ஞாயிறு, 4 நவம்பர், 2018

முத்துநாச்சி சண்டை

வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையின் சகோதரியாகிய முத்துநாச்சி ஆங்கிலேயரை எதிர்த்து சண்டையிட்ட செய்தியை மையமாக வைத்த 892 வரிகளைக் கொண்ட கதைப்பாடல் சுவடி ஒன்று தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் காணப்படுகிறது.  இச்சுவடியை ஸ்ரீபுண்ணிய குமாரனாகிய திருமலைக்கொழுந்தா பிள்ளை என்பவர் தாழப்பட்டியில் இருக்கும் வீரமலைப் பிள்ளைக்கு எழுதிக்கொடுத்து இருக்கிறார்.

தென்னிந்தியாவில் ஆர்க்காட்டு நவாபுக்குப் பல குறுநில மன்னர்கள் கப்பம் செலுத்தி வந்தனர்.  நவாப் புரிந்த போர்களில் ஆங்கிலேயர்கள் படை உதவி செய்த காரணத்தால் தம் ஆட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை ஆர்க்காடு நவாவு ஆங்கிலேயர்களுக்கு வழங்கினார்.  ஆங்கிலேயரிடம் பண வலிமையும், பீரங்கி மற்றும் துப்பாக்கி முதலிய நவீன கருவிகளும், படை வலிமையும் இருந்ததால் பல குறுநில மன்னர்கள் பயந்தனர்.  தென்னாட்டில் கட்டபொம்மன் மற்றும் சிவகங்கை மருதுசகோதரர்கள் தவிர மற்ற எல்லா பாளையக்காரர்களும் ஆங்கிலேயர்களுக்குப் பணிந்துவிட்டனர்.  

கட்டபொம்மனும் ஆங்கிலேயரும்

பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் கட்டபொம்மன் ஆட்சி செய்து வந்தான்.  1791இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து நிர்வாகப் பொறுப்பைக் கட்டபொம்மன் ஏற்று திறம்பட நடத்திக்கொண்டு இருந்தான்.  குடிமக்கள் அனைவருமே கட்டபொம்மனைத் தெய்வமாக வழிபட்டனர்.  வெள்ளையரின் வெறித்தனமான செயல்களை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.  அதனால் மக்கள் தங்கள் மன்னருக்கு உறுதுணையாக விளங்கினார்கள்.  வீரபாண்டிய கட்டபொம்மனின் சிறப்பான ஆட்சியின் போது அவனை வீழ்த்துவதற்குச் சில குறுநில மன்னர்கள் மற்றும் பாளையக்கரர்கள் முயன்றனர். 

வெள்ளையர்கள் மக்களை அமைதியற்ற நிலைக்கு உள்ளாக்கும் நோக்கத்தின் முதல் கட்டமாக வரியை உயர்த்தினார்கள்.  சில பாளையக்காரர்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கப்பம் கட்டினர்.  அப்படிப்பட்ட பாளையக்காரர்களுக்கு மேல்நாட்டு மதுபானம் பரிசாகக் கொடுத்தனர்.  இவர்கள் நம் சொற்படி கேட்கும்போது கட்டபொம்மன் மட்டும் எதிராக செயற்படுவது அவர்களுக்கு அவமானமாகப்பட்டது.  கட்டபொம்மன் மீது கோபங்கொண்ட வெள்ளையர்கள் சில குறுநில மன்னர்களின் ஆதரவுடன் கட்டபொம்மனைப் பணிய வைக்க முயன்று தோற்றுப் போயினர்.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை முற்றிலும் வெறுத்த கட்டபொம்மன், எங்கள் தாய் நாட்டின் மீது அந்நியரான நீங்கள் வரி விதிக்க என்ன உரிமை இருக்கிறது? எங்களது தமிழ் மண்ணில் ரோமானியர், சீனர், பாரசீகர் போன்றோரெல்லாம் கடல் கடந்து வந்து நட்புக் கொண்டு வாணிகம் செய்தனர்.  அவர்களிடம் நாங்கள் அன்பாகத்தான் வாணிகம் செய்தோம்.  ஆனால் பரங்கியரான நீங்கள் வியாபாரம் செய்ய வந்து அதிகாரம் செய்து எங்களை அடிமைகளாக்க நினைக்கின்றீர்கள்.  நாங்கள் என்ன அந்நியரான உங்களிடம் அடிமைச் சாசனமா எழுதிக் கொணடுத்துவிட்டோம்.  தன்மானம் கொண்ட தமிழர்கள் நாங்கள்.  தலைக்கனம் பிடித்த உங்களுக்கு எந்நாளும் தலை தாழோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  போரில் புறங்காட்டி ஓடாமல் எதிர்த்து நின்று போராடி மார்பில் வேல் பாய்ந்து மடிந்த மறவர் குலத்தோர் நாங்கள் என்று வீர முழக்கமிட்ட கட்டபொம்மன் ஆங்கில ஆட்சியின் ஆணையை ஏற்க மறுத்தான்.  அவனை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தனர்.  மண் கோட்டையிலிருந்து வாளும் வில்லும் கொண்டு சிறிய படையோடு பீரங்கியும், துப்பாக்கியும் கொண்ட பெரும்படையை எதிர்ப்போராடினான் கட்டபொம்மன்.

பாஞ்சாலங்குறிச்சிப் போர்

கட்டபொம்மனின் முதற் போரில் தளபதி காலிசென்ஸ் இறந்தான்.  கட்டபொம்மனது தளபதி வெள்ளையனும் அப்போரில் இறந்தான்.  வெள்ளையர் படை சிதறியது.  1799இல் மறுபடியும் பெரும்படையோடு மேஜர் பானர்மேன் என்பவர் தலைமையில் கி.பி.1799 செப்டம்பர் 5இல் வந்த படையினரைப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குள் நுழைய விடாமல் ஊமைத்துரை முறியடித்தான்.  எனினும் சென்னையிலிருந்து பானர்மேனுக்கு உதவிட மேலும் படை வரவே தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை ஆகியோர் கோட்டையை விட்டு வெளியேறினர்.  ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த புதுக்கோட்டை மன்னனால் நயவஞ்சகமாகக் காட்டிக் கொடுக்க கட்டபொம்மனும் ஊமைத்துரையும் சிறைப்பட்டனர்.

கட்டபொம்மனைச் சிறைபிடித்த பானர்மேன் உடனடியாக அவர்களைத் தூக்கிலிட்டால் மக்கள் கலகம் செய்வார்கள் என்றெண்ணி அவர்கள் மீது பல குற்றங்களைச் சொல்லி அவர்களைச் செயலற்றுப் போகும்படி செய்ய வேண்டிய முயற்சிகளில் ஈடுபட்டான்.  அதன்படி பாளையக்காரர்களைக் கயத்தாற்றில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைத்து பல கட்டளைகளை இடுகிறான்.  அதன்படி பாளையக்காரர் ஆயுதம் தாங்கும் உரிமையை இழந்தனர்.  ஆயுதம் தாங்குதல் சட்டவிரோதமாக்கப்பட்டது.  அனைவரது ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது கோட்டைகள் ஆங்கிலேயரை எதிர்க்கும் பாசறைகளாக மாறிவிடக்கூடும் என்றஞ்சி கோட்டைகள் இடிக்கப்பட்டன.  பாளைய நிர்வாகத்திற்காக செலவிடப்படும் தொகை பற்றிய கணக்குகள் ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.  இவற்றை பாளையக்காரர்கள் ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? என்பது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இவற்றைச் செயற்படுத்தினர்.  இவ்வாறு அராஜகமாகச் செயற்பட்டு பாளையக்காரர்களை அடக்கி அக்டோபர் 10ம் தேதி 1799இல் நீதி விசாரணையின் முடிவில் வீரபாண்டியனாகிய கட்டபொம்மனைக் குற்றவாளியாக்கிக் கயத்தாறு என்னும் இடத்தில் தூக்கிலிட்டனர்.  ஊமைத்துரை சிறையில் அடைக்கப்பட்டான்.

கட்டபொம்மன் மறைவுடன் பாஞ்சாலங்குறிச்சிப் போர் முற்றுப்பெறவில்லை.  ஊமைத்துரையும் மற்ற வீர்ர்களும் பாளையங்கோட்டையில் சிறைப்பட்டிருந்தனர்.  அவர்களைப் புலிக்குத்தி நாயக்கன் என்பவன் 1801 பிப்ரவரி 2இல் சிறையிலிருந்து மீட்டான்.  சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரை முதலில் பாளையங்கோட்டை சிறையை இடித்துத் தரைமட்டமாக்கினான்.  ஒட்டப்பிடாரத்தில் 4 நாட்களில் வலிமையான மண்கோட்டையை எழுப்பினான்.  1801ஆம் ஆண்டு மே மாதம் 24ந் தேதி ஆங்கிலேயர்கள் கோட்டை மீது குண்டுகள் வீசினர்.  அதில் நிலவறை தீப்பிடித்துக் கொண்டது.  அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் புகையால் மூச்சுவிட முடியாமல் தினறிக் கொண்டிருந்தனர்.  பல தாய்மார்கள் ஆங்கிலேயர்களால் தீண்டப்பெறக் கூடாது என்பதற்காகவே தீயில் விழுந்து உயிர் துறந்தனர்.  கும்பினிப்படை கோட்டைக்குள் புகுந்தது.  போர் வீர்ர்களுடன் பெண்களும், உலக்கை, முறம், மூங்கில் கம்பு முதலியவற்றை ஏந்திப் போர் புரிந்தனர்.  இதனைக் கண்ட ஊமைத்துரை பெண்களின் கற்பு நெறிக்கு ஊறு விளைந்திடக்கூடாது என்னும் அச்சத்தில் தன் வாளைப் பயன்படுத்தி ஆங்கிலேயர் கோட்டையைத் தாக்கிய காட்சியையும் அதைத் தொடர்ந்து பெண்கள் போரில் இறங்கிய நிலையையும் அவர்கள் மானத்தைக் காக்க ஊமைத்துரை பெண்களை வெட்டிச் சாய்த்த காட்சிகளையும் கட்டபொம்மன் வரலாறு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இவ்வாறு பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மன், ஊமைத்துரை வரலாற்றைக் கூறும் நூல்களில் பெண்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட செய்திகள் காணப்படுகின்றன.  இத்தகையதொரு இக்கட்டான சூழலில் முத்துநாச்சியும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டுள்ளாள்.  இவள் இரண்டு நாள்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டுள்ளாள்.  தம் சகோதரர்கள் கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரை போலவே முத்துநாச்சியும் தன் பங்குக்கு ஆங்கிலப் படையில் பெரும் சேதத்தை உண்டு பண்ணி பின்னரே உயிர்விட்டிருக்கிறாள்.  இவளது அஞ்சா நெஞ்சமும், வீரதீரமும், செயல் திறமையும், மனவலிமையும் பற்றியெல்லாம் முத்துநாச்சி சண்டை எடுத்துரைக்கிறது.  முத்துநாச்சி பற்றி இதுவரை தனி நூல்கள் ஏதும் இல்லாத நிலையில் சுவடி தரும் செய்திகளின் அடிப்படையில் அவளது பிறப்பு, வளர்ப்பு, வீரம், விடாமுயற்சி, அஞ்சாநெஞ்சம், எதிரிகளை எதிர்த்துப் போரிடும் பாங்கு, செயல்திறன் போன்றவற்றை இக்கதைப்பாடலில் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

முத்துநாச்சி

முத்துநாச்சி கி.பி.1760இல் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் மகளாவாள்.  இவளது தாயார் பெயர் ஆறுமுகத்தம்மாள்.  இவள் கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையையா எனப்படும் துரைசிங்கம் ஆகியோருக்கு இளையவளாவாள்.  வரலாற்று நூல்களில் முத்துநாச்சி பற்றி இதுவரை குறிப்பிடப்படவில்லை.  எனினும் கட்டபொம்மனுடன் பிறந்தோர் ஊமைத்துரை, துரைசிங்கம் எனும் இரு சகோதரர்களும் ஈசுவரவடிவு, துரைக்கண்ணு எனும் இரு சகோதரிகளும் என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது.  

முத்துநாச்சி போர்க்கோலத்துடன் தனது அண்ணன் வெள்ளையையாவைக் காணச் சென்றபோது அவளை அடையாளம் புரியாத நிலையில் நீ யார்? என வினவ, அதற்கு முத்துநாச்சி,

எந்த வூரு யினம் எந்தச் சீர்மை என்று
என்னை நீ கேட்டாயே வெள்ளை அய்யா
இருக்குறது னான் பாஞ்சாலங் கோட்டையும்
என் பேருமே முத்துநாச்சி அய்யா

எனக் கூறுவதிலிருந்து இவள் கட்டபொம்மன் சகோதரர்களுக்கும் நேர் இளையவள் என்பது பெறப்படுகிறது.  இவளது போர்க்கோலம் கண்ட வெள்ளையையா மிகுந்த வருத்தத்துடன் மேலும் கூறும் மொழிகள், இவள் வளர்க்கப்பட்ட விதம் குறித்து உணர்த்தும் வாயிலாக அமைகிறது.

கட்டிக் குடுத்துமே முத்துநாச்சி உன்னை
கண்ணாலே பார்க்கலா மென்றிருந்தேன்
மச்சினன் முத்தையனுக்குக் கொடுத்துனான்
வாழ்வையும் பார்க்கலா மென்றிருந்தேன்
ஆணுக்கினிண்ணமு நாங்களடி யம்மா
அடிக்கிளைக்கிப் பெண்ணில்லை என்று
பேச்சி வரத்திலே நீ பிறந்து முத்துநாச்சி
என்றுனக்கு பேருமிட்டு
பெண்ணென்று சொல்லி  வளத்தின மானாலே
புத்தி குறைச்சலாய்ப் போகுமென்று
ஆணென்று சொல்லியேதான் வளர்த்து உன்னை
அச்சினம் பழக்கி வைத்திட்டமே

என்னும் வரிகளால் பெண் குழந்தை இல்லாத நிலையில் தெய்வத்திடம் வேண்டிப் பிறந்தவள் என்பதும், ஆண்பிள்ளை போல மிகுந்த வீரத்துடன் புத்திசாலியாகவும் வளர்க்கப்பட்டாள் என்பதும், தன் தங்கை சீரும் சிறப்புமாக மணவாழ்க்கை வாழவேண்டும் என்றும் நினைக்கும் வெள்ளையையாவின் கூற்று சான்றாகிறது.

முத்துநாச்சி சண்டை - கதைச்சுருக்கம்

பாஞ்சாலங்குறிச்சி போரில் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற ஊமைத்துரையும் அவனது வீர்ர் ஆயிரம் பேரும் காயமுற்று பாஞ்சாலங்கோட்டையில் இருக்கின்றனர்.  அச்சமயம் தமக்கு ஏதும் நேர்ந்தால் தம் குலப் பெண்டிர் எதிரிகள் கையில் பட்டு சின்னாபின்னமாகக் கூடுமே, இழிவு ஏற்படுமே எனும் கவலையில் தாமே அவர்களைக் கொன்றுவிடுதல் நலமென நினைத்து அடப்பக்காரனை அனுப்பி தமது சிறியதாயார் நால்வரையும், கட்டபொம்மன் மனைவியர் மூவரையும், கட்டபொம்மன் வைப்பு மற்றும் வெள்ளையையா கட்டிய மூவரையும் ஆக பதினொரு பேர்களைத் தம் குலதெய்வம் சக்காதேவி முன் வைத்து பலியிட்டு விடுகின்றான்.  பிறகு பேறுகாலத்திற்காகத் தகப்பன் வீட்டிற்குச் சென்றிருக்கும் தமது மனைவியை வெட்டப்புகும்போது அவள் தம் வயிற்றில் பட்டத்திற்குரியவன் பிறக்க இருப்பதைக் காட்டி தம்மை விட்டுவிடக் கூற அவளை விடுத்து பின் தங்கை முத்துநாச்சியை வெட்டப் புறப்படுகிறான்.

தம்மை வெட்ட வந்த தமையன் ஊமைத்துரையைப் பார்த்து முத்துநாச்சி வீணே இப்பொழுது வெட்டிப் போடுவதைக் காட்டிலும் போர்க்களத்தில் மாண்டால் மிகுந்த சிறப்பாகும்.  உன் போல புலியின் கூடப்பிறந்த எனக்கு மட்டும் வீரமில்லாது போகுமோ எனப் பலவாறு வாதிடுகிறாள்.  இதனை,

கன்னிகழி யில்லை உந்தன் தங்கைவேற
கருமிச மொன்றுங் கண்ட தில்லை
புத்தி யறிந்து பதினஞ்சு னாளின்னம்
பேதக மொன்று மறிந்த தில்லை
பூமியைப் பார்த்து நடந்த கண்ணால்ப்
புகள்மானத்தைப் பார்த்து நடந்த தில்லை
புலியின் கூடப்பிறந்து போட்டே யின்னம்
பூனையாய்ப் போவேனோ தங்கையரும்
சிங்கத்தின் கூடப்பிறந்து போட்டு யின்னம்
சிறுவ னாவனோ உன்பிறப்பு
நீயு மிருந்து பிறந்த வயிற்றிலே
நானு மிருந்து பிறந்த னண்ணே
உனக்கு முள்ள சவுரியமு மின்னம்
எனக்கில் லாமலிருந் திடுமோ
நீயுங் குடித்த தாய்முலைப் பாலிலே
நானுங் குடித்து வளர்ந்த னண்ணே
உனக்கு வார்த்த்தோர் சங்கிலே கொஞ்சம்
எனக்கு மெத்தவே வாத்திருப்பார்
முகத்திலே யுனக்கு மீசையடா அண்ணே
முழங்காலி லெனக்கு மீசையடா (வரி.52-61)

என்று வாதிட்டு போர்க்களம் போக முடிவெடுத்ததைக் கூற, ஊமைத்துரை அவளை விடுத்து வந்து சேர்கிறான்.  நடந்த அனைத்தையும் கேள்வியுற்ற வெள்ளையையா தானாதிபதி மால்பத்திரப் பிள்ளையை அழைத்து வெட்டப்பட்ட பெண்களைக் கானத்துறையில் எரியூட்டி வரும்படி கூறுகிறான்.  இச்சமயம் முத்துநாச்சி தாதிமார்களைப் பார்த்துத் தலைக்குவிட தண்ணீர் கொண்டுவரச் செய்து, தீட்டு கழித்த பின்பு, தாம்  அச்சமயம் அணிந்திருந்த நகைகளைக் களைத்து, பின்பு பொக்கிஷ வீட்டைத் திறந்து பெட்டியை எடுத்து தன் முன்னே வைத்து நிலைக்கண்ணாடியையும் வைத்து நகைகளைப் பூட்டிக் கொள்கிறாள்.  சரிகைத் தலைப்பாவை வரிந்து கட்டி, காதில் முத்து வைத்த சேரை ஒட்டுகளும், கடுக்கனும், வாவிலிமுருகு, குறடாசங்கிலி, மோகன மாலை, சோபன மாலை, முதாரி, முறுக்குவளை, கண்டிமணி, மங்கலக்கட்டு, மோதிரம், கைகளுக்கு வைரப்பாசி அணிந்து கச்சைகட்டி மார்பில் வைரப் பதக்கமும் அணிந்து பின் பொக்கிஷ வீட்டைப் பூட்டி தம் குலதெய்வமான சக்காதேவி கோவிலுக்குச் செல்கிறாள்.  அங்கு சக்காதேவியிடம், 

வடக்கு முகமேதான் விழுந்து தங்கை
வடவாசல் நோக்கிய கையெடுத்தாள்
தெற்கு முகமேதான் விளுந்து தங்கை
தெண்டனிட்டாள் குலதெய்வமதை
ஆண்டவளே லோக னாயகியே என்னை
ஆதரிக்குஞ் சக்காதேவி யம்மாள்
சத்தி கெவுரி மகமாயி சிவசங்கரியே
சக்கா தேவி யம்மாள்
கம்பள மொன்பது சிவகார்ருக்கு
கைவிளக்காய் நின்ற சக்காதேவி
பில்லிக் குடையவள் சக்காதேவி யிந்த
பிணத்தைத் தின்கிற தேவதையே
பாஞ்சாலங் கோட்டையில் சக்காதேவி யின்னம்
படைவெட்டுங் கட்டமன் பொம்மன் தெய்வம்
கட்டமனுண் டென்று கையெடுக்கவனை
காட்டி குடுத்தாய் கயத்தாற்றில்
அப்படிப் போலவே அண்ண னூமையனை
அச்சினம் ஒப்புக் கொடுத்திட்டாயே
உந்தனுடைய உறுதியை நம்பியே
உற்ற கும்பினியைப் பகைசெய்தாற்
இந்த விசைக்கிநீ ஊக்கு முனை கொடுத்து
எங்களை ரட்சியுஞ் சக்கா தேவி
ஆறாயிரம் பேரு மங்கலியங்களை
அறுக்க வைத்தாயே சக்காதேவி
ஆறாயிரம் பேரும் போனபின்பு உன்னை
ஆரடி வந்துனைக் கையெடுப்பார்
ஒப்புக் குடுக்காதே சக்காதேவி யின்னம்
ஒதுங்கி நிக்காதே சக்கா தேவி
காட்டிக் குடுக்காதே சக்காதேவி யின்னம்
கடக்க நிக்காதே மாதாவே (வரி.105-119)

என்று முறையிடுகின்றாள்.  அதாவது, தம் குலதெய்வம் சக்காதேவியின் கோயிலுக்குச் சென்று அத்தெய்வத்தின் சிறப்புக்களைப் பலவாறு பேசி நீ துணையிருக்கும் தைரியத்திலேயே அண்ணன் கும்பினியைப் பகைத்தார்.  அவரை இப்படி ஒப்புக்கொடுத்துவிட்டாயே.  எங்களைக் காப்பாற்றியருள்வாய்.  ஆறாயிரம் பேர்களை மாங்கல்யங்களை அறுக்கவைத்துவிட்டாயே.  இனி உன்னை யார் வந்து வணங்குவர்.  இன்னமும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காதே. இப்போது சர்ச்சத்துரையுடன் போரிட நான் செல்கிறேன்.  எனது வலதுபுறத்தில் நீ உதவியாக வருதல் வேண்டும்.  நான் கன்னி கழியாதவள், குற்றம் எதுவும் இல்லாதவள், இதுவரை நிமிர்ந்து பார்த்து நடக்காதவள், மைத்துனன் முத்தையன் மீது சற்றே என் மனம் இருந்தது. அதை இந்த நிமிடத்திலிருந்து மனதில் இருந்து விலக்கிவிட்டேன்.  இனி அவர் என் உடன்பிறப்பு எனத் தன் மனத்திலிருந்து அத்தனையும் கூறிவிட்டு சக்காதேவியைத் தமக்கு உதவியாக வரும்படி வேண்ட அச்சமயம் சகுனங்கள் மூலமாக தெய்வத்திடமிருந்து உத்தரவு கிடைக்க கோயிலைவிட்டுப் புறப்படுகிறாள் முத்துநாச்சி.

கோயில்விட்டு வந்த முத்துநாச்சி வெள்ளையையாவிடம் செல்ல அவருக்கு முத்துநாச்சியின் போர்க்கோலம் கண்டு அடையாளம் புரியாமல் தம்பி உனக்கு எந்த ஊர் என்று வினவ அவள் அதற்கு என் பெயர் முத்துநாச்சி.  என் ஊர் பாஞ்சாலங்கோட்டை.  கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையையா ஆகியோருக்கு நேரிளையாள் எனக் கூறுகிறாள்.  இதனைக் கேட்ட வெள்ளையையா அவளை வாரியணைத்து மடியிலமர்த்தி உனக்கென்ன பைத்தியமா? உன்னை மைத்துனன் முத்தையனுக்குக் கட்டிக் கொடுத்து கண்குளிர பார்க்கலாமென்றிருந்தேன்.  நீ இப்படி போர்க்கோலம் பூண்டு விட்டாயே என்று கூறி, பெண் வேண்டும் எனத் தெய்வங்களை வேண்டி வரம் பெற்றுப் பிறந்தவள் நீ என்பதையும், பெண்போல பொத்தி வளர்த்தால் புத்தியின்றி போய்விடும் என ஆண்போல வீரத்துடன் வளர்த்ததையும் கூறி, இப்படி அவளது அருமை பெருமைகளைக் கூறி அவளைப் போருக்குப் போக வேண்டாமெனத் தடுக்கிறான்.  அதற்கு முத்துநாச்சி வெள்ளையையாவைச் சமாதானப்படுத்தி நான் அன்றும் இன்றும் என்றும் ஆண்பிள்ளையே என்று கூறி சர்ச்சத்துரையை வெட்டி செயங்கொண்டு வருகிறேன் என்று கூறுகிறாள். 

வெள்ளையையாவும் மிகுந்த கலக்கத்துடன் தங்கைக்கு விடைகொடுக்கிறான்.  அடுத்து இக்கோலத்துடன் முத்துநாச்சி ஊமைத்துரையைக் கண்டு வணங்கி விடைபெறுகிறாள்.  அண்ணன்மார்கள் இருவர் இருந்தும் இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே என மிகவும் மனம் கலங்குகிறான் ஊமைத்துரை.  தாம் கலங்கினால் தங்கை மனம் கலங்கும் என மனதைத் திடப்படுத்தியவாறு அடப்பக்காரனை அழைத்து கட்டபொம்மனின் பட்டத்து பட்டாவைக் கொண்டு வரச் செய்து அதனைத் தங்கையிடம் தருகிறான்.  அத்துடன் முன்மடியில் சொருகுவதற்குக் கட்டாரி, பட்டாக்கத்தி, தங்கப் பூப்போட்ட கேடயம் போன்றவற்றைக் கொடுத்து எதிரியை வெட்டி செயங்கொண்டு வா என வாழ்த்தி விடையளிக்கிறான்.

இவ்வாறே முத்துநாச்சி அரண்மனையை விட்டு ஆசாரசாவடி கடந்து கடைவீதி முன்பாக வந்தபோது எதிரில் போரில் இறந்த ஆராயிரம் பேர்களுடைய மனைவிமார்களும், கள்ளச்சிகள் ஏழுபேரும் உடன்கட்டை ஏறி சாவதற்கு முடிவெடுத்து வந்து கொண்டிருப்பதைக் காண்கிறாள்.  எதிரில் வந்த முத்துநாச்சியைப் பார்த்து ஊமைத்துரை, வெள்ளையையா, முத்தையன் இவர்களைவிட துரைமார்கள் இங்கு யாருமில்லையே அப்படி இருக்க நீ யார் என அடையாளம் புரியாமல் வினவுகின்றார்கள்.  அதுகேட்டு லேசாக சிரித்த முத்துநாச்சியை அடையாளம் கண்டுகொண்டு உனக்கெதற்கு போர்க்கோலம் என வினவுகின்றார்கள்.  எனினும் அங்கிருந்த கள்ளச்சிகள் ஏழுபேரும் உடன்கட்டை ஏறி சாவதைவிட போர்க்கோலம் கண்டு போரில் குண்டடிபட்டு சாவது மேலெனக் கூறி முத்துநாச்சியின் பின் வருகின்றனர்.  மேலும் மற்றவர்களிடமும் எடுத்துக் கூறி அவர்களைப் போருக்கு அழைக்க இரண்டாயிரம் பெண்கள் போருக்குத் தயாராகி, உலக்கை, தடிகள் ஆகியவற்றுடன் புறப்பட்டார்கள்.  இதனை,

உடன்கட்டை யேறிச் சாகிறதைப் பார்க்க
உற்றதோர் குண்டுலே மாண்டு போவோம்
இப்படிச் சாகிற குண்டு பட்டுச் செத்தால்
இதுகொண்டு மெத்தச் சேதமில்லை
என்று சொல்லிக் கொண்டு ஏழுபேர் கள்ளச்சி
இச்சினம் பின் ஓடி வந்து
ஒலிமுகம் போயிச் சேருமடி யுற்ற
முத்துனாச்சி பின்னே னாங்கள் வாறோம்
என்றுசொல்லிக் கொண்டு கள்ளச்சி ஏழுபேர்
இச்சினம் வீட்டுக்கு ஓடி வந்து
தலைக்குல்லாவுகள் தானுமிட்டு யின்னம்
தங்க அங்கரக்காயத் தொட்டிறுக்கி
புருசனுடைய யீட்டிகளெடுத்து
புறப்பட்டாளய்யா கள்ளச்சியும்
வாரபோ தங்கனே கள்ளச்சி ஏளுபேர்
வாய்க்கொழுப்பங்கனே சொல்லிக் கொண்டாள்
உம்பளஞ் சம்பளந்தின்கிற முண்டைகள்
ஓடி வாங்களடி சண்டை செய்ய
கட்டமன் தங்கையை பார்க்கவுங்களுக்கு
கனமரியாதைத் தானுமுண்டோ
என்றுசொல்லிப் போட்டு கள்ளச்சிமார் சொல்ல
இச்சினமே யந்த பெண்டுகளும்
அதிலே ரெண்டாயிரம் பேரு குமரிகள்
அச்சினம் வெளியில்ப்பட்டு மங்கே
இந்தக் கட்டுடனே ஊமைச்சாமி னாட்டில்
எத்தினை னாளைக்கி னாமிருப்போம்
பிறாமுக யின்னம் பார்த்த மென்றாலவன்
பிளந்து வைப்பானே துண்டு ரெண்டாய்
இப்படி யிருக்கக் கூடாதடி னாமள்
இறந்து போவது உத்தமந்தான் (வரி.201-215)

என்றவர்கள் கோட்டைக்கு வாயு வேகத்தில் வந்து முத்துநாச்சியை வணங்கினர்.  அவர்களைப் பார்த்து முத்துநாச்சி ஏன் இங்கு  வந்தீர்கள் என வினவ உனக்குப் போரில் உதவவே வந்தோம் என்கின்றனர்.  இதைக்கேட்டு முத்துநாச்சி இப்படி எல்லோரும் சென்றால் சச்சரன் கண்டு கொள்ளக்கூடும் எனக் கூறிவிட்டு அண்ணனின் அரண்மனைக்கு ஓடி வருகிறாள்.  ஊமைத்துரையைப் பார்த்து அங்கலக்காரணம், கேப்பை மாவு, முறங்கள், சூட்டு அடுப்புகள், நவபாண்டம், விறகு போன்றவை வேண்டும் எனக் கேட்கிறாள்.  ஊமைத்துரை, ஆள் அனுப்பி தங்கை கேட்டவற்றைத் தரும்படி ஆணையிடுகிறான்.  அனைத்தையும் கோட்டைக்கு உடனே கொண்டு போக உத்தரவிடப்பட்டது.  அச்சமயம் ஒட்டப்பிடாரத்தில் உளவு சொல்வோன் கோட்டைக்கு ஓடி வந்து எதிரிப்படைகள் வந்திறங்குவதைப் பதற்றத்துடன் கூறுகிறான்.  அச்சமயம் எட்டமன் ஏணிகள், வைக்கோல் கட்டுகளை வண்டியிலேற்றி வருகிறான்.  கோட்டைக்குப் படைகள் வந்ததை உணர்த்தும் விதமாக மூன்று வேட்டுச் சத்தங்கள் முழங்க அடப்பக்காரனும், உளவு செல்வோனுமாக முத்துநாச்சியைக் கண்டு விவரம் கூறி எச்சரிக்கையாய் இருக்கும்படி கூறுகின்றனர்.

நடுசாம நேரத்தில் பட்டாளம் புறப்படுகிறது.  அச்சமயம் முத்துநாச்சி ஆயிரம் பெண்களைக் கோட்டைக்கு வரவழைத்து அவர்களை எட்டெட்டு பேர்களாகப் பிரித்து நிற்க வைக்கிறாள்.  இச்சமயம்  சச்சரனது பட்டாளம் கட்டபொம்மன் கோட்டையைச் சுற்றி வந்து விட்டது.  அதன்பின் ஏணிகள் வந்து இறங்கின.  இதைக் கண்டதும் முத்துநாச்சி ஆயத்தமாக எழுந்து நிற்கிறாள்.  படைகள் வந்திறங்கியதை மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தாள்.  விடிய ஒரு சாமம் இருக்கும் வேளையில் முத்தையன், குப்பையாண்டித்தேவன் இவர்கள் கொத்தளத்தில் வைத்து கூழைக் காய்ச்சும்படி கள்ளச்சிகள் ஏழுபேருக்கும் கூறுகிறாள்.  அதுபோல தும்பிச்சி மேட்டில் கொள்ளை வறுத்துக் கொட்டும்படி சொல்கிறாள்.  இவ்வாறு பெண்கள் பாதிபேரிடம் கூழ் காய்ச்சும் படியும் பாதிபேரிடம் கொள் வறுத்துக்கொட்டும் படியும் கூறி ஏனைய ஆயிரம் பெண்களை உலக்கைத்தடி ஏந்தி தலை தெரியாது இருந்தபடி சண்டை செய்யும் படியும் கூறுகிறாள்.

நீங்கள் பெண்கள் என்று கண்டு கொண்டால் பீரங்கி போட்டு விடுவான்.  அதனால் மறைந்து நின்று தாக்குங்கள் என்று கூறுகிறாள்.  மேலும் அவர்களுக்கு தைரியமளிக்கும் வகையில் நாமும் மனிதர்கள், அவர்களும் அவ்வாறே.  அதனால் பயப்பட வேண்டாமெனக் கூறுகிறாள்.  இவ்வாறிருக்கையில் எச்சரிக்கை வேட்டு கிளம்புகிறது.  அனைவரையும் உஷார் நிலையிலிருக்கக் கூறித் தானும் உஷாருடனிருக்க மற்றொரு வேட்டுச் சத்தம் எழுப்பி கோட்டைமேல் ஏணியைச் சாத்துகிறான் சர்சத்துரை.  மற்றுமொரு வேட்டு கிளம்ப கேப்டனும் கோட்டை மேல் ஏறி வந்து விட்டான்.  அதனைக் கண்ட முத்துநாச்சி பெண் தெய்வங்களை வரிசையாக வேண்டியவாறு நிற்க, கேப்டனும் அருகில் வர, தெய்வங்களுக்கு நரபலி எனக் கூறி அவன் தலையை வெட்ட, அது கோட்டைக்குள்ளே விழுகிறது.  அதைத் தொடர்ந்து ஆப்புசேர், நாயக்கமார் என அனைவரும் வர அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்துகிறாள் முத்துநாச்சி.  பிறகு சுபையதார், கும்மந்தான் இன்னும் பலரும் வெட்டுப்பட சச்சரன் இருவர் இருவராக அனுப்ப அனைவரையும் வெட்டி வெள்ளரிக்காய்களைப் போல வீழ்த்துகிறாள்.  மேலும் அவள் சச்சரனைப் பார்த்து எட்டையபுரத்து சச்சரனே ஊமைத்துரையும் ஆராயிரம் பேர்களும் காயமுற்று இருப்பார்கள் என நினைத்து கோட்டைமேல் ஏறி வந்தாயோ? கயத்தாற்றில் தூக்கில் விழுந்த கட்டபொம்மன் திரும்பி வந்துவிட்டானடா கோட்டைக்கு எனக் கூறியவாறு கோட்டைக்குள் இறங்கிச் செல்கிறாள் முத்துநாச்சி.

சச்சரத்துரையும் படைகளை நான்கு வகையாகப் பிரித்து அனுப்பி கோட்டைமேல் ஏறி விட்டான்.  முத்தையன் கொத்தளத்தின் மீது ஏற அச்சமயம் கள்ளச்சிகள் ஏழு பேரும் குத்துச் சண்டையில் ஈடுபட்டனர்.  அதில் சிறிது பட்டாளம் இறந்தது.  தும்பிச்சி மேட்டிலும் கொள்ளை வறுத்துக் கொட்டினர்.  சூட்டு அடுப்புகளையும் தலைமேலெறிந்தனர்.  சாம்பலுடன் தணலை வாரித் தலையில் போட்டனர்.  பட்டாளத்தில் பலர் இறந்தனர்.  தொடர்ந்து கூழ் சட்டிகளும் சிப்பாய்கள் மீது வந்து விழுந்தன.  அதனால் சிப்பாய்கள் கண்கள் ஒழுகி வெள்ளரிப் பழம் விரிவது போல் விரிந்தனர்.  இப்படியாக சண்டை தொடர்ந்தது.  மீதமுள்ள பட்டாளங்களும் வந்து சேர்ந்தன.  இதைக்கண்ட பெண்கள் ஆயிரம் பேரும் உலக்கை தடிகளுடன் ஆயத்தமாகி அவர்களைத் தாக்க சிப்பாய்களின் தலைகள் பருப்புச்சட்டியும் தயிர்ச்சட்டியும் உடைவது போல சிதற நாக்குகள் தள்ள, இரத்தம் சொட்ட இப்படி பலவாறாகத் தாக்கப்பட்டு பட்டாளம் முழுதும் இறந்து போகின்றனர்.  சச்சரனும் உடன் குதிரைக்காரர்கள் ஏழு பேர்களுமே மிஞ்சி கூடாரத்தில் இருக்கின்றனர்.  அப்போது எட்டையபுரத்து தானாபதி அதிகாரத்துடன் ஊமைத்துரையும் அவள் உற்ற துணைகளும் வீர்ர்களும் காயமுற்றிருக்கும்போது யார் இப்படி போர் செய்வது என வினவ, ஊமைத்துரையின் அண்ணன் தம்பியல்ல, மாமன் மைத்துனனும் அல்ல, யாரோ புதிதாகத் தெரிகிறது என முத்துநாச்சியை ஆண் என்று எண்ணிப் பேசிக் கொள்கின்றனர்.  பிறகு அவளை நன்கு கவனித்து நோக்கி ஆணோ, பெண்ணோ, பேயோ, பிசாசோ, காத்தோ, கருப்போ, சக்காதேவியோ தெரியவில்லை என்றெண்ணி பேசிக் கொள்கின்றனர்.  மீண்டும் ஒரு முறை சீனிக்கண்ணாடி கொண்டு சோதிக்க அது சக்காதேவியே என்று கூறி தப்பித்துப் போக முயற்சித்து குதிரைக்காரனை அழைத்து குதிரையைக் கொண்டு வரப் பணித்தான் சச்சத்துரை.

அச்சமயம் முத்துநாச்சியும் இருளாயி என்பவளை அழைத்து நீலா என்னும் வெள்ளைக் குதிரையை விரைவாகக் கொண்டு வருமாறு பணித்தாள்.  சுற்றிப்போய் குதிரை ஏற நாழியாகும் என்பதால் ஏணி வழியாக இறங்கி வருகிறாள் முத்துநாச்சி.  அவளுடன் கள்ளச்சிகள் ஏழு பேரும் இறங்கி வருகின்றனர்.  முத்துநாச்சி ஏணி வழி இறங்கி குதிரை ஏறச் செல்கிறாள்.  அதற்கு முன்பாக சச்சரனும் குதிரைக்காரர்கள் ஏழு பேரும் ஆக எட்டு பேர்களும் குதிரையேறி வாயு வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.  அப்பொழுது தாகத்திற்காக இடும்பன் தெப்பக்குளத்தில் எல்லோரும் இறங்கித் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க வெட்டில் இறங்கி முத்துநாச்சி சச்சரை வெட்ட கள்ளச்சி குதிரையைக் குத்துகிறாள்.  இவ்வாறாக அனைவரையும் வெட்டி செயங்கொண்டு கத்தியைக் கழுவும் போது ரத்தக்கறைகள் தாக்க மயங்கி விழுகிறாள் முத்துநாச்சி.  அதனைக் கண்ட கள்ளச்சிகள் அவளை எடுத்து மார்போடணைத்து மயக்கம் தெளிவிக்கின்றனர்.  

இச்சமயம் முத்தைய நாயக்கன் 30 பேருடன் முத்துநாச்சியைத் தேடி வருகிறான்.  தன்னைக் கண்டதும் பேசாது காதவழி ஓடியொலியக் கூடிய மெலியளாகிய முத்துநாச்சி இன்று எதிரிலிருப்பதைக் கண்டு மிகுந்த வருத்தத்துடன் அவர்கள் ஊருக்குத் திரும்பி வருமாறு அழைக்க, அதற்கு முத்துநாச்சி வீணே வருந்த வேண்டாம்.  நீயே கணவன், நானே மனைவி என்று நிச்சயம் செய்திருந்த காலம் ஒன்றுண்டு.  உனக்கு என்னைக் கொடுப்பதென்று ராச்சியம் முழுதும் அறிந்ததுண்டு.  இவ்வளவு நாட்கள் நீ எனக்கு அத்தை மகன்.  இப்பொழுது உடன்பிறப்பு. என் மீது இனி எள்ளளவும் ஆசை வேண்டாம்.  எனக்கு பதிலாய் பெரியப்பன் மகள் இருக்கிறாள்.  அவளை மணந்துகொள் என்று கூற அதைக் கேட்டு ஆசார சாவடிக்கு விரைந்து வருகிறான் முத்தையன். அங்கே அமரக்காரர்களுடன் ஊமைத்துரையும், வெள்ளையையாவும் இருந்தனர்.  அவர்கள் முன்பாக விழுந்து அழுகிறான் முத்தையன்.  அவனை எழுப்பி ஏன் அழுகிறாய்? தங்கைக்கு என்ன ஆயிற்று என்று அவர்கள் கேட்க தன் விதியை நினைத்து அழுவதாகக் கூற, விஷயமறிந்த சகோதரர்கள் முத்துநாச்சியை நிச்சயமாக விவாகம் செய்து தருகிறேன் என்று கூற முத்தையனும் மகிழ்ச்சியுடன் வெட்டி செயம் கொண்டு, உந்தன் தங்கையங்கை வீற்றிருக்கிறாள் என்று கூறுகிறான்.  

அச்சமயம் தானாபதி மகன் மால்பத்திரப் பிள்ளையை அழைத்து தங்கையை அழைத்து வர பல்லக்கும் கள்ளச்சிகள் ஏழுபேருக்குக் குதிரையும் அனுப்ப உத்தரவிடுகிறான்.  தானாபதியும் சோடித்த பல்லக்குடனும், பதினெட்டு மேள வாத்தியங்களுடன் ஒட்டப்பிடாரம் வந்து கொட்டு முழக்குடன் முத்துநாச்சியைக் கூட்டி வருகின்றனர் கோட்டைக்கு.  

அச்சமயம் அங்கிருந்த ஆயிரம் பெண்களும் ஆரத்தி எடுத்து திட்டி கழித்து திலகம் மையணிவிக்க ஆசாரச் சாவடி வந்து அண்ணனை வணங்கி எழ வெள்ளையையா அவளைத் தூக்கி நிறுத்தி எனக்குத் தாயார் சக்காதேவி தங்கை முத்துநாச்சி.  இந்த அளவிற்கு எங்களுக்கு ஊக்கம் கொடுத்து காப்பாற்றினாய் சக்காதேவியே.  இவ்வாறு கூறிவிட்டு இனி எப்போதும் போல் பெண்பிள்ளையாக மாறிவிடம்மா என முத்துநாச்சியிடம் கூறும் பொழுது முத்தையன்தான் முத்துநாச்சிக்காகவே காத்திருந்த விதத்தையும் இலவுகாத்த கிளிபோல ஆன தன் நிலை பற்றியும் தன்னிரக்கத்துடன் பேசுகிறான்.  இதைக் கேட்ட வெள்ளையையாவும் பங்குனி மாதம் பரணி நட்சத்திரம் கூடிய 15ஆம் தேதி முத்தையனை மணக்க வேண்டும் என முத்துநாச்சியிடம் கூறுகிறான்.  

கத்தி பிடித்து சச்சரனை வெட்டிய கையை இனி முத்தையனுக்குக் கொடுப்பேனோ, களப்போர் கண்ட நான் தாலிகட்ட கழுத்தை நீட்டுவேனோ என்று மறுக்கிறாள் முத்துநாச்சி.

அச்சமயம் வெள்ளையையா சேவகரை அழைத்து பெண்கள் போடும் நகைகளைக் கொண்டு பெட்டியைக் கொண்டுவரச் சொல்.  போரில் வெற்றி பெற்று வந்தவர்களுக்கு வெகுமதி எனக் கொடுக்கிறான்.  அப்பெட்டியில் நெற்றிச் சுட்டிகள், திருவாம்பிரை, கொன்றைமாலை, கொப்புப் பிடிகள், ராக்கடி, சிமிக்கி பவழ வடம், அட்டிகை, கோதுமை மணி, தோள்வளை, பாடகம், தண்டை சிலம்பு காலுக்கு பீலி, ரவிக்கை, சேலை ஒட்டியாணம் என அனைத்தும் இருந்தன.  இதைக் கண்டு வெகு கோபமுற்ற முத்துநாச்சி போர்க்கோலம் கண்ட நான் இனியும் இவற்றையணிவேனோ எனக் கூறி அவற்றை நிராகரித்து நகைகள் மிகுதியாக இருந்தால் அவற்றை நாய்க்குப் போடும் என்று கோபிக்கிறாள்.  

அவளது சீற்றமும் கண்டிப்பும் கண்டு ஊமைத்துரை, ஆண்கள் போடும் நகைகளைக் கொண்டு வரக் கூறி மேலும் முத்தையனிடம் தனது சித்தப்பன் மகளை விவாகம் செய்து தருவதாகக் கூறுகிறான்.  ஊமைத்துரை பிறகு ஆண்களுக்குரிய நகைகளை எடுத்து முத்துநாச்சிக்குப் பூட்டிவிடுகிறான்.  பிறகு முத்துநாச்சிக்கும் கள்ளச்சிகள் ஏழு பேர்களுக்கும் வேண்டிய உணவைச் சமைத்துப் பரிமாறுகிறான்.  மேலும் நீ ஆணாகப் பிறந்திருந்தால் அரசாள்வாய்.  ஆகவே இனி என் பட்டத்தை நீ ஆள்வாய் எனக் கூற அதற்கு அவள் அண்ணா நீ ஆய்கிற பட்டம்மான் இனி எனக்கு ஏற்குமோ?  நானும் மேரக்காரருடன் சேர்ந்து நானும் ஒரு மேல்மரமே எனக் கூறுகிறாள்.  இத்துடன் முதல் நாள் சண்டை முடிவடைகிறது.

முத்துநாச்சியின் வெற்றிச் செய்தியைக் கேட்ட எட்டையபுரத்தான் அதனைக் கடிதம் மூலம் துரைமார்களுக்குத் தெரிவிக்க இனி எத்தனை நாளுக்கு இந்த துக்கம்.  இனி எவ்வாறு ஊமையனை வெற்றி கொள்வது என யோசித்து எட்டு தரைகளுடன் எட்டு பட்டாளம் தம்பூர், புல்லாங்குழல், சாரட் வண்டி, பல்லக்கு குதிரை தளவாடங்கள் போன்றவற்றோடு சீவலப்பதி வந்திறங்கியது.  விடிந்ததும் ஒட்டப்பிடாரத்தில் கூடாரம் பிடித்தார்.  இச்சமயம் உளவு சொல்வோன் ஓடிவந்து பட்டாளங்கள் வந்து இறங்கியதை ஊமைத்துரையிடம் கூறுகிறான்.  இதைக் கேட்டு ஊமைத்துரை சாரி போவதற்காக நகாடிக்கச் சொல்கிறான்.  அச்சத்தம் கேட்டு முத்துநாச்சி மீண்டும் உடனே கள்ளச்சிகளுடன் போருக்கு ஆயத்தமாகிறாள்.  அதைக் கண்டு ஊமைத்துரை எங்கே செல்கிறாய் என வினவ, சாரி போவதாக முத்துநாச்சி பதிலளிக்க ஊமைத்துரை ராணுவத்தினர் 3000 பேரை உதவிக்குப் போகுமாறு கூறினான்.  ராணுவத்தினர் 3000 பேர் ஒரு பிரிவாகவும் செல்கிறார்கள்.  தாக்குதலில் பட்டாளம் முறிந்துவிட்டது.  தேவர்சனத்தில் 25 பேரும் சிப்பாய்களில் இருபது பேரும் இறந்து விட்டனர்.  இறந்த 25 பேரை பாடையிலேற்றி ஊர் வந்து சேர்கிறாள் முத்துநாச்சி.  கானத்துறையில் அவர்களை எரியூட்ட சொல்கிறாள்.  

இச்சமயம் போர் பற்றிய செய்திகள் சென்னைக்குக் கடிதம் வாயிலாகச் செல்ல மேலும் பட்டாளம் வந்திறங்கியது.  இதனை ஊமைத்துரையிடம் உளவு சொல்வோன் வந்து கூற அவ்வேளையில் ஆயிரம் பேரும் காயமாறி இருக்கிறபோது நகாரடிக்கச் சொல்கிறான்.  

அச்சமயம் நித்திரைக்குப் போன முத்துநாச்சி நகாரு சத்தம் கேட்க ஊமையன் சாரி போவதைக் கேள்வியுறுகிறான்.  அதைக்கேட்டு முத்துநாச்சி நிலைகுலைந்த நிலையில் ஊமையன் அங்கு வர முத்துநாச்சி நான் உயிரோடு இருக்க நீ சாரி போவது எப்படி எனக் கேட்க இன்றைக்குச் சண்டைக்குப் போக வேண்டாம் என ஊமைத்துரை பலவாறு தடுத்தும் கேளாமல் முத்துநாச்சி போருக்குப் புறப்படுகிறாள்.  கட்டபொம்மன் குதிரையைக் கொண்டு வரச் செய்து கள்ளச்சிகள் கூட புறப்படுகிறாள்.

   வெடிச்சத்தம் கேட்டால் உன்னை முன்னே கொண்டு போய்விடும் என எச்சரித்தும் கேளாமல் புறப்படுகிறாள்.

சூரியோதய வேளையில் போர் மூண்டது.  இச்சமயம் கம்பெனிக்கு உதவியாக எட்டையபுரத்தான் குத்துச்சண்டையில் இறங்கினான்.  இச்சமயம் குபீரென்று குதிரை பாய்ந்து கூடாரம் முன்பாக வந்ததும் முத்துநாச்சியை வேகமாக வீசிட அவளும்கீழே விழுந்துவிட்டாள்.  தாக்குதலில் கள்ளச்சிகள் மாண்டு விட்டனர்.  எதிரிகள் முத்துநாச்சியைக் பிடித்துக் கூடாரம் கொண்டு வந்து சேர்த்தனர்.  அச்சமயம் துரை சாராய மயக்கத்திலிருக்க அவனை இரண்டு துண்டாக வெட்டி பின் கூடாரம் விட்டு வெளியேறுகிறாள்.  வெளியில் பாராக்காரர்களை வெட்டி வீழ்த்துகிறாள்.  அச்சமயம் வக்கப்பட்டி தானாபதி மகன் தனது தந்தையை வெட்டிய பழியைத் தீர்த்துக் கொள்ள வேண்டி ஐநூறு பேருடன் முத்துநாச்சியைச் சுத்தி வளைத்தான்.  சிறிதும் தளராமல் அவனையும் வெட்டி வீழ்த்துகிறாள்.  இப்படி அவள் போராடிக் கொண்டிருக்கும் போது ஈட்டுகளும் வேலும் மார்பில் பாய அவள் உயிர் பிரிந்த்து.  இச்சமயம் அவளது குதிரையும் லாயம் வந்தடைவதைக் கண்டு ஊமைத்துரைக்குச் சேதி வர ஊமைத்துரை ராணுவத்தைத் தயார்படுத்தி முத்தையன் வெள்ளையையாவுடன் ஒட்டப்பிடாரம் வந்து குத்துச் சண்டையில் கலந்து கொண்டான்.  பலரை வெட்டி வீழ்த்திப் பிறகு தங்கையையும் கள்ளச்சிகளையும் வந்து பார்க்கின்றனர்.  தேடினாலும் கிட்டாத அரிய பிறப்பே இனி உன்னை என்றைக்குக் கண்பேனோ என்று அவளது அருமை பெருமைகளை எல்லாம் பேசி தங்கை மேல் விழுந்து முட்டிக் கொண்டழுதனர்.  பிறகு அவளை அலங்கரித்த பல்லக்கில் ஏற்றிக் கொண்டு செல்ல அம்பலக்காரன் சாமையன்மேல் அருள் வந்து ஆட அதன் வாயிலாக தான் இறந்த இடத்திலேயே தம்மை வைத்துக் கும்பிடுமாறு கூற அதன்படி அவளை எரியூட்டி அந்த இடத்தில் எட்டு நாட்களுக்குள் காரைக்கட்டுக் கோவில் கட்டி வைத்தனர்.  கன்னிகழியாத தன்னையும் கள்ளச்சிகளையும் ஒரே இடத்தில் சிலையாக வைக்க வேண்டாம் என அருள்வந்து கூற உள்மண்டபத்தில் முத்துநாச்சி சிலையையும் வெளிமண்டபத்தில் கள்ளச்சிகளின் சிலையையும் வைத்து வழிபடுகின்றனர்.  பிறகு ஊமைத்துரை வெள்ளைஅய்யாவை கோட்டைக்கு அனுப்பிவிட்டு 5000 பேர்களுடன் வக்கப்பட்டியான் மற்றும் பலலையும் வெட்டிச் சாய்த்துவிட்டு கோட்டைக்குத் திரும்பிகிறான்.  இவ்வாறாக முத்துநாச்சி சண்டை முடிவடைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக