சனி, 3 நவம்பர், 2018

எழுகுளிறா? எழுகளிறா?



               சங்க எட்டுத்தொகை அக இலக்கியங்களில் ஒன்றாகிய குறுந்தொகை முல்லைத்திணை 24ம் பாடலில் எழுகுளிறு, எழுகளிறு என்ற வேறுபட்ட பாடங்களைக் கொண்டு உரையாசிரியர்கள் உரை கண்டிருக்கின்றனர்.  படிப்பவர்க்கு இவற்றில் எது சரியான பாடம் என்பதில் ஐயம் தோன்றுகிறது.  இங்கு இவ்வையத்தை நீக்கும் பொருட்டு இவ்வாய்வு நிகழ்த்தப்பெறுகிறது.  

குறுந்தொகை பதிப்புகளும் சுவடிகளும்

    திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கனார் தம்முடைய உரையுடன் குறுந்தொகையை 1915ஆம் ஆண்டு பதிப்பித்திருக்கின்றார்.  சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகச் சுவடி, முத்துரத்தின முதலியார் வருவித்துக் கொடுத்த சுவடி,  மதுரைத் தமிழ்ச் சங்கச் சுவடி என மூன்று சுவடிகளைக் கொண்டு இப்பதிப்பைக் கொணர்ந்துள்ளார்.

        குறுந்தொகை மூலம் மட்டும் 1920ஆம் ஆண்டு கா. நமச்சிவாய முதலியார் வெளியிட்டுள்ளார்.

      இராமரத்ந ஐயரின் குறுந்தொகை புத்துரையைக் கலாநிலையம் வார இதழில் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதந் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வெளியிட்டுள்ளது.  இவ்வுரை தனிநூலாக வெளிவரவில்லை.

 திருக்கண்ணபுரம் திருமாளிகைச் சௌரிப்பெருமாளரங்கனாரின் குறுந்தொகை அச்சுப் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு குறுந்தொகை மூலம் மட்டும் புரசைவாக்கம் சோ. அருணாசல தேசிகர் 1933ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

  மகாமகோபாத்தியாய .வே. சாமிநாதையர் தம்முடைய பதவுரை, விளக்கவுரையுடன் குறுந்தொகையை 1937ஆம் ஆண்டு பதிப்பித்திருக்கின்றார். திருவாவடுதுறை ஆதீனச் சுவடி, திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் சுவடி, மந்தாத்தோப்பு மடத்துச் சுவடி, செங்கோல் மடத்துச் சுவடி, திருமயிலை சண்முகம் பிள்ளை காகிதச் சுவடி, சோடாசவதானம் சுப்பராய செட்டியார் சுவடி, தொழுவூர் வேலாயுத முதலியார் சுவடி, சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக காகிதச் சுவடி, புதுக்கோட்டை ராதாகிருஷ்ணையர் காகிதச் சுவடி, திருக்கோணமலை . கனகசுந்தரம் பிள்ளை காகிதச் சுவடி எனப் பத்து மூலச் சுவடிகளைக் கொண்டு குறுந்தொகை பதிப்பை .வே. சாமிநாதையர் பதிப்பித்திருக்கின்றார்.  இதன் இரண்டாம் பதிப்பு 1947ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

     மகாவித்துவான் ரா. இராகவையங்காரின் குறுந்தொகை விளக்கவுரையை (முதல் 112 பாடல்கள்) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1946ஆம் ஆண்டு வெளியாட்டுள்ளது.

  .வே. சாமிநாதையரின் விளக்கவுரைப் பதிப்பை அடியொற்றி பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய குறுந்தொகை விளக்கவுரையைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1955இல் வெளியிட்டுள்ளது.

       புலியூர்க்கேசிகனின் குறுந்தொகை தெளிவுரையைப் பாரி நிலையம் 1965ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.  இது பல பதிப்புகளைக் கண்டுள்ளது.

          பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளையின் குறுந்தொகை 1985ஆம் ஆண்டு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.  இலண்டனிலிருந்து வரவழைக்கப்பெற்ற காகிதச் சுவடியின் நுண்படம் (எழுதப்பெற்ற ஆண்டு 1894), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மகாவித்துவான் ரா. இராகவையங்காரின் கையெழுத்துப்படி (மதுரையில் 1899இல் எழுதப்பெற்றது), மதுரைப் புலவர் இளங்குமரனிடமிருந்து பெறப்பெற்ற பூண்டியப்பப் புலவரின் ஏட்டுக் குறிப்பு, திரு. அடிகளாசிரியரின் வழியாகக் கிடைத்த 226 பாடல்களுக்கான காகிதச்சுவடி ஆகிய நான்கு சுவடிகளையும், திருக்கண்ணபுரம் சௌரிப்பெருமாள் அரங்கனாரின் பதிப்பு, புரசைவாக்கம் சோ. அருணாசல தேசிகரின் மூலப்பதிப்பு, கலாநிலையம் இதழில் வெளியான இராமரத்ந ஐயரின் உரை, .வே. சாமிநாதையரின் பதிப்பு, பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பு ஆகிய ஐந்து குறுந்தொகை பதிப்புகளையும்  அடியொற்றி பொழிப்புரையாக, ஆய்வுப்பாட நுண்பதிப்பாக வெளியிட்டுள்ளார்.

            இப்பதிப்புகளில் சுவடியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தவை திருக்கண்ணபுரம் சௌரிப்பெருமாளரங்கனார் பதிப்பும், .வே. சாமிநாதையர் பதிப்பும், பேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை ஆய்வுப்பாட நுண்பதிப்பும் ஆகும். 

               தற்போது குறுந்தொகைச் சுவடிகள் .வே. சாமிநாதையர் நூலகத்தில் ஒன்றும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றும், சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் ஒன்றும், திருவாவடுதுறை ஆதீனத்தில் ஒன்றும் இருப்பதை அறியமுடிகிறது. இங்குள்ள சுவடிகளை .வே. சாமிநாதையரும், மு. சண்முகம் பிள்ளையும் பயன்படுத்தி உள்ளதால் இனிக் குறுந்தொகைச் சுவடிகள் இருக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இருப்பினும், பல தமிழறிஞர்கள் வீடுகளில் இருக்கலாம். மாற்றுச் சுவடி கிடைக்கும் நிலையில் குறுந்தொகைக்கு வேறொரு பதிப்பு தேவையாகிறது.

எழுகுளிறா? எழுகளிறா?

                எழுகுளிறு மிதித்த ஒருபழம் போலக்            (குறுந்.24.4)

என்னும் தொடரில்எழுகுளிறுஎன்பது .வே. சாமிநாதையரும், எஸ். வையாபுரிப்பிள்ளையும் பாடம் கொண்டுஎழுகளிறுஎன்பதைப் பாடவேறுபாடாகக் காட்டியுள்ளனர். ஆனால், சௌரிப்பெருமாளரங்கனார், கலாநிலையம் இராமரத்நம் ஐயர், அருணாசலதேசிகர், மு. சண்முகம் பிள்ளை ஆகியோர்எழுகளிறுஎன்று கொண்டு உரை கண்டிருக்கின்றனர்.  சௌரிபெருமாள் அரங்கனார்எழுகளிறு   என்பதற்கு உரை கூறும் முகத்தான்எழுகின்ற களிறுஎன்றும், கலாநிலைய உரைகாரர் இராமரத்ந ஐயர்எழுகின்ற களிறுஎன்பதையே பாடமாகக் கொண்டுஆற்று நீராடி எழுந்த ஆண்யானைஎன்று உரை வரைந்துள்ளார்.  இத்தொடர் இடம்பெற்ற பாடல் பின்வருமாறு:

                கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
                என்னை இன்றியும் கழிவது கொல்லொ
                ஆற்றுஅயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
                எழுகளிறு மிதித்த ஒருபழம் போலக்
                குழையக் கொடியோர் நாவே
                காதலர் அகலக் கல்லென் றவ்வே.”                                      (குறுந்.24)

கரிய அடிமரத்தை உடைய வேப்ப மரத்தினது ¢ளியவான பூக்களாகிய புது வருவாயானது என்னுடைய தலைவன் இல்லாமலும் வந்தே செல்லுவதோ? கொடியோர்களாகிய அலர் தூற்றும் மகளிருடைய நாக்கள், என்னுடைய காதலர் என்னை விட்டு நீங்கிச் செல்லவும் ஆற்றின் அருகே கரைக்கண் முளைத்து வளர்ந்த வெண்ணிறமான கொம்புகளையுடைய அத்திமரத்தினது எழுந்து வருகின்ற ஆண்யானையின் காலால் மிதித்து உழக்கப்பெற்ற ஒற்றைப்பழம் குழைவது போலக் குழைந்து நான் வருந்தும்படி அலர் கூறிக் கல்லென்ற ஆரவாரத்துடன் முழங்கினஎன்பதாக இப்பாடலின் பொருளை மு. சண்முகம்பிள்ளை (பக்.28)இல் குறிப்பிட்டுள்ளார்.

              .வே. சாமிநாதையர்எழுகளிறுஎன்பதைஎழுகுளிறுஎன்கின்றார்.  குளிறு என்றால் நண்டு. எழு என்பதை ஏழு எனப் பொருள் கொண்டு ஏழு நண்டுகள் மிதிக்கப்பட்ட அத்திப்பழம் குழைவது போல, தலைவி வருந்தினள் என்பதாகப் பொருள் உணர்த்துகின்றார். மேலும், அவர் தம்முடைய விரிவுரையில்அத்திப்பழம் மென்மையுடையதாதலின் நண்டுகள் மிதில்லலாற் குழைவதாயிற்று; இங்ஙனம் குழைகின்ற பொருளுக்கு அத்திப் பழத்தை உவமை கூறுதல், “அதம்பழத்துருவுசெய்தா ரவளிவ ணல்லூ ராரே” (திருநா. தேவாரம்) என்பதனாலும் விளங்கும்.  ஒன்றுக்கு ஏழு கூறுவது மரபு.  இங்கே ஏழென்பது பலவென்பதைக் குறிக்க நின்றதொரு வாய்பாடு; ‘ஏழென்பது அதற்கு மேலாய மிக்க பன்மை குறித்து நின்றது, ஒருவர் கூறை யெழுவ ருடுத்தென்றாற் போல’ (குறள்.1269, பரிமேல்.); இவ்வாய்பாடுகளை அநந்தவாசி என்று கூறுவர் தக்கயாகப் பரணி யுரையாசிரியர்” (பக்.64) என்கின்றார்.

                இவ்வுரையாசிரியர்களின் கருத்துக்களை எல்லாம் உற்றுப் பார்க்கும் போது, ஒன்று தெளிவாகத் தெரிகிறது. .வே.சாமிநாதையர்குளிறுஎன்று பாடங்கொண்டு உரை வரைந்துள்ளார்.  ஏனையோர்களிறுஎன்று பாடங்கொண்டு உரை வரைந்துள்ளனர்.  இங்கு நமக்குத் தெளியவேண்டிய பாடம்களிறுஅல்லதுகுளிறுமற்றும்எழுஅல்லதுஏழு’.

                இங்குப் பாடத்தைத் தீர்மானம் செய்வதற்குச் சில நடைமுறைகளைச் சிந்திக்க வேண்டியதாகிறது. இரு வேறு உரைகளிலும் அத்திப்பழம் குழைவது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.  குழைதல் என்பதுகலங்குதல், வளைதல்என்றும்,  குழைத்தல் என்பதுஇளகுவித்தல், தளிர்த்தல்என்றும் நா. கதிரைவேற்பிள்ளை அவர்களின் தமிழ்மொழி அகராதி (பக்.502) குறிப்பிடுகிறது.  ஒன்று இன்னொன்றோடு நெகிழ்ந்து கலத்தலை இச்சொல் உணர்த்துகிறது எனலாம்.  யானை அத்திப்பழத்தை மிதிக்கின் பழம் குழையுமா? நசுங்குமா? என்று எண்ணிப் பார்க்கும் போது வலிமை கொண்ட யானை அத்திப் பழத்தை தன் காலால் மிதிபடும் போது மெருதுவாய் உள்ள அத்திப்பழமானது யானையின் பாதம் பட்ட இடத்தில் இருந்த இடம் தெரியாமலே போய்விடும்.  அதுவும் போர்க்குணம் கொண்ட ஆண்யானை மிதித்தல் என்று உரையாசிரியர்கள் குறிப்பிடுவதால் இக்கூற்று முற்றும் பொருந்துவதாகத் தெரியவில்லை.  அதனால் யானை மிதித்து மென்மையான அத்திப்பழம் குழைந்தது என்று ஏற்றுக்கொள்ள முடியாது.  மென்மையான அத்திப்பழத்தை  ஒன்றுக்கும் மேற்பட்ட நண்டுகள் கடற்கரையில் உருட்டிச் செல்லும் போது மென்மையான அத்திப்பழத்தின் உண்மை நிலையில் சற்று மாற்றம் ஏற்படும். இளகலாம், வளையலாம், தளிர்வடையலாம்.  ஆகவே, தமிழ்த்தாத்தா .வே.சாமிநாதையர் கொண்டகுளிறுஎன்ற பாடத்தை ஏற்றுக்கொள்வது பொருத்தம்.

                ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
                வருநாள்வைத் தேங்கு பவர்க்கு” (குறள்.1269)

என்னும் குறளுக்குப் பரிமேலழகர், “சேணிடைச் சென்ற தம்காதலர் மீண்டு வரக் குறித்த நாளை உட்கொண்டு அது வருந்துணையும் உயிர்தாங்கி வருந்தும் மகளிர்க்குஒருநாள் பலநாள் போல நெடிதாகக் காட்டும்.

                ஏழென்பது அதற்கு மேலாய மிக்க பன்மை குறித்து நின்றது, “ஒருவர் கூறை எழுவர் உடுத்துஎன்றாற்போல தலைமகள் வருத்தம் பிறர் மேலிட்டுக் கூறியவாறு.  இதனால் இதுவும் தலைமகள் கூற்றாகாமை யறிக.  இருநாளென்று பாடமோதுவாருமுளர்என்கின்றார்.  இங்குஎழுஎன்பதுஏழுஎன்று கொண்டால் ஏழு நண்டுகள் மென்மையான அத்திப்பழத்தை உருட்டிச் செல்லும் போது குழைந்தது என்று கொள்ள நேரிடுகிறது.

    இக்கூற்றைத் தலைவியின் நிலையில் வைத்துப் பார்க்கும் போது, தலைவன் பிரிவு நேர்ந்த வழி தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.  தலைவியின் உள்ளம் எத்தன்மையதாக இருக்கிறது என்பதை தலைவி கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.  தலைவனின் பிரிவை ஊரார் பலவாறாக ஏசுவதை கேட்ட தலைவி, தன்னுடைய மனம் எவ்வாறு இருக்கிறது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. ஆண்யானையின் காலால் மிதிப்பட்ட பழம் எவ்வாறு ஆகியிருக்குமோ அவ்வாறு நான் இருக்கிறேன் என்று பொருள் கொண்டால் யானையால் மிதிபட்டிருந்தாள் அவள் உயிருடன் இருந்திருக்கமாட்டாள். அவள் இச்செய்தியைக் கூறுவதற்கும் வழியில்லை.  எனவே, ஏழு நண்டுகள் மென்மையான அத்திப்பழத்தை உருட்டிச் செல்லும் போது வளைந்து நெகிழ்வதைப் போல மென்மை மனம் கொண்ட தலைவியின் உள்ளம் ஊரார் ஏசும் போது வளைந்து நெகிழ்வதை உணர்த்துவதாகக் கொள்ளவேண்டும்.  எனவே, எழுகுளிறு, ஏழுகுளிறு என்கின்ற பாடமே முற்றிலும் சரி.

          இவ்வாறாக குறுந்தொகை முல்லைத்திணைப் பாடல்களில் காணப்படக் கூடிய பாடவேறுபாடுகளை வாழ்க்கையின் உண்மைத் தன்மையோடு ஒப்பிட்டு ஆராய்ந்தால் பாட மீட்டுருவாக்கம் செய்யலாம்.  இப்பணி தொடர் பணியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக