தொடருவர்.  இப்படியே ஒவ்வொருவராகப் புள்ளிகள் எடுத்து நீங்குவர்.  இறுதியாக விளையாடும் இருவரில் ஒருவர் தோற்றவராகக் கருதப்படுவர்.  தோற்றவர் வெற்றி பெற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவர்.

மேலும், தோற்றவர் வெற்றி பெற்றவரின் கைக்குத்தைத் தண்டனையாகப் பெறவேண்டும்.  கைக்குத்து என்பது, தோற்றவர் இடது கையையோ வலது கையையோ தரையில் ஊன்றுவார்.  வெற்றி பெற்றவர்கள் ஒவ்வாருவராக அவர் கையைக் குத்துவதையே இது குறிக்கும்.  இவ்வாறு குத்தும் போது குத்து வாங்குபவர் குத்து வாங்கக் கூடாது என்று கையைப் பாதுகாப்பாக எடுப்பர்.  அப்படியும் குத்துபவர் குத்திவிட்டால் மேலும் மேலும் குத்திக்கொண்டே இருப்பார்.  குத்திலிருந்து தப்பும்வரை  குத்து வாங்குபவர் குத்துத்தண்டனை பெறுவார்.  இப்படியாக தோற்றவர் ஒவ்வொருவரிடமும் குழுவிளையாட்டால் தோற்றவர் தண்டனை பெறுவார்.

இவ்வாறாக இந்த மூன்று நாட்டுப்புற விளையாட்டுகளும் இவ்வூரில் விளையாடப்பெற்றதாகும்.  முதல் இரண்டு விளையாட்டை ஆண்கள் மட்டும் விளையாடுவர்.  மூன்றாவது விளையாட்டான புளியங்கொட்டைத் தாய விளையாட்டை இருபாலரும் விளையாடுவர்.  இவை தவிர வேறுபல விளையாட்டுகளும் இவ்வூரில் விளையாடினர்.  அவைகளையும் தொகுத்து வைத்து பாதுகாப்பது இன்றைய தேவையாகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக